தொடர்பாளர்கள்

Saturday, October 24, 2009

"கேப்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பாருக்குப் புத்தி எங்கே போச்சு! "


தமிழக அரசை நோக்கி மலேசிய எழுத்தாளரின் மற்றுமொரு கேள்வி!

மலேசியாவின் புகழ்பெற்ற வரலாற்றுப் புதின எழுத்தாளர்
பெரியவர் அ. அரங்கசாமி









அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றோ
செல்வத்தைத் தேய்க்கும் படை.

இதைச் சொல்பவன் யார்? பொய்யா மொழிப் புலவன். அவனின் வாக்கு ஒரு போதும் பொய்க்காது.

பெருங்கடலாய்ப் பெருகிக் கொண்டிருக்கும் இக்கண்ணீர்ப்படை ஆழிப்பேரலையாய் எழுந்து சிங்களக் கொடுங்கோல் அரசை மட்டுமல்ல அதற்குத் துணை போன அத்தனை நாடுகளையும் விழுங்கி அழித்தொழிக்கும்.

ஈழத்தில் மட்டுமல்ல இலங்கை எங்குமே எங்களின் தமிழ்க்கொடி பறக்கும்! அங்கே ஐ.நா அரங்கத்திலும் நம் கொடி அசைந்தாடும்! அந்நாளே நமக்கு நன்னாள்!



"கேப்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பாருக்குப் புத்தி எங்கே போச்சு! " என்பது ஒரு பழமொழி. நடவாத நடக்க இயலாத ஒரு செயலை நடந்ததாக எடுத்துக்கட்டி , பொய் சொல்வது என்பதுதான் இதன்பொருள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இதனை இன்று நடைமுறைப் படுத்திக்கொண்டு இருப்பவர் மாண்புமிகு தமிழக முதல்வர் கருணாநிதி என்பதை,உலகமே பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது.

"இன்னும் இரண்டு வாரத்தில் இலங்கை அகதி முகாமுக்குள் அடைபட்டுக்கிடக்கும் அனைத்துத் தமிழர்களும் விடுவிக்கப்பட்டு, தங்களின் சொந்தக் கிரமங்களுக்குத்திரும்பி விடுவர். அதற்கான பணிகள் அத்தனையும் செய்து முடித்து விட்டேன் என்று அறிக்கை விடுகின்றார் தமிழக முதல்வர்.

தமிழக முதல்வரையும் பின்னுக்குத் தள்ளி ஒருபடி மேலே நின்று, "தமிழக முதல்வரின் தூதுவர்களில் ஒருவனாக , இலங்கைக்குச்சென்றபோதே, ஆயிரத்து ஐநூறு பேரை விடுவித்து, அவர்களை, அவர்களின் சொந்த வீட்டுக்கு அனுப்பி விட்டுத்தான் வந்துள்ளேன்." என்று முழு பூசனிக்காயைச் சோற்றுக்குள் மறைத்திருக்கிறார் - அதிபர் ராசபக்சேயின் புதிய தம்பி விபீடணன் தொல் திருமாவளவன் அவர்கள்.

இத்தலைவர்களின் இக்கூற்றுக்கு ஈழத்தமிழர்களோ தமிழகத்தமிழர்களோ மறுப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் கன்னத்தில் அறைந்தார் போன்று சிங்கள முக்கிய அமைச்சர் ஒருவரும் அதிபர் ராசப்பக்சேயும் பதில் அளித்திருக்கின்றனர். எப்படி?

"முகாமுக்குள் அடைப்பட்டுக் கிடக்கும் தமிழ் அகதிகளுக்கு விடுதலையா? அது கனவில் கூட நினைத்துப்பர்க்க முடியாத ஒரு செய்தி! " என்று சிரித்து ஏளனம் செய்திருக்கின்றார் இலங்கை அதிபர் ராசபக்சே!

"முகாமில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் விரைவில் விடுதலையாகப் போகின்றனர் என்ற செய்தியைப் பத்திரிகைகளில் பார்த்துதான் தெரிந்துக்கொண்டேன், மற்றபடி இதுப்பற்றி எங்கள் அமைச்சர் அவைக்கு எதுவுமே தெரியாது " என்று சொல்கின்றார் சிங்கள அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர்.

ஆனால் தமிழக முதல்வரும் , அவர் தூது அனுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் , "இதோ கேப்பையில் நெய் வடிகின்றது ! நெய் வடிகின்றது ! பாருங்கள் ! பாருங்கள்! "என்று தமிழக மக்களுக்கு 'பியாசு கோப்' படம் காட்டி மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர் !

தமிழக முதல்வரின் தூதுக்குழு இலங்கைக்குச் சென்றதனால், முகாம், ஏதிலிகள் (அகதிகள்) அடைந்த ஒரே நன்மை தூதுக்குழுவுக்கு நேர்காணல் அளித்த பலர் காணாமல் போனதுதான். (ஏன் எப்படி )

இதனால்தான் என்னவோ ஈழநாட்டுத் தமிழ் இதழ் ஒன்று இலங்கைக்குச் சென்ற தூதுக்குழுவுக்குச் தலைமைஏற்றுச்சென்ற , தி .ஆர் . பாலுவை " சனீசுவரன் வந்திருக்கிறார் " என்று பாராட்டி இருக்கின்றது !

புறநானூறு கண்ட தமிழக முதல்வர் நடுவண் அரசில் உறுப்பியம் வகிக்கும் நாற்பது தி.மு.க உறுப்பினர்களயும் பதவி துறக்கச் செய்து காங்கிரசு ஆட்சியைக் கவிழ்த்து என் அருமை ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுவேன் என்று அனைத்துக் கட்சிகளின் அவையில் முழங்கி கைத்தட்டல் பெற்றார்.

இந்த வாக்குறுதி என்ன ஆயிற்று? ஒரு காலத்தில் தெற்கு தேய்கிறது வடக்கு வாழ்கிறது என்று வடவரை வசைபாடிய வாய் இன்று சோனியா காந்தியை நாவினிக்க வாழ்த்துவது ஏன்?

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த தமிழ்நெஞ்சன் தமிழ் வெறியன் தமிழ்த்தொண்டன் அல்ல இன்றைய கருணாநிதி அவர்கள். இன்று தமிழகத்தின் பேரரசர். உலகக் கோடீசுவரர்களின் வரிசையில் இடம் பிடுத்துக் கொண்டவர். தேர்தலில் வெற்றி பெற்ற அருமை மகன் அழகிரிக்கு எழுபது பொன் தங்கமாலை அணிவித்துப் பெருமை பெற்றவர்.

இந்தக் குபேர வாழ்க்கயைக் காப்பாற்றிக் கொள்ளவே இந்தத் தமிழ் இமையம் இன்று வடவரின் காலடியில் வீழ்ந்து கிடக்கின்றது.

சுண்டைக்காய் நாடு இலங்கை அதன் கடற்படை இந்தியக் குடிமக்களான தமிழக மீனவர்களை அன்றாடம் அழித்துக் கொண்டிருக்கின்றது. அந்த ஏழை மீனவர்களின் அழுகுரல் தமிழக முதல்வரின் காதுகளில் விழ வில்லையே! அந்த ஏழைகளுக்காக கருணா நிதியின் கண்கள் கலங்கவில்லையே!

இரத்தத்தின் இரத்தமாம் ஈழத்துத் தமிழ்மக்களைக் காப்பாற்றக் கோரி தன்னையே எரித்துக் கொண்ட மறவர் குல மாணிக்கம் தங்கமகன் முத்துக்குமாரின் தியாகம் கூட கலைஞரின் நெஞ்சைத் தொடவில்லையே ஏன்?

ஏனெனில்,தமிழக முதல்வர் இன்று ஒரு மேட்டுக்குட்டி ! ஏழைகளுக்காக இரங்குவதும் கண்ணீர் வடிப்பதும் கேவலம் என்பது மேட்டுக் குடியினரின் மரபு !

ஒரு வல்லரசு நாட்டின் குடிமகன் ஒருவனுக்கு வெளிநாட்டில் துன்பம் விளைந்தால் - அந்த வல்லரசு பொங்கி எழுகின்றது சம்பந்தப்பட்ட நாட்டிடம் காரணம் கோருகின்றது - கண்டனம் செய்கின்றது . எச்சரிக்கை விடுக்கின்றது .

1983 - கொழும்பு இனக்கலவரத்தில் தமிழினம் அழிக்கப்பட்டபோது, அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையர் அவர்கள், இலங்கை அதிபர் சயவர்த்தானாவை இந்த முறையில் தான் மிரட்டி பணியவைதார். வல்லாண்மை மிக்க ஒரு வல்லரசின் செயல்பாடு இப்படிதான் இருக்க வேண்டும்.

ஆனால், தமிழக மீனவர்கள் நிலையில் இன்றைய இந்திய செயல் பாடு எப்படி இருக்கின்றது என்பதை மானமுள்ளஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும் .

சோனியா காந்தியையும் சிங்கள அரசையும் மகிழ்ச்சி படுத்துவதற்காகவே தமிழர்களுக்கு எதிரான் அனைத்தையும் செய்துக்கொண்டிருக்கின்றது இன்றைய இந்திய அரசு. தமிழக தி. மு .க. கூட்டணி அரசும். தங்களின் நல்வாழ்விற்காக நடுவண் அரசுக்குத் துணை போவதோடு சிங்கள அரசையும் வாழ்த்திகொண்டிருக்கின்றது.

அந்த முறையில்தான் இலங்கை சென்ற தமிழக முதல்வரின் தூதுக்குழுவினர் தமிழினத்தின் முதன்மை பகைவன், கொலைஞனான நவீன இட்லர் ராசபக்சேக்குமாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி, அதிபர் அளித்த விருந்தினை உண்டதோடு அவனுடன் கொஞ்சிக் குலாவி நகைச்சுவை ததும்ப உரையாடி மகிழ்ந்து ஆனந்தராகம் பாடி வந்திருக்கின்றனர் என்றால் இவர்கள் தமிழர்களா?

1948 இல் விடுதலை அடந்து ஆட்சி அதிகாரம் சிங்களர்களின் கையில் கிடைத்ததிலிருந்து சிங்கள அரசு அனைத்து வகையிலும் தமிழினத்தை அழித்துக் கொண்டேதான் இருக்கின்றது.

இந்த அழிவிலிருந்து தப்பிப் பிழைப்பதற்காகத்தான் ஈழமக்கள் உடுத்திய துணியுடன் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். புலம்பெயர்ந்த மக்களின் சொத்துகள் அனைத்தையும் சிங்கள மக்களுக்கு வாரி வழங்கியது சிங்கள் அரசு.

தமிழ் சிற்றூர்கள் சிங்களச் சேரிகளாக மாற்றப் பட்டன. பள்ளி கோயில் வளாகங்கள் சிங்களப் படையின் பாசறைகளாயின. காரணமின்றி தமிழ் இளைஞர்கள் தளை செய்யப்பட்டு (கைது) உசாவல் என்ற போர்வையில் சிறைக்குள் ஆயிரம் ஆயிரமாய் கொன்று குவிக்கப் படுகின்றனர். உலகமே கண்டிராத அளவு சிங்கள வெறிப்படை தமிழ்ப் பெண்களைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிக் கொன்று குவித்து அவர்களின் உடலை அம்மணப் படுத்தி வீதியில் கிடத்திக் கண்காட்சி நடத்தியிருக்கின்றது.

முகாமுக்குள் ஏதிலிகளாய் வாடிக் கிடக்கின்ற இளைஞர்களையும் இளம் பெண்களையும் கூட சிங்களக் காடையர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களை அனைத்துக் கொடுமைகளுக்கும் ஆளாக்கி, அம்மணப் படுத்தி கைகளைக் கட்டி குருவிகளைச் சுடுவது போன்று இன்றும் சுட்டுக் குவித்துக் கொண்டிருக்கின்றது சிங்களப் பேய்ப் படை.

சிங்கள அரசு செய்கின்ற இக்கொடுமைகள் அனைத்தையும் ஆய்ந்து அறிந்து. உண்மையைத் தெரிந்து கொண்ட ஓர் அமெரிக்கப் பெண்மணி கண்ணீர் விடுகின்றார். "இராசபக்சேயின் அரசை உலக நீதிமன்றத்தில் நீறுத்தி தண்டிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுகின்றார் அக்கண்மணி. யார் இவர்? தமிழினத்துக்குத் தொடர்பே இல்லாத ஒரு வேற்று நாட்டுப் பெண்.

செய்யாத குற்றத்துக்காக தமது தாலியைப் பறித்துவிட்டான் பாண்டிய மன்னன் என்பதற்காக அவனையும் அவனின் நகரையும் அழித்தாள் அன்றைய தமிழச்சி கண்ணகி. அந்தக் கண்ணகி பிறந்த மண்ணில் பிறந்த இன்றைய தமிழச்சி கனிமொழி இலக்கக் கணக்கானத் தமிழச்சிகளின் தாலிகளைப் பறித்திட்ட கயவன் இராசப்பக்சேயின் விருந்தினராகச் சென்று திரும்பி இருக்கின்றார். தமிழ்க் குலப் பெண்களே சொல்லுங்கள் இவர் தமிழச்சியா?

ஈராயிரத்து ஒன்பது மே திங்கள் பதினெட்டாம் நாள் தமிழ்க் குலத்துக்கு ஒரு கரு நாள். இந்தியப் படையும் சிங்களப் படையும் இணைந்து நின்று ஒரே நாளில் ஈழமண்ணில் ஐம்பதாயிரம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து இட்லரையும் வென்ற நாள் அது.

வெள்ளைக் கொடி ஏந்தி சென்ற வீரமறவன் நடேசனையும் அவரது குழுவினரையும் பொதுமக்களையும் கொஞ்சமும் இரக்கமின்றி சுட்டுத் தள்ளி பேயாட்டம் ஆடி நின்றதும் அந்த நாளில்தான்.

இத்தகையத் தமிழினப் படுகொலை நடந்தேறிய பிறகும் நவீன இட்லர் இராசபக்சேயிடம் ஒரு தமிழன் கை குலுக்கி உறவாட நினைக்கிறான் என்றால் அவன் தமிழனே அல்ல!

புலிகளை விட்டுப் பிரிந்து வாருங்கள் உங்களை வாழவைக்கிறோம் என்று வெற்று வாக்குறுதி அளித்த உலக ம்காப் பொய்யன் இராசபக்சேயின் பேச்சை நம்பி ஏமாந்து இன்று முகாம்களில் நிரந்தர நரகத்தில் உழன்று கொண்டிருக்கின்ற மக்களை சிங்கள அரசு ஒரு போதும் உயிரோடு விடுதலை செய்யப் போவதே இல்லை. அவர்கள் அனைவரையுமே புலிகள் என்று முத்திரைக் குத்தி வைத்திருக்கின்றது சிங்கள அரசு. எனவே அம்மக்கள் அனைவரையும் சாகடிப்பது என்பதுதான் சிங்கள் அரசின் முடிந்த முடிபு. இந்த உண்மையைத்தான் முகாமில் உள்ள மக்களை விடுவிப்பது என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு செயல் என்று சொல்லாமல் சொல்லி இருக்கின்றார் அதிபர் இராசபக்சே!

ஆக முகாம்களில் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கும் நம் இரத்தத்தின் இரத்தங்களை விடுவிக்கின்ற பொறுப்பு உலகத் தமிழர்களின் கைகளில் தான் இருக்கின்றது என்பதை உண்மைத் தமிழன் ஒவ்வொருவரும் உள்ளத்தில் பதித்துக் கொள்ளல் வேண்டும்.

கிழக்கே உதிக்கின்ற கதிரவன் ஒருகால் மேற்கே உதிப்பினும் உதிக்கலாம். ஆனால் சிங்களப் பேரினவாத அரசு தமிழினத்துக்குச் சம உரிமை வழங்கி அவர்களை வாழவைக்கும் என்ற பேச்சுக்கே இனி இடம் இல்லை. இதுதான் உண்மை! உண்மை! உண்மை!

மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு வாழ்ந்த இனம் தமிழினம். அந்த மானம் காக்கப்படல் வேண்டும். வீடணப் புத்தி கொண்ட தமிழ் இரண்டகர்களைக் கண்டு அஞ்சித் தளர்ந்து விடக் கூடாது தமிழினம்.

'வலியோர் சிலர் எளியோர் தமை
வதையே புரிகுவதா?
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா!
கொலை வாளினை எடடா! மிகு
கொடியோர் செயல் அறவே!'

தமிழ்மறவன் தன்மானப் புலவன் பாரதிதாசன் நம்மைத் தட்டி எழுப்புகின்றான்! உலகத் தமிழின மறவர்களே! திண் தோள் தட்டி எழுவீர் ! எழுவீ ர்!

"இனி இது பொறுப்பது இல்லை - தம்பி !
எரி தழல் கொண்டு வா!
கதிரை வைத்திழந்தான் - அண்ணன்
கையை எரித்திடுவோம்!

என்று தருமனின் இளையோன் வீமன் பொங்கி எழுந்தமை போன்று பொங்கி எழுந்து விட்டனர் மறத்தமிழர் .

பேரினவாத சிங்கள அரசை அழிப்பதற்கு இனிக் கொத்துக் குண்டுகள் கூடத் தேவையில்லை. அல்லல்பட்டு ஆற்றாது அழுகின்ற இலக்கக் கணக்கான ஈழத்தமிழர்களின் கண்ணீர்ப் படையே அதை அழித்து விடும்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றோ
செல்வத்தைத் தேய்க்கும் படை.

இதைச் சொல்பவன் யார்? பொய்யா மொழிப் புலவன். அவனின் வாக்கு ஒரு போதும் பொய்க்காது.

பெருங்கடலாய்ப் பெருகிக் கொண்டிருக்கும் இக்கண்ணீர்ப்படை ஆழிப்பேரலையாய் எழுந்து சிங்களக் கொடுங்கோல் அரசை மட்டுமல்ல அதற்குத் துணை போன அத்தனை நாடுகளையும் விழுங்கி அழித்தொழிக்கும்.

ஈழத்தில் மட்டுமல்ல இலங்கை எங்குமே எங்களின் தமிழ்க்கொடி பறக்கும்! அங்கே ஐ.நா அரங்கத்திலும் நம் கொடி அசைந்தாடும்! அந்நாளே நமக்கு நன்னாள்!


எழுந்தது மறவர் படை!
மலர்ந்தது தமிழ் ஈழம்!

வாழ்க! வளர்க! தமிழன் வீரம்!




தொடரும்

No comments:

Post a Comment