தொடர்பாளர்கள்

Sunday, November 18, 2012

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை மலேசியா புறக்கணிக்கவேண்டும்

தமிழர்களின் நீதிக்காக அடுத்த ஆண்டு இறுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வேண்டும் என்று சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம் கேட்டுக்கொண்டார்.
இலங்கையில் 2009-ஆம் ஆண்டு இடம் பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது நான்கு இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை நவம்பர் 14-இல் வெளியான ஐக்கிய நாட்டு மன்றத்தின் இரகசிய அறிக்கை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு சானல் 4 என்ற தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் ஐக்கிய நாட்டு  சபையின் நிபுணத்துவ அறிக்கை போன்றவை இந்த குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மீது சுமத்தியிருந்தன; ஆனால் அவற்றை உலக நாடுகள் வெகுவாக பொருட்படுத்தவில்லை.
இலங்கையின் இறுதிக் கட்டப் போரின்போது தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா மன்றம் தவறியது குறித்த 124 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் கடந்த புதன் கிழமை வெளியிட்டார். இது ஐ.நாவின் செயற்பாடுகள் மீதான ஐ.நா பொதுச் செயலாளரின் உள்ளக மீளாய்வு குழுவின் அறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
இது சார்பாக மேலும் விவரித்த வழக்கறிஞருமான கா. ஆறுமுகம்; “போர் வலயத்தில் சிக்குண்ட தமிழர்களை பாதுகாக்க ஐ.நா உயர்மட்ட அதிகாரிகள் தலையிடவில்லை; அத்தோடு இலங்கை அரசினால் மிகமோசமாக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்த தகவல்களையும் ஐ.நா வெளியிடவில்லை. காரணம்,  இலங்கை அரசாங்கத்திற்குப் பயந்து இவ்வாறான தகவல்களை ஐ.நா அதிகாரிகள் வெளியிடவில்லை என்கிறது அவ்வறிக்கை” என்கிறார்.
“ஐ.நா தமிழர்களை கைவிட்டது ஒரு புறமிருக்க, நீதி நியாயம் கோரும் வகையில் மலேசியர்கள் செயல்பட வெண்டும். காமன்வெல்த் மாநாடு இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்கா, பிஜி, பாகிஸ்தான், ஜிம்பாபே போன்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தனது பங்கை ஆக்ககரமாக செய்துள்ளது. ஆனால், 54 நாடுகள் உறுப்பியம் பெற்றுள்ள காமன்வெல்த் தனது அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்த எடுத்த முடிவு இரத்தக்கறை படிந்த இலங்கையை அரவணைப்பதாக தோன்றுகிறது. அதில் மலேசியா கலந்து கொண்டால் அதனால் நமது நாட்டிற்கு கலங்கம்தான் உண்டாகும், அதோடு அது நமது நாட்டு மக்களை அவமதிப்பதகவும் அமையும்.
அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வேண்டும் என்பதே சுமார் 18 லட்சம் தமிழர்கள் வாழும் மலேசிய மக்களின் எதிர்பார்பாக இருக்கும் என்கிறார் கா. ஆறுமுகம்.

ந ன் றி  செம் ப ரு த் தி 

Thursday, November 15, 2012


மிண்டானோ தீர்வுக்கு வித்திட்ட மலேசியா, ஈழத் தமிழர் விடுதலைக்கு உதவ வேண்டும்

 
-கா. ஆறுமுகம், தலைவர், சுவராம் மனித உரிமைக் கழகம், 

பிலிப்பைன்ஸ் மிண்டானோவிலுள்ள பெரிய முஸ்லிம் போராளிக் குழுவான மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியும் அந்நாட்டு அரசாங்கமும்  சமாதான திட்ட கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கடந்த  15.10.2012  கையெழுத்திட்டன.
மணிலாவிலுள்ள அதிபர் மாளிகையில் பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ அகுய்னோ மற்றும் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியின் தலைவர் முராட் ஏபிராஹிம் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த நிகழ்வில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கும் கலந்து கொண்டார். இது ஒரு வரலாற்று மைல் கல்லாகும்.
1960 ஆண்டு முதல் தன்னாட்சி உரிமை கோரி தென் பிலிப்பைன்ஸ்சில் போரடிவரும் பங்சா மோரோ மக்களுக்கு இதன் வழி ஒரு தீர்வு பிறந்துள்ளது.
தேசிய சிந்தனை சித்தாந்தத்தின் வழி அரசியல் விடுதலை கோரும் அடக்கப்பட்டும் அடிமைப்படுத்தப்பட்டும் வாழ்கின்ற  மக்களுக்கு இன்றுள்ள அரசியல் சூழலில் இந்தத் தீர்வு மனித உரிமை போரட்டத்திற்கு கிடைத்த பெரிய வெற்றியாகும்.
இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை கலைவதற்கு 2009-இல் இலங்கை அரசு இராணுவத்தைப் பயன்படுத்தியது. அதுதான் வழிமுறை என்ற அடிப்படையில் அதன் இராஜதந்திரிகள் உலகைப் பவணி வந்தனர். அதே ஆண்டில் ஐக்கிய நாட்டு மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசு தாக்கல் மசோதாவை ஆதரித்த நாடுகளில் மலேசியாவும் அடங்கும். ஓராண்டுக்குப் பிறகு வெளியான தகவல்கள் இலங்கை மேற்கொண்ட இன ஒழிப்பையும் போர்க் குற்றங்களையும் அம்பலப்படுத்தின. இவை பிரிட்டன் சேனல் 4 தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகின. அத்துடன் ஐக்கிய நாட்டுச் சபையின்  பொதுச் செயலாளர் பன் கீ முன் அமைத்த நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் இன ஒழிப்பையும் போர்க் குற்றங்களையும் மேலும் உறுதிப்படுத்தின.
உண்மையானத் தகவல்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த நாடுகள் தங்களின் நிலைப்பாட்டினை மறு ஆய்வு செய்தன. அவ்வகையில் 2012 இல் ஐக்கிய நாட்டு மனித உரிமை ஆணையத்தில் இலங்கை மீதான தீர்மானத்தில் மலேசியா நடுநிலைமை வகித்தது.
கிட்டத்தட்ட 120,000 உயிர்களைப் பறித்த 40 ஆண்டுகளுக்கு மேலான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பங்சா மோரோ மக்களின் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியுடனான பேச்சுவார்த்தை முன்னேற்றத்திற்கு மலேசியா மாபெரும் பங்காற்றி உள்ளது.
தென் ஆசியாவின் மிக மோசமான மனித உரிமை அத்துமீறல்கள் வழி இலங்கை அரசு தமிழர்கள் மீது மேற்கொண்ட இராணுவப் போர் அமைதிக்கு வித்திடும் என்பது ஒரு மாயை. அந்தப் போருக்குப்பின் அமைதிக்கான வழிமுறைகளை காணும் பணியில், நான் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியின் தலைவர் முராட் ஏபிராஹிம்வுடன் உரையாடுகையில் அவரது கருத்தும் அவ்வகையில்தான் அமைந்திருந்தது.
பங்சா மோரோ மக்களுக்கு மலேசியா ஆற்றிய பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்ததை உலகமே பாராட்டியுள்ளது. பல்லின மக்கள் வாழும் மலேசியா இவ்விதச் செயலின்வழி தனது வெளியுறவு கொள்கையில் கொண்டுள்ள மாற்றத்தை பகிரங்கமாக வெளிக்காட்டியுள்ளது. இது தேசிய சிந்தனையின் வழி அரசியல் விடுதலை கோரும் மனித உரிமைக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மலேசியா வட்டார அளவில் அமைதி நிலவ மேற்கொண்ட மிகச் சிறந்த நடவடிக்கையாக இது அமைகிறது.
மலேசியாவின் பங்கு வட்டார அமைதிக்கு மட்டுமில்லாமல் உலக அமைதிக்கும் முக்கியம் என்ற வகையில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் பெர்டான அறவாரியம் போர்க் குற்ற ஆணையம் ஒன்றின்வழி செயல்படுவதை இங்கே குறிப்பிட வேண்டும்.
மலேசியா தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக ஈழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்குத் தீர்வு காண தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இது தேசிய சிந்தனையுடன் அரசியல் விடுதலைக்காக போரடும் மக்களுக்காக மலேசியா தன்னை ஈடுபடுத்தி வருவதை மதிக்கும், வரவேற்கும் மலேசியர்களின் இயல்பான எதிர்ப்பார்ப்பாகும்.