தொடர்பாளர்கள்

Thursday, December 13, 2012


தலைநகரில் மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் ஏற்பாட்டில் தமிழ் நெறி மாணவர்  பண்பாளர் விழா 2012

மலேசியத்
தமிழ் நெறிக் கழகத்தின் ஏற்பாட்டில் தமிழ் நெறி மாணவர்  பண்பாளர் விழா 2012 எதிர்வரும் 22.12.2012 ஆம் நாள் காரிக் கிழமை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பிரிக்பீல் விவேகானந்தர் தமிழ்ப் பள்ளி கந்தையா மண்டபத்தில் 8  மணி தொடங்கி மாலை 7 மணி வரை மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெறவுள்ளது. நாடு தழுவிய அளவில் இயக்க மாணவர்களும் குடும்பங்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிப்பர் . இவ்விழா இம்முறை 14 ஆவது ஆண்டாக நிகழ்த்தப் படுவது  குறிப்பிடத்தக்கது.

 தமிழ், தமிழர், தமிழீழம், தமிழ் தேசியம் தொடர்பான பல்வேறு படைப்புகளை இயக்க மாணவர்கள்  திறம்பட படைக்க உள்ளனர்சிறந்த தமிழிய தலைமுறையை உருவாக்கும் நோக்கிலும் தமிழிய உணர்வுடைய இளைய தலைமுறையையும் குடும்பங்களையும் ஒருங்கிணைக்கவும் கட்டமைக்கவும் இவ்விழா கடந்த பதினான்கு ஆண்டுகளாக எழுச்சியுடன் கொண்டாடப் பட்டு வருகின்றது. இவ்விழாவில் கலந்துகொள்ளும் மாணவர்கள் அனைவரும் தூய தமிழ்ப் பெயர் தாங்கியவர்களாக  இருப்பர் .

 மாணவர்களின் தமிழ் சார்ந்த எழுச்சி நடனங்களும் , எழுச்சி நாடகங்களும் இவ்விழாவில் இடம்பெறவுள்ளன . வண்ணம்   தீட்டும் போட்டி , தட்டி, சுவரொட்டி வரையும் போட்டி, திரட்டேடு அணியம் செய்யும் போட்டி கணினி ஒளிகீற்று விளக்கப் போட்டி முதலான பல்வேறு தமிழிய போட்டிகள் இவ்விழாவில் நிகழ்வுறவுள்ளன. முன்பதாகவே பதிவு செய்து விட்ட இயக்க திருக்குறள் வகுப்பு  மாணவர்கள் மட்டுமே இப்போட்டிகளில் பங்குபெற ஒப்புதல் அளிக்கப்படுவர்.

தொழில்முனைவர் வெள்ளையப்பன் அவர்களால் தொடக்கி வைக்கப் படும் இவ்விழாவினை குமுகாயச் சுடர் டத்தோ அசி தசுலிம் அவர்கள் நிறைவு செய்து வைப்பார்கள். விழாவில் பல்வேறு தமிழிய நூல்களும், ஒலி , ஒளி  குறுவட்டுகளும் விற்பனைக்கு வைக்கப் படும். தமிழிய  உணர்வாளர்களும் தேசிய அளவிலான இயக்க உறுப்பினர்களும்  இவ்விழாவில் கலந்து சிறப்பிக்க அழைக்கப் படுகின்றார்கள்.

தொடர்புக்கு : கனல்வீரன் தேசிய பொதுச் செயலர் : 0122466263 தேசிய பொருளர் மு.தமிழ்வாணன்  0164171441

Sunday, November 18, 2012

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை மலேசியா புறக்கணிக்கவேண்டும்

தமிழர்களின் நீதிக்காக அடுத்த ஆண்டு இறுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வேண்டும் என்று சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம் கேட்டுக்கொண்டார்.
இலங்கையில் 2009-ஆம் ஆண்டு இடம் பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது நான்கு இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை நவம்பர் 14-இல் வெளியான ஐக்கிய நாட்டு மன்றத்தின் இரகசிய அறிக்கை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு சானல் 4 என்ற தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் ஐக்கிய நாட்டு  சபையின் நிபுணத்துவ அறிக்கை போன்றவை இந்த குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மீது சுமத்தியிருந்தன; ஆனால் அவற்றை உலக நாடுகள் வெகுவாக பொருட்படுத்தவில்லை.
இலங்கையின் இறுதிக் கட்டப் போரின்போது தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா மன்றம் தவறியது குறித்த 124 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் கடந்த புதன் கிழமை வெளியிட்டார். இது ஐ.நாவின் செயற்பாடுகள் மீதான ஐ.நா பொதுச் செயலாளரின் உள்ளக மீளாய்வு குழுவின் அறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
இது சார்பாக மேலும் விவரித்த வழக்கறிஞருமான கா. ஆறுமுகம்; “போர் வலயத்தில் சிக்குண்ட தமிழர்களை பாதுகாக்க ஐ.நா உயர்மட்ட அதிகாரிகள் தலையிடவில்லை; அத்தோடு இலங்கை அரசினால் மிகமோசமாக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்த தகவல்களையும் ஐ.நா வெளியிடவில்லை. காரணம்,  இலங்கை அரசாங்கத்திற்குப் பயந்து இவ்வாறான தகவல்களை ஐ.நா அதிகாரிகள் வெளியிடவில்லை என்கிறது அவ்வறிக்கை” என்கிறார்.
“ஐ.நா தமிழர்களை கைவிட்டது ஒரு புறமிருக்க, நீதி நியாயம் கோரும் வகையில் மலேசியர்கள் செயல்பட வெண்டும். காமன்வெல்த் மாநாடு இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்கா, பிஜி, பாகிஸ்தான், ஜிம்பாபே போன்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தனது பங்கை ஆக்ககரமாக செய்துள்ளது. ஆனால், 54 நாடுகள் உறுப்பியம் பெற்றுள்ள காமன்வெல்த் தனது அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்த எடுத்த முடிவு இரத்தக்கறை படிந்த இலங்கையை அரவணைப்பதாக தோன்றுகிறது. அதில் மலேசியா கலந்து கொண்டால் அதனால் நமது நாட்டிற்கு கலங்கம்தான் உண்டாகும், அதோடு அது நமது நாட்டு மக்களை அவமதிப்பதகவும் அமையும்.
அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வேண்டும் என்பதே சுமார் 18 லட்சம் தமிழர்கள் வாழும் மலேசிய மக்களின் எதிர்பார்பாக இருக்கும் என்கிறார் கா. ஆறுமுகம்.

ந ன் றி  செம் ப ரு த் தி 

Thursday, November 15, 2012


மிண்டானோ தீர்வுக்கு வித்திட்ட மலேசியா, ஈழத் தமிழர் விடுதலைக்கு உதவ வேண்டும்

 
-கா. ஆறுமுகம், தலைவர், சுவராம் மனித உரிமைக் கழகம், 

பிலிப்பைன்ஸ் மிண்டானோவிலுள்ள பெரிய முஸ்லிம் போராளிக் குழுவான மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியும் அந்நாட்டு அரசாங்கமும்  சமாதான திட்ட கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கடந்த  15.10.2012  கையெழுத்திட்டன.
மணிலாவிலுள்ள அதிபர் மாளிகையில் பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ அகுய்னோ மற்றும் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியின் தலைவர் முராட் ஏபிராஹிம் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த நிகழ்வில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கும் கலந்து கொண்டார். இது ஒரு வரலாற்று மைல் கல்லாகும்.
1960 ஆண்டு முதல் தன்னாட்சி உரிமை கோரி தென் பிலிப்பைன்ஸ்சில் போரடிவரும் பங்சா மோரோ மக்களுக்கு இதன் வழி ஒரு தீர்வு பிறந்துள்ளது.
தேசிய சிந்தனை சித்தாந்தத்தின் வழி அரசியல் விடுதலை கோரும் அடக்கப்பட்டும் அடிமைப்படுத்தப்பட்டும் வாழ்கின்ற  மக்களுக்கு இன்றுள்ள அரசியல் சூழலில் இந்தத் தீர்வு மனித உரிமை போரட்டத்திற்கு கிடைத்த பெரிய வெற்றியாகும்.
இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை கலைவதற்கு 2009-இல் இலங்கை அரசு இராணுவத்தைப் பயன்படுத்தியது. அதுதான் வழிமுறை என்ற அடிப்படையில் அதன் இராஜதந்திரிகள் உலகைப் பவணி வந்தனர். அதே ஆண்டில் ஐக்கிய நாட்டு மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசு தாக்கல் மசோதாவை ஆதரித்த நாடுகளில் மலேசியாவும் அடங்கும். ஓராண்டுக்குப் பிறகு வெளியான தகவல்கள் இலங்கை மேற்கொண்ட இன ஒழிப்பையும் போர்க் குற்றங்களையும் அம்பலப்படுத்தின. இவை பிரிட்டன் சேனல் 4 தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகின. அத்துடன் ஐக்கிய நாட்டுச் சபையின்  பொதுச் செயலாளர் பன் கீ முன் அமைத்த நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் இன ஒழிப்பையும் போர்க் குற்றங்களையும் மேலும் உறுதிப்படுத்தின.
உண்மையானத் தகவல்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த நாடுகள் தங்களின் நிலைப்பாட்டினை மறு ஆய்வு செய்தன. அவ்வகையில் 2012 இல் ஐக்கிய நாட்டு மனித உரிமை ஆணையத்தில் இலங்கை மீதான தீர்மானத்தில் மலேசியா நடுநிலைமை வகித்தது.
கிட்டத்தட்ட 120,000 உயிர்களைப் பறித்த 40 ஆண்டுகளுக்கு மேலான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பங்சா மோரோ மக்களின் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியுடனான பேச்சுவார்த்தை முன்னேற்றத்திற்கு மலேசியா மாபெரும் பங்காற்றி உள்ளது.
தென் ஆசியாவின் மிக மோசமான மனித உரிமை அத்துமீறல்கள் வழி இலங்கை அரசு தமிழர்கள் மீது மேற்கொண்ட இராணுவப் போர் அமைதிக்கு வித்திடும் என்பது ஒரு மாயை. அந்தப் போருக்குப்பின் அமைதிக்கான வழிமுறைகளை காணும் பணியில், நான் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியின் தலைவர் முராட் ஏபிராஹிம்வுடன் உரையாடுகையில் அவரது கருத்தும் அவ்வகையில்தான் அமைந்திருந்தது.
பங்சா மோரோ மக்களுக்கு மலேசியா ஆற்றிய பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்ததை உலகமே பாராட்டியுள்ளது. பல்லின மக்கள் வாழும் மலேசியா இவ்விதச் செயலின்வழி தனது வெளியுறவு கொள்கையில் கொண்டுள்ள மாற்றத்தை பகிரங்கமாக வெளிக்காட்டியுள்ளது. இது தேசிய சிந்தனையின் வழி அரசியல் விடுதலை கோரும் மனித உரிமைக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மலேசியா வட்டார அளவில் அமைதி நிலவ மேற்கொண்ட மிகச் சிறந்த நடவடிக்கையாக இது அமைகிறது.
மலேசியாவின் பங்கு வட்டார அமைதிக்கு மட்டுமில்லாமல் உலக அமைதிக்கும் முக்கியம் என்ற வகையில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் பெர்டான அறவாரியம் போர்க் குற்ற ஆணையம் ஒன்றின்வழி செயல்படுவதை இங்கே குறிப்பிட வேண்டும்.
மலேசியா தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக ஈழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்குத் தீர்வு காண தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இது தேசிய சிந்தனையுடன் அரசியல் விடுதலைக்காக போரடும் மக்களுக்காக மலேசியா தன்னை ஈடுபடுத்தி வருவதை மதிக்கும், வரவேற்கும் மலேசியர்களின் இயல்பான எதிர்ப்பார்ப்பாகும்.

Saturday, April 7, 2012

புன்னகை பூத்த முகமே கலையழகன்

கலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கள்ளம் கபடமற்ற சிரிப்பும்எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் வரவேற்கும் இயல்பும் அவனது இலட்சணங்கள். ஆனால் அவனுக்குள் இருந்த அற்புதமான திறமையும், ஆழமான ஆளுமையும், பன்முகத்தன்மையும் பலருக்குத் தெரியாது. குழந்தைத்தனமான முகத்திற்கு சொந்தக்காரன் பல்வேறு பொறுப்புக்களை தோளில் சுமந்து திரிந்த ஒரு அற்புதமான போராளி என்பது சிலருக்கும் மட்டும் தெரியும்.

தொடக்கப் பயிற்சியை முடித்துக்கொண்ட கலையழகன், 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேசியத்தலைவர் அவர்களால் தொடங்கப்பட்ட கேணல் கிட்டு அரசறிவியல் கல்லூரி மாணவனாக இணைத்துக் கொள்ளப்பட்டான். தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப அரசறிவியலும், படையப்பயிற்சியும் இக்கல்லூரி மாணவர்களிற்கு மாறிமாறி வழங்கப்பட்டது. அக்கல்லூரியின் முதன்மை மாணவர்களில் ஒருவனாக மாவீரன் கலையழகன் திகழ்ந்தான். பேச்சாற்றல், நுட்பமாகப் பதில் கொடுக்கும் தன்மையினை கல்லூரியில் அவன் வளர்த்துகொண்டான். அங்கு அவனது ஒழுக்கம், கட்டுப்பாடு, மற்றவர்களோடு பழகும் தன்மை, எல்லோருக்கும் உதவும் பண்பு, நேர்மை என்பன அவனைத் தூய்மையான போராளியாக வெளிச்சம் போட்டுக்காட்டியது.

நான்கு வருடங்களிற்கு மேலாக அரசறிவியல் கற்ற கலையழகன் தேசியத்தலைவர் அவர்களது கருத்துரைகளினாலும், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தொடர் வகுப்புக்களினாலும் முழுமையான போராளியாகப் புடம் போடப்பட்டான். இந்தக்காலப் பகுதியில் படைக்கட்டளைப் பயிற்சியிலிருந்து கனரகப்பீரங்கிப் பயிற்சி வரைக்குமான பல்வேறு வகையான படையப்பயிற்சிகளை அவன் பெற்றான். 1995ஆம் ஆண்டு மாதகலில் ஆரம்பித்த அவனது போர் நடவடிக்கைகள் ரிவிரச, சத்ஜெய, ஜெயசிக்குறு, ஓயாத அலைகள்-03, ஆனையிறவுச்சமர் என நீண்டது. அண்மைய முகமாலை தாக்குதல் களத்திலும் அவன் பங்குபற்றியிருந்தான். இக்கல்லூரியின் முதலாவது அணி மாணவர்களின் பட்டப்படிப்பு நிறைவடைந்த போது, மிகச்சிறந்த மாணவர்கள் சிலரில் ஒருவனாக கலையழகன் தெரிவு செய்யப்பட்டு தலைவர் அவர்களினால் சிறப்புப் பரிசும் “திறவோர்“ எனும் பட்ட வழங்கி மதிப்பளிக்கப்பட்டான். அரசியல் அறிவும், படைய அறிவும் ஒருங்கே இணைந்து தலைவர் அவர்கள் எதிர்பார்த்த பல்துறைசார் போராளியாக அவன் இந்தக் காலகட்டத்தில் வளர்ந்திருந்தான்.

கல்லூரிக் காலங்களில் பகுதி நேரமாக கலையழகன் தொலைத்தொடர்பாளனாக செயற்பட்டான். பின்பு சிறிது காலம் மொழிபெயர்ப்பு அறிவினை பெறுவதற்கான கல்வியையும், பாதுகாப்பு பயிற்சியையும் பெற்ற கலையழகனுக்கு தேசியத்தலைவர் அவர்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை ஆவணமாக்கும் பணியில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வரிய வாய்ப்பினை தனது வாழ்நாளில் தனக்கு கிடைத்த பெரும் பேறாகவே அவன் கருதியிருந்தான். கால ஓட்டத்தில் அவனுக்கு வேலைச்சுமை அதிகரித்த போதும் தலைவர் அவர்களின் வரலாற்றை ஆவணமாக்கும் பணியினை தானே செய்யவேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் அவனுக்கிருந்தது. தலைவர் அவர்களது தொடக்க கால நிகழ்வுகளை தேடி எடுத்து தொகுப்பதிலும், தலைவர் அவர்களின் தொடக்க காலத் தோழர்களிடமும், ஆதரவாளர்களிடமும் தகவல்களைத் திரட்டி அதனைச் சரிபார்த்து ஆவணமாக்குவதிலும் அவன் அதிக ஆர்வம் செலுத்தியிருந்தான், வேறு சில தேசப்பற்றாளர்களுடன் சேர்ந்து கலையழகனின் கடும் உழைப்பின் பயனாகவே “Leader for All Season” என்ற தலைவர் அவர்களைப்பற்றிய புகைப்பட ஆவணநூலும், “விடுதலைப் பேரொளி” என்ற தலைவர் அவர்களைப்பற்றிய தொகுப்பு நூலும் வெளிவந்தன.

செஞ்சோலை, காந்தரூபன் சிறார்களுக்கான எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைவதற்காக, அவர்களிற்கான அழகான, அமைதியான இருப்பிடங்களை அமைத்துக்கொடுக்க வேண்டுமென்ற தலைவர் அவர்களின் பெருவிருப்பத்தினை நிறைவேற்றும் பொறுப்பு கலையழகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப்பணியை விரும்பி ஏற்றுக்கொண்ட கலையழகன் அதற்காக கடுமையாக உழைத்தான் . புலம் பெயர்ந்த மக்கள், அமைப்புக்கள், மத்தியில் இதற்கான நிதி வளங்களை திரட்டுவதற்காக கடும் முயற்சியெடுத்தான். ஏராளமானோரை அவன் சந்தித்தான், கதைத்தான், திட்டங்களை வழங்கினான். இறுதியில் அவன் இந்தப்பணியில் முழுமையாக வெற்றியடைந்திருந்தான். செஞ்சோலை – காந்தரூபன் சிறார்களுக்கான இருப்பிடங்கள் அமைக்கப்பட்டு தலைவர் அவர்களால் அவை திறந்து வைக்கப்பட்டமை அவனுக்குப் பெரும் மன மகிழ்வையும் நிறைவையும் தந்திருந்தது. அவனது ஆன்மா அன்று நிறைவடைந்திருந்தது. இதே போலவே நவம் அறிவுக்கூட போராளிகளிற்கான அமைவிடத்திற்கும் கலையழகனின் பங்கு கணிசமானதாக இருந்தது.

எமது தேசத்திற்கான வெளிநாட்டுத் தொடர்புகளை, அனைத்துலக பணிகளை செய்வதற்கான தயார்ப்படுத்தலுக்காக கலையழகன் பல்வேறு நாடுகளிற்கு அனுப்பப்பட்டான். வெளிநாட்டுப் பயணமானது அவன் கல்லூரியில் கற்ற பல விடயங்களை நேரில் பார்த்து அறியக்கூடியதாக இருந்தது. புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் தாயகப்பற்று, விடுதலையுணர்வு, வாழ்க்கைநிலை என்பவற்றை அவன் அறிந்து கொண்டான். எமது பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்களின் கடின உழைப்புப் பற்றியும், எதிர் கொள்கின்ற சிக்கலைக் குறித்தும் இங்கு சகதோழர்களிற்கு எடுத்துரைத்தான். அதே நேரம் தேசியத்தலைவர், விடுதலைப் போராட்டம் குறித்த தெளிவான கருத்துக்களை அவன் செல்லுமிடமெல்லாம் முன்வைத்தான். நட்பு அளவாக நிறையப் பேருடன் உறவாடி தொடர்புகளைப் பேணிவந்தான். புலம்பெயர்ந்த எமது உறவுகளின் தாயகம் தொடர்பான சிக்கல்களை அந்த மக்களின் நிலையில் நின்று பார்க்க வேண்டுமென்று வலியுறுத்தியவன். குறிப்பாக கனடாவில் வாழும் தமிழர்களிற்கான தாயகப்பணிகளை ஒருங்கிணைப்பதில் அவன் கடுமையாக உழைத்தான். புலம்பெயர் தமிழர்களின் பலத்தை, வளத்தை ஒருங்கிணைப்பதில் அவன் ஆற்றிய பணி அளப்பரியது. அவை வரலாற்றில் பொறிக்கப்படவேண்டியவை.

2006ம் ஆண்டு நடுப்பகுதியில் கலையழகன் அனைத்துலகத் தொடர்பக துணைப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான். இதற்கு இவனது பண்பும், ஆளுமையும், விடயங்களை இலகுவாகக் கையாளும் ஆற்றலும் காரணமாக இருந்தன. சக போராளித் தோழர்களை மதித்து, அவர்களோடு மனம் திறந்து பழகி, அனுசரித்து, அவர்களது தேவைகளை விளங்கி பூர்த்தி செய்யும் பக்குவம் அவனுக்கிருந்தது. போராளிகளை வளர்க்க வேண்டும், வேலைகளுக்குள்ளால் உள்வாங்க வேண்டும், நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டுமென்று அவன் விரும்பிச் செயற்பட்டான். அவனை விட வயதில் கூடியவர்களும், அனுபவசாலிகளும் இருக்குமிடத்தில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தன்மை அவனிடமிருந்தது. அந்தக் கவர்ச்சி மிக்க ஆளுமை எல்லோரையும் அவன் பால் ஈர்த்தது. குறுகிய காலத்தில் அவன் மிக வேகமாக வளர்ந்தான். அவனது ஆற்றல், ஆளுமையின் வீச்சு, முதிர்ச்சியடைந்த தன்மை என்பவை மூலம் ஒரு பெரிய பொறுப்பைத் தனியே செய்யக்கூடிய நிலையினை அவன் அடைந்திருந்தான் . அவன் நல்லவனாக மட்டுமல்லாமல் வல்லவனாகவும் திகழ்ந்தான் என்பது தான் உண்மை.

இவ்வாறான நேரத்தில் தான் 18.04.2007 அன்று எதிர்பாராத வெடிவிபத்தில் கலையழகன் வீரச்சாவு என்ற செய்தி வந்தவுடன் நாம் எல்லோரும் துடிதுடித்துப் பதறிப்போனோம். ஆழிப்பேரலை வந்து தாக்கியது மாதிரியான உணர்வு, பூமியதிர்ந்து நிலம் பிளந்து போன மாதிரியான நிலை, இதயத்தை யாரோ சம்மட்டியால் அடித்த அதிர்வு. வார்த்தைகளில் வடிக்க முடியாத துயரமும் வலியும். வேதனைச்சகதியில் சிக்கித் தவிக்கின்ற சோகம் . ஏன் இவ்வளவு வேகமாக எமை விட்டுப்பிரிந்தான் என்று மனதில் ஆழமான வலியுடன் எழும்பும் வினா. கலையின் இழப்பின் பெறுமதி, இழப்பின் இதயவலி, அதன் ஒட்டுமொத்தப் பரிமாணம் எனக்கே முழுமையாகத் தெரிந்திருந்தது. என்னையே முழுமையாகத் தாக்கியிருந்தது.

அவன் அழகானவன், பண்பானவன், பழகுவதற்கு இனிமையானவன், கள்ளம்கபடமற்ற வெள்ளையுள்ளம் படைத்தவன். ஆளுமையெடுத்து செயற்கரிய பணிகளைச் செய்தவன். முதல் நாள் உயிரோடு வலம் வந்தவனை மறுநாள் விதைகுழியில் விதைத்துவிட்டு வந்தோம். இது எவ்வளவு துயரமாக, கொடுமையாக இருந்தது. ஆனாலும் எவ்வளவு இழப்புவரினும், இடர்வரினும் உறுதி தளரோம். லெப். கேணல் கலையழகனது தலைவர் மீதான பற்றும் பாசமும், விடுதலை வேட்கையும், தேசிய உணர்வும் கொண்ட எண்ணங்களை நெஞ்சினில் சுமந்து அவனது இலட்சியக் கனவை நனவாக்குவோம் என அவனது விதைகுழி மீது சத்தியம் செய்கின்றோம்.

- மணிவண்ணன்(காஸ்ரோ)
(அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர்.)