தொடர்பாளர்கள்

Sunday, October 18, 2009

’தமிழீழ மக்கள் இந்தியாவால் கொல்லப்பட வேண்டும் அல்லது இந்தியாவுக்காக கொல்லப்பட வேண்டும்!’ -அம்பலமாகும் ஜெகத் கஸ்பர்

’தமிழீழ மக்கள்

இந்தியாவால் கொல்லப்பட வேண்டும்

அல்லது

இந்தியாவுக்காக கொல்லப்பட வேண்டும்!’

-அம்பலமாகும் ஜெகத் கஸ்பர்


ம.செந்தமிழன்


ஒரு வேடதாரியை அம்பலப்படுத்த உதவிய குமுதம் இணயதளத்திற்கு மனமார்ந்த நன்றிகள்!

அருட்தந்தை என்ற தவிர்க்கவியலாத அடை மொழியுடன் அழைக்கப்படும் ஜெகத் கஸ்பர் குமுதம் இணையதளத்திற்கு அளித்துள்ள நேர்காணலில் உதிர்த்த முத்துகளில் சில:

விடுதலைப் புலிகளும் தமிழ்நாட்டு ஈழ ஆதரவாளர்களும்...தவறே செய்யாதவர்கள் என்று நான் நினைக்கவில்லை.

கடைசிக் கட்டப் பேரிழப்புகளைத் தடுக்கும் விதமான போர் நிறுத்தத்தை ஏற்பாடு செய்ய இந்தியா முன் வந்தது. ஆனால்...விடுதலைப் புலிகள்தான் அதை நிராகரித்தனர். அதற்குக் காரணம் தமிழ்நாட்டில் உள்ள வைகோ, நெடுமாறன் போன்றோரின் தவறான வழிகாட்டுதலே ஆகும்.

இவர்களுக்கு புவி அரசியல் பற்றிய அறிவு இல்லை; ஆளுமை இல்லை; ஆண்மை இல்லை. ஆனால், எனக்கு இவை அனைத்தும் உள்ளன.

சீமான் எம்.எல்.ஏ அல்லது எம்.பி ஆக வேண்டும் என்பதற்கான களமாக நாம் தமிழர் இயக்கத்தை, ஈழ அரசியலைப் பயன்படுத்துகிறார். இதற்குப் பதிலாக அவர் திமுக அல்லது அதிமுக வில் சேரலாம்.

தமிழ்நாட்டு ஈழ ஆதரவு இயக்கங்களின் தலைவர்கள் இந்தப் பிழைப்பு பிழைப்பதை விட விபசாரம் செய்யலாம்.

-இன்னும் நிறைய பேசியுள்ளார்.

ஆனால்...நான் இவற்றில் எதற்கும் பதில் சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் இவை அனைத்துமே சில இயக்கங்களின், தலைவர்களின் மீதான அரசியல் மற்றும் தனிப்பட்ட குற்றச் சாட்டுகள்.

இவற்றிற்கு அவரவரே பதில் கூறுவது பொருத்தம்.

மேலும், கஸ்பருக்கான பதில்களும் வரத் தொடங்கியுள்ளன. சிபிஐ கட்சியின் தமிழக துணைப் பொதுச் செயலர் சி.மகேந்திரன் குமுதம் இணையத்தில் இது தொடர்பான பதிலடிகளைக் கொடுத்துள்ளார். இன்னும் பலரும் (இயக்குனர் சீமான் உட்பட) பதிலடிகள் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்.

கஸ்பர் பேசியவற்றிலேயே அதி முக்கியமான சேதியாக நான் கருதுவது இதைத் தான்:

உலக புவி அரசியல் சூழலைப் புலிகள் கருத்தில் கொள்ளவில்லை.

வட்டார புவி அரசியலையும் அவர்கள் அவதானிக்கவில்லை.

இந்தியா ஈழத்திற்கு எதிராகப் போவதன் காரணம் மேற்கண்ட இரு காரணிகளோடும் தொடர்புடையது.

சீனாவுக்கும் இந்தியாவுக்குமான போர் அல்லது போர்ச் சூழல் இன்னும் 20 ஆண்டுகளில் உருவாகும். அப்போது...இந்தியப் பெருங்கடலில் தனக்கு ஆதரவான சக்தியாக இருக்கத்தக்க விடுதலைப் புலிகளையும் ஈழ மக்களையும் இந்தியா பகைத்துக் கொண்டது. புலிகளை அழைத்ததன் வழி...அந்த பாதுகாப்புச் சக்தியை இந்தியா அழித்துவிட்டது.

தமிழ்த் தேசியனான எனக்கு, கஸ்பர் அளவுக்கு ‘உலக புவி அரசியல், ஆளுமை, ஆண்மை’ இல்லாமல் இருக்கலாம்.

ஆனால்...

மார்க்சிய மேதைகள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் உள்ளிட்டோர் தந்த பன்னாட்டு சமூக மாற்றங்கள் குறித்த தத்துவக் கல்வியும்....

’நும் ஊர் யாதெனக் கேட்டால்

தமிழ்நாடெனச் சொல்க’

-என மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவுறுத்திய தமிழின ஆசான் தொல்காப்பியன் தந்த சமூக, இயற்கை, மொழி அறிவும்...

’எமது பைதிரத்திலேயே உலகப் பெரு வல்லரசுகளின் இராணுவ, பொருளாதார, கேந்திர நலன்கள் புதைந்து கிடப்பதை நாம் நன்கு அறிவோம். அந்த நலன்களை முன்னெடுக்க உலக வல்லரசுகள் முனைப்புடன் முயற்சிப்பதையும் நாம் விளங்கிக்கொள்கிறோம்.’

-என்ற எமது தமிழீழ தேசியத் தலைவர் (மாவீரர் நாள் உரை 2007)

கற்றுக் கொடுத்துள்ள இனப் போராட்டக் கோட்பாடுகளும்...

ஏதோ கொஞ்சம் தெரியும் என்பதால்...கஸ்பரின் ’அரசியல்’ என்ன என்பதைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

தெற்காசியாவின் பேட்டைப் பொறுக்கியாக இந்தியா நீடிக்க விரும்புகிறது என்பது பாதி உண்மை மட்டுமே. இந்தியா என்றால் இந்தியா அல்ல. மாறாக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஜப்பான் உள்ளிட்ட காலனிய சுகங்கண்ட நாடுகளின் எடுபிடியாக இந்தியா இருக்கிறது.

இந்நாடுகள் தெற்காசியாவில் ஆட்டம் போடவும் சுரண்டிக் கொழுக்கவும் வசதியான அடிமை தேவை. அந்த அடிமையே இந்தியா.

இந்தியா என்பது ஒரு தேசமே அல்ல என்பதாலும், இந்தியா என்பதே பல தேசிய இனங்களின் சிறைக் கூடம் என்பதாலும், காலனி ஆதிக்க நாடுகளின் வேலைத் திட்டத்திற்கு இந்தியா மிக வசதியாக ஒத்துழைக்கிறது.

ஆகவே...ஈழப் போரில் சிங்களனுக்கு இந்தியா உதவியது என்றால்...அது இந்தியா மட்டும் அல்ல; அமெரிக்கா தலைமையிலான சுரண்டல் நாடுகளும்தான் உதவின என்றே புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த நாடுகளுக்கு இருக்கும் எதிர் சக்தி, சீனா.

இந்தியாவைக் கொண்டு சீனாவை எதிர்ப்பதும், தொடர்ந்து தொல்லைக்குள்ளாக்குவதும் அமெரிக்கத் தலைமை நாடுகளின் புவி அரசியல் கோட்பாடு.

இதே காரணங்களின் மறுபக்கம் சீனாவுக்கும் இருக்கிறது. அதாவது அமெரிக்கத் தலைமை நாடுகளை தெற்காசியாவில் ஒடுக்க...இந்தியாவைத் தொல்லைக்குள்ளாக்க வேண்டியது சீனாவுக்கு அவசியம்.

ஆனால்...இந்தியாவின் ஈழ எதிர்ப்பு நிலைக்கு இவை மட்டுமா காரணங்கள்?

இந்தியாவிற்கு இயல்பாகவே உள்ள ’தமிழின பகை’ கொள்கைதான் அதி முக்கியமான அடிப்படையான காரணம்.

இக் கொள்கை இல்லையென்றால்....

புலிகள் நீட்டிய நட்புக் கரத்தைப் பற்றிக் கொண்டு இந்தியா சிங்களனுக்கு எதிரான நிலையை எடுத்து...அதன் வழி சீனாவை இந்தியப் பெருங்கடலுக்குள் ஆப்பு அடித்தது போல் நிறுத்தியிருக்க முடியும்.

இந்தியா இந்த நிலைப்பாட்டை எடுத்திருந்தால்...அமெரிக்கத் தலைமை நாடுகள் எந்தச் சங்கடமும் இன்றி இந்தியாவை ஆதரித்திருக்கும். ஏனெனில் அவற்றின் எதிரி சீனாவே தவிர, புலிகள் அல்ல; தமிழீழ மக்கள் அல்ல!

ஆனால்...இந்தியா தனது புவி அரசியல் நலனையும் இன பகை கொள்கையையும் தந்திரமாக ஒருங்கிணைத்தது!

சீனாவையும் எதிர்ப்பது அமெரிக்கத் தலைமைக்கும் கட்டுப்படுவது தமிழீழத்தையும் அழிப்பது ஆகிய மூன்று நலன்களையும் ‘சிங்கள ஆதரவு’ என்ற ஒரே காய் நகர்த்தலில் அடைந்தது இந்தியா!

நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

இந்தியா தமிழீழத்தை அழிக்கத் துடிப்பதன் காரணம்...புவி அரசியல் மட்டும் அல்ல. அதன் தமிழின பகை கொள்கைதான் அம்முடிவிற்கான அடிப்படை!

இப்போது கஸ்பர் மொழியும் ’அரசியலை’ப் பார்போம்.

சீனாவுக்கும் இந்தியாவுக்குமான போர் அல்லது போர்ச் சூழல் இன்னும் 20 ஆண்டுகளில் உருவாகும். அப்போது...இந்தியப் பெருங்கடலில் தனக்கு ஆதரவான சக்தியாக இருக்கத்தக்க விடுதலைப் புலிகளையும் ஈழ மக்களையும் இந்தியா பகைத்துக் கொண்டது. புலிகளை அழைத்ததன் வழி...அந்த பாதுகாப்புச் சக்தியை இந்தியா அழித்துவிட்டது. என்கிறார் கஸ்பர்.

இந்தக் கூற்றை கஸ்பர் வெளிப்படையாகச் சொன்னதற்காக அவருக்கு நன்றிகள் உரித்தாகுக!

இந்தியாவின் கொலைவெறி பிடித்த அறிவு சீவிக் கூட்டத்தில் தானும் ஒருவன் தான் என்பதை மறைமுகமாக ஒப்புகொண்டிருக்கிறார் கஸ்பர்.

இந்தியப் பெருங்கடலில் சீனா கால் மூக்கு கை உடம்பு என அனைத்தையும் நுழைத்துவிட்டது. அண்மையில் தாக்கப்பட்ட தமிழக மீனவர்கள்,

‘சிங்களக் கப்பற் படையுடன் சீன ராணுவத்தினரையும் பார்த்ததாக’ ஊடகங்களில் தெரிவித்தனர்.

புலிகளின் கடற்படை செயல்பாட்டில் இருந்தவரை சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக செய்தி உண்டா...? இல்லை!

சீன ராணுவத்தின் எந்தச் செயல்பாட்டையும் புலிகள் இந்தியப் பெருங்கடல் பரப்பில் கட்டுப்படுத்தியே வைத்திருந்தனர்.

இன்று நிலைமை மாறிவிட்டது. புலிகளை ஒடுக்கியதன் வழி, இந்தியா தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்டுவிட்டது. இதுமட்டுமில்லாமல், அருணாசலப் பைதிரம் கிட்டத்தட்ட சீனாவின் ஒரு அங்கமாகிவிட்டது.

’எங்கள் சீனத்தின் அங்கமான அருணாசலப் பைதிரத்திற்குள் இந்தியத் தலைவர்கள் விருப்பம் போல வந்து போகிறார்கள். இதைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது’ � என்றது சீனா அண்மையில்.

இந்த எச்சரிக்கை யாருக்குத் தெரியுமா?

இந்தியத் தலைமை அமைச்சர் திருவாளர் மன்மோகன்சிங் அருணாசலப் பைதிரம் சென்றபோது விடப்பட்ட எச்சரிக்கை இது!

சீன அரசதந்திரி ஒருவர் அண்மையில் எழுதிய கட்டுரையில்,

’இந்தியாவில் காக்ஷ்மீர், அருணாசலப் பைதிரம், அசாம், நாகாலாந்து, தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களையும் எளிதில் தனித் தனி நாடுகளாக்கிவிட முடியும். சீனா இதைச் செய்ய வேண்டும்’

என்று கூறியுள்ளார்.

ஆக...

இந்தியாவின் தலை, வால், உடம்பு கை, கால் அனைத்தும் கழண்டு போகும் அபாயத்திலிருக்கிறது. கழட்டிவிடும் வேலையில் சீனா ஏற்கெனவே இறங்கிவிட்டது.

தமிழீழத்தை ஒழிப்பதற்காக சிங்களனுக்கு உதவிய இந்தியா...அதே சிங்களனுடன் சேர்ந்துகொண்டு தன்னை உடைக்கத் தொடங்கியுள்ள சீனாவை எதிர்கொள்ள இயலாமல் தள்ளாடுகிறது.

இதுதான் இன்றைய இந்தியாவின் புவி அரசியல் நிலை!

ஆகவே...இந்தியக் கொலைகார அறிவு சீவிகள் இந்த நிலையைச் சமாளிக்க அல்லது ஓரளவுக்காவது குறைத்துக் கொள்ள... கையில் எடுத்திருக்கும் ஆயுதம்தான் கஸ்பர் கையில் தவழ்கிறது.

இந்தியாவின் கட்டுப்பாட்டிலான தமிழீழம்!

என்பதுதான் அந்த ஆயுதம்.

இந்தியப் பெருங்கடலில் தனது மேலாதிக்கத்தை நிலை நாட்ட வேண்டும்

ஒரே நேரத்தில் சீனாவையும் சிங்களனையும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்ட படை தமிழீழத்தில் இருக்க வேண்டும். அதே நேரத்தில் தமிழீழ தேசிய இனத்திற்கு முழுமையான தன்னாட்சி உரிமையும் கிடைத்து விடக் கூடாது

-இந்த மூன்று அடிப்படைத் தேவைகளை முன் வைத்து இந்தியா இப்போது காய் நகர்த்துகிறது.


’தமிழீழம் எவருக்கும் அடிமைப்பட்டுக் கிடக்காது’ என்ற தலைவர் பிரபாகரனின் கொள்கைகளும் இலட்சிய வெறியுமே இந்திய தந்திரத் தலைமைக்கு பல்லாண்டுகளாக எரிச்சலூட்டி வந்தன.

ராஜீவ் � ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் மேலே கண்டவற்றிற்கான கூறுகள் இருந்ததையும், இக் காரணங்களால்தான் தலைவர் பிரபாகரன் அவ்வொப்பந்தத்தை விலக்கினார் என்பதையும் நாம் நினைவுபடுத்திப் பார்த்தால்...இந்திய தந்திரம் எளிதில் விளங்கும்.

இப்போது...

புலிகள் படை செயல்பாட்டில் இல்லாத நிலையில்...மேற்கண்ட மூன்று அம்சத் தேவைகளை நிறைவேற்றுவது இந்தியாவுக்கு ஓரளவு எளிது. இதைச் சாதிப்பதற்காக அவர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள பரப்புரையே...

கஸ்பர் போன்றோர் தொடர்ந்து பேசிவரும்,

’புலிகள் இயக்கம் இனி ஆயுதப் போராட்டம் நடத்தக் கூடாது’

‘இந்தியாவை எதிர்க்கக் கூடாது’ என்பதாகும்.

இதன் பொருள்,

விடுதலைப் புலிகள் இந்தியாவிடம் சரணடைந்து தமிழீழ மக்களின் தன்னாட்சியைக் கைவிட்டு, இந்தியாவின் எடுபிடிகளாக � அடியாட்களாக மாற வேண்டும் என்பதே ஆகும்.

விடுதலைப் புலிகளும் புலம் பெயர் தமிழர்களும்

’தமிழீழத் தாயகம் தமிழ் மக்களின் தாகம்’ என்ற முழக்கத்தைத் தூக்கிக் குப்பையில் வீசத் தயாராக வேண்டும்.

இந்தியாவின் கூலிப் படையாகச் செயல்பட்ட பல ஆயுத ஒட்டுக் குழுக்கள் இருந்த காலத்தை நினைவு கூர்ந்து பாருங்கள்.

புலிகள் இயக்கம் இந்தியாவின் இப்போதைய இந்த ‘எதிர்பார்ப்பை’ நிறைவேற்றாவிட்டால்...மீண்டும் அதே போன்ற ஒட்டுக் குழுக்களை இந்தியாவே உருவாக்கி தமிழீழத்தில் உலவ விடும் அபாயம் நெருங்கி விட்டது.

இதைத்தான் கஸ்பர் ‘புவி அரசியல்’ என்ற தங்க முலாம் பூசிய வார்த்தைகளால் குறிப்பிடுகிறார்.

சீனாவுக்கும் இந்தியாவுக்குமான போர் அல்லது போர்ச் சூழல் இன்னும் 20 ஆண்டுகளில் உருவாகும். அப்போது...இந்தியப் பெருங்கடலில் தனக்கு ஆதரவான சக்தியாக இருக்கத்தக்க விடுதலைப் புலிகளையும் ஈழ மக்களையும் இந்தியா பகைத்துக் கொண்டது. புலிகளை அழைத்ததன் வழி...அந்த பாதுகாப்புச் சக்தியை இந்தியா அழித்துவிட்டது.

கஸ்பரின் இந்த வார்த்தைகள் உரைப்பவை யாவை?

சீனாவும் இந்தியாவும் போரில் ஈடுபடும்போது சிங்களன் சீனாவை ஆதரிப்பான்.

சீனப் படைகள் தமிழீழ நிலப் பரப்பிலும் கடற்பரப்பிலும் தளம் அமைக்கும். அங்கிருந்து இந்தியா மீதான தாக்குதல்களை மேற்கொள்ளும்.

இந்தியப் படைகள் சிங்களப் பகுதிக்குள் நுழைவதை சிங்களர் அனுமதிக்க மாட்டார்கள். அச்சூழலில், தமிழீழப் பரப்பிற்குள் இந்தியப் படைகள் நுழைந்தே சீனத் தளங்களை அழிக்க இயலும்.

ஆகவே போர் நடக்கும் களங்களில் ஒன்றாக, தமிழீழம் மாறப் போவது உறுதி. சீனாவை எதிர்த்தும் இந்தியாவை ஆதரித்தும் போரில் ஈடுபட வேண்டிய சூழல் தமிழீழ மக்களுக்கு ஏற்படும்.

அப்படியான சூழலில் விடுதலைப் புலிகள் சீனாவை எதிர்த்துப் போரிடும் நல்ல வாய்ப்பை இந்தியா கெடுத்துவிட்டது.

இவைதானே...பொருள்...?

தமிழீழமும் அதன் மக்களும் இந்தியாவுக்காகப் போரிட்டு அழிய வேண்டும்!

இதுதான் கஸ்பரின் விருப்பம்!

அந்த விருப்பத்தில் இப்போது மண் விழுந்துவிட்டது!

இதுவே கஸ்பர் தமிழீழ மக்களையும் தமிழீழ அரசியலையும் அணுகும் விதம்.

ஆக மொத்ததில்...

தமிழீழ மக்கள்

ஒன்று இந்தியாவால் கொல்லப்பட வேண்டும்

அல்லது

இந்தியாவுக்காக கொல்லப்பட வேண்டும்!


என்ன ஒரு புவி அரசியல் அறிவு!

ஆளுமை!

ஆண்மை!


இப்போது கேட்கிறேன்...

ஜனவரி மாதம் போர் நிறுத்ததிற்கு ‘ஏற்பாடு’ செய்வதாக இந்தியா முற்சித்ததாக சொல்லும் கஸ்பர் அவர்களே...

அந்த ஏற்பாட்டில் ஆயுத ஒப்படைப்பு மட்டும் இருந்ததா...?

அல்லது

இந்தியாவின் பாதுகாப்புப் படையாக புலிகள் இருக்க வேண்டும் தலைவர் பிரபாகரன் இந்தியாவின் மாத ஊதியத்திற்கு ஏவல்படைத் தலைவனாகப் பணிபுரிய வேண்டும்

தமிழீழத் தேசம் என்ற இலட்சியத்தைப் புலிகள் இந்தியப் பெருங்கடலில் இராமர் பாலத்திற்கு அடியில் புதைத்து விட வேண்டும்

ஒரு புறம் சீனர்களோடும் மறுபுறம் சிங்களரோடும் சண்டையிட்டு... ஒருபோதும் போர் முடியாத...மரண மண்ணாக தமிழீழம் மாற வேண்டும்

ஆகிய ’நிபந்தனைகளும்’ இருந்தனவா...?

குமுதம் நேர்காணலில் உங்கள் தொலைபேசியைக் காட்டி...

‘இதோ இந்தத் தொலைபேசியில்தான் நடேசன் அன்னை என்னோடு பேசினார். அவரிடம் நான் இந்தியாவின் ஏற்பாடு பற்றிச் சொன்னேன்’ -என்று கூறினீர்கள்.

நடேசன் ஐயாவை உங்கள் இந்தியா காட்டிக் கொடுத்துக் கொன்றுவிட்டது.

நீங்கள் என்னவெல்லாம் பேசினீர்கள்...?

நடேசன் ஐயா என்னவெல்லாம் கூறினார்...?

இந்தியாவின் அந்த கமுக்கமான ‘போர் நிறுத்த ஏற்பாட்டில்’ உண்மையில் என்னென்ன குறிப்புகள் இருந்தன...?

மே மாதம் 16 ஆம் நாள் ‘நாங்கள் ஆயுதங்களை மௌனிக்கிறோம்’ என்று அறிவித்த எங்கள் இயக்கம்...நீங்கள் ‘ஏற்பாடு’ செய்தபோது மட்டும் ஏன் முரண்பட்டது...?

கேள்விகள் நிறைய உள்ளன.

சாட்சி சொல்ல நடேசன் ஐயா இல்லை.

சாட்சியாக நீங்கள் காட்டும் உங்கள் தொலைபேசிக்கோ உயிரில்லை...!

ஆகவே...அறைக்குள் நடந்த மர்மங்களை இனியும் வெளியே பேசாதீர்கள்.

இப்போது கொடுத்ததைப் போல நிறைய நேர்காணல்களைக் கொடுங்கள். உங்கள் ’அரசியல்’ பார்வைகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

அதுபோதும் எமக்கு!

No comments:

Post a Comment