தொடர்பாளர்கள்

Wednesday, December 15, 2010

மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் தமிழ்நெறி மாணவர் பண்பாளர் விழா 2010


மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் முதன்மை ஆண்டு நிகழ்வுகளில் குறிப்பிடத் தக்க ஒன்றாக விளங்கும் நிகழ்வே தமிழ் நெறி மாணவர் பண்பாளர் விழாவாகும் . கடந்த பதினோரு ஆண்டுகளாக மிகச் சிறப்பாக நிகழ்த்தப் படும் இந்நிகழ்வில் நாடு தழுவிய அளவில் வாழ்கின்ற இயக்க குடும்பங்களும் இயக்கப் பிள்ளைகளும் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு பங்களித்துச் சிறப்பு செய்யவர்.

கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைவரும் தூய தமிழ்ப் பெயரையே சூட்டியிருப்பர். இவர்களில் பெரும்பாலோர் பிறப்பு ஆவணத்திலேயே தூயதமிழ்ப் பெயரைத் தாங்கியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தூய தமிழ்ப் பாடல் போட்டி, தமிழிய சிந்தனை தாங்கிய பேச்சுப் போட்டி, தமிழ், தமிழர், தமிழீழப் பாடல்களுக்கான எழுச்சி நடனங்கள், கணினி ஒளிககீற்றுப் போட்டி, சுவரொட்டி வரையும் போட்டி, தமிழுணர்வு நாடகங்கள் முதலானவை இந்நிகழ்வில் சிறப்புற நடைபெறும். தமிழர் வரலாற்றை வெளிப்படுத்தும் திரட்டேடு
அணியப் போட்டியும், தமிழ் கொள்கை வரிகளைத் தாங்கிய தட்டி உருவாக்கும் போட்டி, வண்ணம் தீட்டும் போட்டி முதலானவையும் இடம்பெறும்.

இம்முறை 12 ஆவது முறையாக மலேசியாவில் சொகூர் மாநிலத்தில் யாக்யா அவாள் தமிழ்ப் பள்ளியில் இவ்விழா நிகழ்வுறும். குறள்நெறிச்செல்வர் டத்தோ ஈசுவரன் ( விங் ஆப் நிறுவன நிருவாக இயக்குனர்) அவர்கள் விழாவை திறந்து வைத்து திறப்புரை நிகழ்த்துவார். செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராசன் அவர்கள் நிறைவு செய்து நிறைவுரை நிகழ்த்துவார். மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் அவர்கள் தலைமையேற்று தலைமையுரை நிகழ்த்துவார். இத்திங்கள் 18 .12 .2010 ஆம் நாள் காரிக் கிழமை காலை 8 .30 லிருந்து மாலை 6 .வரை நிகழ்வுறும் இந்நிகழ்விற்கு தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு தமிழின்பம்
பெற அழைக்கப் படுகின்றார்கள்.

Thursday, December 2, 2010

ந.மு .வேங்கடசாமி நாட்டார் கல்லூரி அமைப்பாளர் தமிழறிஞர் விருத்தாச்சலனார் மறைவு .. திருநெறி ஆழ்ந்த இரங்கல்

தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வரும், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி நிறுவனருமான தமிழறிஞர் உலகப் பெருந்தமிழர் பேராசிரியர் பி. விருத்தாசலனார் அவர்கள் 18-11-2010 அதிகாலை இயற்கை எய்தினார்.




பேராசிரியர் பி. விருத்தாசலம் அவர்கள் தனது இறுதி மூச்சு வரை தமிழுக்காகவும், தமிழருக்காகவும் அயராது போராடியவர் ஆவார். தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் தலைவராகப் பணியாற்றி தமிழ் வழிக் கல்விக்காக பல மாநாடுகளை நடத்தியவர்.

புகழ்பெற்ற கரந்தைப் புலவர் கல்லூரியின் முதல்வராக 28 ஆண்டுகள் அவர் பணிபுரிந்தபோது ஆயிரக்கணக்கில் உணர்வுள்ள தமிழாசிரியர்களை உருவாக்கினார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் பேரவை உறுப்பினராக இருந்தபோது பல்கலைக் கழக இலச்சினையில் இடம்பெற்றிருந்த ஆங்கில வாசகங்களை அகற்றி 'தொட்டனைத்தூறும் அறிவும் ஆற்றலும்' என்ற தமிழ்ச் சொற்றொடரை இடம்பெறச் செய்தார். 1982ஆம் ஆண்டு முதல் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் ஆட்சிக்குழு, பேரவை, பாடத்திட்டக் குழுக்களில் இடம்பெற்று அரிய தொண்டுகள் பல செய்தார். நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினார். உலக நாடுகள் மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் சங்க இலக்கியம் குறித்து சிறப்பான ஆய்வுரைகள் நிகழ்த்தியுள்ளார்.

இவரது தமிழ்த்தொண்டினைப் பாராட்டி மதுரை காமராசர் பல்கலைக் கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற விருதினை வழங்கியது. 2009ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற சதயத் திருவிழாவில் இவருக்கு இராசராசன் விருது வழங்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு சனவரியில் தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பின் ஏழாம் ஆண்டு நிறைவு மாநாட்டின் போது இவருக்கு உலகப் பெருந்தமிழர் விருது வழங்கப்பட்டது.

வாழ்நாள் முழுவதிலும் தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்றுவதையே தனது கடமையாகக் கொண்டு வாழ்ந்த உலகப் பெருந்தமிழர் பி. விருத்தாசலனாரின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரின் பிரிவினால் வருந்தும் அவரது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Saturday, November 27, 2010

உலக குமுகம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுதற்கே அமைதியைப் பேணி வருகின்றோம் ... புலிகள் மாவீரர் நாள் செய்தி..

உலக குமுகம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுதற்கே அமைதியைப் பேணி வருகின்றோம் ... புலிகள் மாவீரர் நாள் செய்தி..

மாவீரர்நாள் அறிக்கை
26-11-2010
தமிழீழம்

எமது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,

தேச விடுதலை என்ற அதியுயர் இலட்சியக் கனலை நெஞ்சில் சுமந்து, மரணத்தை வெற்றிகொண்டு, எமது இதயங்களில் நித்திய வாழ்வுபுரியும் மாவீரர்களை நினைவேந்தல் செய்யும் தேசிய மாவீரர் வாரம் இது.

சத்தியத்தை சாட்சியாக வரித்து சத்தியப் போர்புரிந்த எமது மாவீரர்களை நாமனைவரும் பூசிக்கும் தூயஏழல் இது. விடுதலையின் முதல் வித்தாக விழிமூடிய லெப்.சங்கர் என்ற அக்கினிக்குழந்தையின் வழித்தடம் நடந்து சத்திய வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய ஆயிரமாயிரம் வீரப்புதல்வர்களையும், வீரப்புதல்விகளையும் தமிழினம் ஆராதிக்கும் இந்த நாட்களில் தனியரசுப் பாதையில் மாவீரர்களின் ஆன்மீக வல்லமை வேண்டி நாமனைவரும் உறுதிபூண்டு நிற்கின்றோம்.

மரணம் என்பது மாவீரர்களுக்கு உரித்தானதன்று. அக்கினிப் பிழம்பாக, தீமைகளைச் சுட்டெரிக்கும் எரிமலையாக தமிழீழ தேசம் முழுவதும் வியாபித்து நிற்கும் மாவீரர்களை சாவு தீண்டுவதில்லை. காற்றோடு காற்றாகவும், கடலோடு கடலாகவும், மண்ணுக்குள் விதையாகவும் நித்தியத் துயில் கொள்ளும் எங்கள் வீரமறவர்கள் சாவை வென்ற சரித்திரநாயகர்கள்.

எமது மாவீரர்களின் வாழ்வும், வரலாறும் வார்த்தைகளுக்கும், வர்ணனைகளுக்கும் அப்பாற்பட்டது. எமது மாவீரர்களின் அடியும், முடியும் எவராலும் அளவிட முடியாதது. எமது பெருந்தலைவனின் வழிகாட்டலில் களமாடி எமது மாவீரர்கள் புரிந்த சாதனைகள் எண்ணிலடங்காதது. அடங்கிக் கிடந்த தமிழினத்திற்கு முகவரியளித்த எமது தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து எமது மாவீரர்கள் புரிந்த ஈகங்களின் அர்த்தபரிமாணங்கள் மனிதகுல வரலாற்றில் என்றுமே நீடித்து நிலைத்துநிற்கும்.

காலநதியின் ஓட்டத்தில் உலக ஒழுங்கு கட்டவிழ்ந்து செல்கின்றது. புதுப்புது முடிச்சுக்களுடன் கட்டவிழும் உலக ஒழுங்கில் ஓயாத பயணமாக எமது விடுதலைப் போராட்டமும் முடிவின்றித் தொடர்கின்றது. எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலில் இருபது ஆண்டுகள் இயங்கிய தமிழீழ நடைமுறை அரசு எதிரியால் சிதைக்கப்பட்டு, இருண்ட பூமியாக இன்று எமது மண் மாற்றப்பட்டுள்ளது. அடங்காப்பற்றாக வணங்காது தலைநிமிர்ந்து நின்ற வன்னிமண் இன்று அந்நிய ஆக்கிரமிப்பின் உறை விடமாக அழிவுற்றுக் கிடக்கின்றது. ஈழத்தமிழினத்தின் வரலாற்றுப் பெருமைகூறும் யாழ்ப்பாணமும், திருகோணமலையும், மட்டக்களப்பும், அம்பாறையும் இன்று தமது வரலாற்றுப் பெருமைகளை இடிபாடுகளுக்குள் தொலைத்து நிற்கின்றன.

தமிழினத்தின் வரலாற்று வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு அங்கெல்லாம் பௌத்த விகாரைகளும், சிங்களப் பண்பாட்டுச் சின்னங்களும் முளைவிடுகின்றன. தமிழ் நிலங்களை புத்தர் சிலைகளும், அந்நிய ஆக்கிரமிப்புச் சின்னங்களும் ஆட்சிசெய்கின்றன. எமது மக்களின் பொருண்மிய வாழ்வும், வளங்களும் அந்நியர்களிடம் விலைபேசப்படுகின்றன. பேச்சுரிமை இழந்து, உயிர்வாழும் உரிமையும் மறுதலிக்கப்பட்டு அழிக்கப்பட வேண்டிய இனம் என்ற வரையறைக்குள் ஈழத்தமிழினத்தை சிங்களம் பகுத்துள்ளது.

யுத்த வெற்றிக் களிப்பில் திளைத்து நிற்கும் சிங்களம், ஆணவத்தின் உச்சத்தில் ஏறிநின்று தமிழீழ மண்ணையும், தமிழீழ மக்களையும், தமிழ் மொழியையும் துடைத்தழிக்கும் வெறிகொண்டு இனவழிப்பை அரங்கேற்றுகின்றது. தென்னிலங்கையில் ராஜபக்ச குடும்பத்தின் காட்டாட்சி நர்த்தனமாட, தமிழீழ தாயகத்தில் சிங்களத்தின் பேயாட்சி தலைவிரித்தாடுகின்றது.

அதியுச்ச படைவலிமையுடனும், ஈவிரக்கமற்ற படைக்கலப் பிரயோகத்துடனும் எமது மக்களைக் கொன்றுகுவித்து எமது தாய்மண்ணை ஆக்கிரமித்த சிங்களம், எமது மாவீரர்கள் நித்தியத் துயில் கொள்ளும் கல்லறைகளையும் விட்டுவைக்கவில்லை. மாவீரர் நினைவாலயங்களை இடித்து வீழ்த்திய சிங்களம், மாவீரர் துயிலும் இல்லங்களை உழுதெறிந்து மாவீரர்களின் உறைவிடங்கள் மீது படைத்தளங்களையும், விமான ஓடுபாதைகளையும் நிறுவிக் குரூரத் திருப்தியடைந்துள்ளது.

துட்டகாமினியின் மறுபிறப்பாக தன்னை முன்னிறுத்தி மகாவம்ச மனவுலகில் முடிசூடியிருக்கும் சிங்கள அதிபர் ராஜபக்ச, தனது மூதாதையரை விஞ்சிய இனவெறியராகத் தன்னை அடையாளப்படுத்துவதில் பெருமிதம் கொள்கின்றார். அன்று எல்லாளனை சூழ்ச்சியால் வெற்றிகொண்ட துட்டகாமினிகூட எல்லாளனுக்கு சமாதியமைத்து தமிழ் மன்னனின் வீரத்திற்கு மதிப்பளித்து நற்பெயர் தேடினான். ஆனால் துட்டகாமினியின் இரத்தவாரிசாகத் தன்னை அடையாளப்படுத்தும் ராஜபக்சவோ மாவீரர்களின் உறைவிடங்களை உழுதெறிந்து பௌத்தத்தின் காவலனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

இனவெறிகொண்டு மாவீரர்களின் உறைவிடங்களை சிங்களம் உழுதெறிந்தாலும்கூட, எமது மண்ணுக்குள்ளேயே அந்த வீரமறவர்கள் நித்தியத்துயில் கொள்வதை சிங்களத்தால் தடுக்க முடியவில்லை. எமது தேசத்தை ஆகர்சித்து நிற்கும் மாவீரர்களின் ஆன்மீக வல்லமையை முடக்கவும் இயலவில்லை. கல்லறைகளில் கண்ணீர் சொரிந்து, வாசமலர்களைப் பொழிந்து, மாவீரர்களுக்கு ஈகைச்சுடரேற்றும் எமது மக்களின் உரிமையை ஆயுதவலிமையால் இன்று சிங்களம் தடுத்து நிறுத்தினாலும், தமது இதயங்களில் மாவீரர்களுக்கு எமது மக்கள் அகச்சுடரேற்றுவதை சிங்களத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை. உலகெங்கும் ஒரேநேரத்தில் தமிழினம் அணிதிரண்டு அக்கினிப்பிழம்பாக மாவீரர்களைத் தரிசிப்பதையும் சிங்களத்தால் முடக்க இயலவில்லை.

எமது அன்பார்ந்த மக்களே,

வரலாறு காணாத மிகப் பெரும் சோதனையை இன்று ஈழத்தமிழினம் சந்தித்து நிற்கின்றது. போரை வெற்றிகொண்டு அமைதியை நிலைநாட்டியிருப்பதாக உலகிற்குப் பிரகடனம் செய்திருக்கும் சிங்களம், கடந்த ஒன்றரை ஆண்டுகாலப் பகுதியில் எமது மண் மீதும், மக்கள் மீதும் புதிய வடிவில் போர்தொடுத்துள்ளது.
படைக்கல வலிமையில் கடந்த ஆறு தசாப்தங்களாக வெளிப்படையாக சிங்களம் அரங்கேற்றிய தமிழின அழிப்பு என்பது இன்று சத்தம்சந்தடியின்றி நிகழ்ந்தேறுகின்றது. அபிவிருத்தியின் பெயரால் எமது வளங்கள் அந்நியர்களிடம் தாரைவார்க்கப்படுகின்றன. மீள்குடியேற்றத்தின் பெயரால் எமது மண் கபளீகரம் செய்யப்படுகின்றது. அதியுயர் பாதுகாப்பு வலயங்களின் பெயரால் எமது குடிநிலங்கள் வல்வளைப்புச் செய்யப்படுகின்றன. இன நல்லிணக்கத்தின் பெயரால் கடுகதியில் எமது மண்ணில் சிங்களக் குடியேற்றங்கள் வேரூன்றுகின்றன. பௌத்த தர்மத்தின் பெயரால் எமது மக்களின் பண்பாட்டு வாழ்வு சிதைக்கப்படுகின்றது. தன்னாட்சியுரிமைக்கும், அதனடிப்படையிலான தனியரசுக்கும் உரித்தான எமது இனம், சிறுபான்மையினமாக சிறுமைப்படுத்தப்பட்டு எமது மக்களின் பொருண்மிய வாழ்வும், உரி மைகளும் பறிக்கப்படுகின்றன.
மறுபுறத்தில் தனது ஆயுதப் படைகளின் ஆட்பலத்தைப் பெருக்குவதிலும், படைக்கல வலிமையை தக்கவைப்பதிலும் கவனம்செலுத்தித் தனது யுத்தப்பாதீட்டிற்குப் பெரும்தொகையில் நிதியை ஒதுக்கீடு செய்திருக்கும் சிங்களம், தமிழீழ தாயகப் பகுதிகளை முழுஅளவில் படைவலயங்களாகக் கட்டமைத்து வருகின்றது.

இருந்த பொழுதும் தமிழினத்தின் இதயங்களில் தணியாத தாகமாக, அணையாத தீயாகக் கொழுந்துவிட்டெரியும் தமிழீழ தனியரசுக்கான இலட்சியக் கனலை சிங்களத்தால் அணைத்துவிட முடியவில்லை.

எமது பாசத்துக்குரிய மக்களே,

சிங்களம் எக்காளமிடுவது போன்று நாம் அழிந்துவிடவில்லை. எமது இலட்சியப் பயணம் ஓய்வுக்கு வந்துவிடவுமில்லை. காலநதியின் ஓட்டத்திற்கேற்ப, வரலாற்றின் வழிகாட்டலுக்கு இணங்க எமது போராட்ட வடிவம் புதுமெருகூட்டப்பட்டுப் பரிணமித்துள்ளதே தவிர எமது இலட்சியம் மாறிவிட வில்லை.
நாம் போர் வெறியர்கள் அல்ல. நாம் அமைதியை விரும்பும் ஒரு தேசிய இனம். எமது சொந்த மண்ணில், எமது சொந்த மொழியையும், பண்பாட்டையும், பொருண்மிய வாழ்வையும் பேணி உலகின் ஏனைய இனங்களுடன் நல்லுறவைப் பேணி சகவாழ்வு புரிவதற்கே நாம் விரும்புகின்றோம். காலனித்துவ ஏகாதிபத்தியத்திடம் பறிபோய், இன்று சிங்களம் ஆக்கிரமித்திருக்கும் எமது இறையாண்மையை நிலைநாட்டி, எமது சொந்தமண்ணில் தனியரசு அமைத்து எம்மை நாமே ஆட்சிசெய்வதற்கே நாம் விரும்புகின்றோம்.

ஆயுதத்தின் மீது அலாதிப்பிரியம் கொண்டு எமது இனம் ஆயுதப் போர்புரியவில்லை. தந்தை செல்வாவின் வழிகாட்டலில் அறவழி தழுவி அன்று எமது மக்கள் போராடினார்கள். அன்று சமவுரிமை கோரிய எமது மக்கள் மீது குண்டர்களின் அடக்குமுறையை ஏவிச் சிங்களம் கலகம்புரிந்தது. பின்னர் சுயாட்சி கோரி அறப்போரை தீவிரப்படுத்திய எமது மக்கள் மீது ஆயுத அடக்குமுறையை ஏவி அரச பயங்கரவாதத்தை சிங்களம் கட்டவிழ்த்து விட்டது. அறவழியில் எமது உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே அன்றைய எமது இளைய தலைமுறை ஆயுதமேந்துவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டது. ஆயுதப் போராட்டத்திற்கான புறச்சூழலை நாம் தோற்றுவிக்கவில்லை. எமது மக்கள் மீது திணிக்கப்பட்ட சிங்கள ஆயுத அடக்குமுறையே எமது இளைய தலைமுறையை தற்காப்புப் பாதையில் ஆயுத மேந்துவதற்கு நிர்ப்பந்தித்தது. எமது தேசத்தின் மீது சிங்களம் ஏவிய வன்முறைப் புயலே எமது விடுதலை இயக்கத்தின் தோற்றத்திற்கும், எழுச்சிக்கும் காலாக அமைந்தது.

இருந்த பொழுதும் அமைதிவழியில் எமது உரிமைகளையும், தேசிய விடுதலையையும் வென்றெடுப்பதற்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், ஒவ்வொரு இடைவழியையும் நாம் தவறவிட வில்லை. திம்புவில் இருந்து ஜெனீவா வரை நிகழ்ந்தேறிய ஒவ்வொரு அமைதி முயற்சிகளிலும் நாம் பங்குபற்றினோம். போருக்கு ஓய்வு கொடுத்து அமைதிவழியில் தீர்வு காண்பதற்கு முன்னர் இந்தியப் பேரரசும், பின்னர் நோர்வேயும், இணைத்தலைமை நாடுகளும் அளித்த ஒவ்வொரு வாய்ப்புக்களையும் இதயசுத்தியுடன் நாம் அணுகினோம். இறுதியாக நோர்வேயின் அனுசரணையுடன் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பல விட்டுக்கொடுப்புக்களை எமது மக்களும், நாமும் புரிந்தோம். எமது இலட்சியத்தில் உறுதியாக நாம் நின்ற பொழுதும், உலகின் வேண்டுகைக்கு செவிசாய்த்தும், மதிப்பளித்தும் நெகிழ்வுப் போக்குடன் நாம் நடந்து கொண்டோம்.

எனினும் எமது மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளைப் புறந்தள்ளிவிட்டு அரசியல் தீர்வு என்ற மாயைக்குள் எமது போராட்டத்தை மழுங்கடிப்பதிலேயே சிங்களம் குறியாக நின்றது. போர்நிறுத்தத்தின் விதிகளை அப்பட்டமாக மீறி எம்மை சீண்டியிழுப்பதற்கு சிங்களம் முற்பட்டது. அரசியலமைப்பு என்ற சட்டகத்திற்குள் நின்றவாறு கடும்போக்கைக் கடைப்பிடித்து பேச்சுவார்த்தைகளுக்கான புறச்சூழலை படிப்படியாக சிங்களம் இல்லாதொழித்த பொழுதுகூட நாம் பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொள்ளவில்லை. எந்தவொரு விடுதலை இயக்கமும் புரிந்திராத புதுமையாக நாமேயொரு இடைக்கால நிர்வாக வரைபைத் தயாரித்து உலகிற்கும், சிங்கள தேசத்திற்கும் முன்வைத்தோம்.

எமது நெகிழ்வுப் போக்கை தவறாகப் புரிந்து கொண்ட சிங்களம் எம்மால் சமர்பிக்கப்பட்ட இடைக்கால வரைபு பற்றிப் பேச மறுத்தது. ஒட்டுக்குழுக்களைக் கட்டமைத்து எமக்கு எதிராக நிழல் யுத்தத்தை தொடுத்தது. இருந்த பொழுதும் போர்நிறுத்த உடன்படிக்கையை நாம் முறித்துக் கொள்ளவில்லை. சமாதானத்தின் மீது கொண்ட எமது பற்றுறுதியை வெளிப்படுத்தும் நிமித்தம் உலகின் அழைப்பிற்கு மதிப்பளித்து ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் நாம் பங்குபற்றினோம்.

எனினும் பேச்சுவார்த்தைகளில் காணப்பட்ட இணக்கப்பாட்டிற்கு முரணாக எமது தேசத்தின் மீது அறி விக்கப்படாத யுத்தத்தை சிங்களம் தொடுத்தது. பேசித்தீர்க்க வேண்டிய மாவிலாறு நீர்ப் பிரச்சினையைப் பூதாகரப்படுத்தி எமது மண் மீது நில ஆக்கிரமிப்புப் போரை சிங்களம் ஏவிவிட்டது. ஈற்றில் போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் சிங்களம் கிழித்தெறிந்தது.

ஆயுதப் போராட்டமும், போரும் நாம் விரும்பியேற்ற தெரிவுகளல்ல. இவையிரண்டும் எம்மீது திணிக்கப்பட்டவை. வன்னிப் போர் உக்கிரமடைந்த பொழுதுகூட போர்நிறுத்தம் செய்வதற்கான பற்றுறுதியை மீண்டும் மீண்டும் நாம் வெளிப்படுத்தினோம். எமது மக்களுக்காகத் தமது உயிரை வேலியாக்கிக் களமாடிய எமது வீரர்கள், மக்களுக்காக எந்தவொரு அதியுச்ச ஈகத்தையும் புரிவதற்குத் தயாராகவே இருந்தார்கள். அந்நிய ஆக்கிரமிப்பால் எமது நிலப்பரப்பு சுருங்கிய பொழுதுகூட மக்களைக் காத்து, மக்களின் துயர்துடைப்பதற்காகவே எமது வீரர்கள் அரும்பணி புரிந்தார்கள். எமது மக்களுக்காக உயிரையே ஈகம்செய்யத் துணியும் எமது விடுதலை இயக்கம், எமது மக்களின் பாதுகாப்பை உலகம் பொறுப்பெடுக்கும் என்ற நம்பிக்கையில் முள்ளிவாய்க்காலில் அதியுயர் ஈகங்களைப் புரிந்தார்கள்.

எமது அன்பார்ந்த மக்களே,

போராட்ட இலட்சியத்தைக் கைவிட்டு சிங்களத்திடம் நாம் மண்டியிடவில்லை. எமது மக்களின் உரிமைகளைக் காற்றில் பறக்கவிட்டு சலுகைகளுக்காக சிங்களத்தை நாம் யாசிக்கவுமில்லை. மென்வழி தழுவி எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், எமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உலக சமூகம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளித்தே கடந்த ஒன்றரை ஆண்டாக ஒருதலைப்பட்சமான முறையில் நாம் அமைதியைப் பேணி வருகின்றோம்.

நாம் எடுத்திருக்கும் இந்தத் தெரிவு மிகவும் கடினமானது. நோர்வே அரசின் அனுசரணையுடன் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நாம் புரிந்த விட்டுக்கொடுப்புக்களை விட இது உன்னதமானது. அக்காலப் பகுதியில் நாம் சந்தித்த இழப்புக்களை விட இது அதிக அளவிலானது.

முள்ளிவாய்க்கால் போரில் எமது மக்களைப் பாதுகாப்பதற்காக நிராயுதபாணிகளாகப் பேசச் சென்ற எமது அரசியல் போராளிகளை நயவஞ்சகமான முறையில் சிங்களம் படுகொலை செய்தது. களத்தில் விழுப்புண்ணெய்தி குற்றுயிராகத் துடித்த எமது போராளிகளை சிங்களம் சிறைப்பிடித்தது. உலகை நம்பி முள்ளிவாய்க்கால் கடலோரத்தில் காத்துநின்ற எமது மக்களை வகைதொகையின்றி சிங்களம் நரபலிவேட்டையாடியது. எஞ்சிய மக்களை விலங்குகளை விடக் கேவலமான முறையில் வதைமுகாம்களில் அடைத்துக் கொடும்வதை புரிந்தது. எமது பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை ஏவிவிடப்பட்டது. முள்வேலி முகாம்களுக்குள் எமது மக்கள் சந்தித்த துயரங்கள் வார்த்தைகளில் விபரிக்க முடியாதவை. அவலங்கள் அளவிட முடியாதவை. உலகின் மனச்சாட்சி மீது நம்பிக்கை கொண்டு, மென்வழி தழுவி நின்ற எமது மக்களுக்கு சன்மானமாக சாவையே சிங்களம் பரிசளித்தது.
இருந்த பொழுதும் உலகின் மனச்சாட்சி மீதும், தர்மத்தின் மீது நாம் நம்பிக்கை இழந்து விடவில்லை. எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், எமது சொந்த மண்ணில் தமிழீழத் தனியரசை அமைத்து நாம் வாழ்வதற்கும் உலகம் வழிசமைக்கும் என்று நாம் நம்புகின்றோம். பொறுமையின் எல்லைக்கு இன்று எமது தேசத்தை சிங்களம் இட்டுச்சென்றாலும்கூட உலகின் நீதியான அணுகுமுறை மீதான எமது நம்பிக்கை தளர்ந்துவிடவில்லை.

எமது தேசத்தின் தனியரசு உரிமையை உலக சமூகம் பகிரங்கமாக ஏற்க மறுத்தாலும்கூட, எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காக அடிக்கடி உலகத் தலைவர்கள் குரல்கொடுப்பது எமக்கு ஆறுதலை அளிக்கின்றது. எமது தேசத்தின் மீது இனவழிப்பை சிங்களம் கட்டவிழ்த்து விட்டிருப்பதை ஒப்புக்கொள்வதற்கு உலக சமூகம் பின்னடித்தாலும்கூட, போர்க்குற்றங்கள் பற்றி உலகத் தலைவர்கள் பேசுவது எமக்குத் தென்பூட்டுகின்றது. இந்த வகையில் ஈழத்தீவில் தமிழினத்தை வேரோடு துடைத்தழிக்கும் இனவழித்தொழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை கடந்த ஆறு தசாப்தங்களாக நடைமுறைப்படுத்தி வரும் சிங்களத்திடமிருந்து இனியும் எந்தவொரு அரசியல் தீர்வையும் தமிழினம் எதிர்பார்ப்பது அபத்தமானது என்பதைப் புரிந்து கொண்டு, நீதியின்பால் நின்று எமது தேசத்தின் அரசியல் சுதந்திரத்திற்கு உலகத் தலைவர்கள் வழிவகை செய்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

சிங்கள தேசத்திற்கு உரித்தான மண்ணைப் பிரித்தெடுத்து அரசமைப்பதற்கு நாம் முற்படவில்லை. அன்றி பயங்கரவாத வெறிகொண்டு நாம் பிரிவினைவாதம் பேசவுமில்லை. நாம் பயங்கரவாதிகளோ அன்றி இனச்சுத்திகரிப்பை சித்தாந்தமாகக் கொண்ட பிரிவினைவாதிகளோ அல்லர். நாம் எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காக, அரசியல் சுதந்திரத்திற்காக, ஐக்கிய நாடுகள் சபையும், உலகின் வளர்ச்சியடைந்த தாராண்மைத்துவ நாடுகளும் போற்றிப்பேணும் தேசிய தன்னாட்சியுரிமையின் அடிப்படையில் எமது தேசத்தின் இறைமையை நிலைநாட்டுவதற்காகப் போராடும் ஒரு தேசிய விடுதலை இயக்கம்.

இந்த மெய்யுண்மையைப் புரிந்து கொண்டு எமது தேசத்தின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்து, தமிழீழத் தனியரசுக்கான புறநிலைகளை தோற்றுவித்து எமது மக்களின் விடிவிற்கு வழிவகை செய்யுமாறு உலக சமூகத்திற்கு நாம் அறைகூவல் விடுக்கின்றோம். இதேநேரத்தில் எமது மக்கள் மீது இனவழிப்புப் போரைத் திணித்த சிங்கள ஆட்சியாளர்களை போர்க்குற்றவாளிகளாக்கித் தண்டிக்குமாறும் உலக சமூகத்தை நாம் வலியுறுத்துகின்றோம்.

முள்ளிவாய்க்கால் போரில் நயவஞ்சகமான முறையில் சிறைப்பிடிக்கப்பட்ட எமது போராளிகளையும், எமது விடுதலை இயக்கத்திற்கு உறுதுணை நின்ற மக்களையும் கண்காணாத இடங்களில் சிங்களம் சிறைவைத்துள்ளது. இதேபோன்று பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழும், அவசரகால நடைமுறை யின் கீழும் வகைதொகையின்றி கைதுசெய்யப்பட்ட எமது மக்களை நீதிவிசாரணைகள் இன்றி சிங்களம் சிறைவைத்துள்ளது. நீதிக்குப் புறம்பான முறையில் சிங்களம் சிறைவைத்துள்ள போர்க்கைதிகளையும், அரசியல்கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உலக சமூகத்தை நாம் வேண்டி நிற்கின்றோம்.

உலக சமூகத்தின் நீதியான அணுகுமுறை மீது நம்பிக்கை கொண்டு நிற்கும் எமது மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு காலம் தாழ்த்தாது எமது தேசத்தின் அரசியல், சமூக, மனித உரிமைகளை உறுதிசெய்வதற்கான காத்திரமான நடவடிக்கைகளை உலகத் தலைவர்கள் எடுப்பார்கள் என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கையுண்டு.
இத்தருணத்தில் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் பெரும்தூணாக விளங்கும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களை தமது தேசியப் பணியைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு உரிமையுடன் நாம் கோருகின்றோம்.

தாய்மண்ணை விட்டுத் தொலைதூரம் புலம்பெயர்ந்தாலும், தமிழீழ தாயகத்திலேயே ஒவ்வொரு புலம்பெயர்வாழ் தமிழர்களின் வேரும் ஆழப்பதிந்து நிற்கின்றது. தாயக மண்ணைவிட்டுப் பிரிந்த வலியை நன்கு உணர்ந்தவர்கள் என்ற வகையில், தமிழீழ தேச விடுதலைக்காக ஓயாது குரலெழுப்பி உலக சமூகத்தின் மனச்சாட்சியை தட்டியெழுப்பித் தேச விடுதலையை வென்றெடுக்கும் பொறுப்பு இன்று ஒவ்வொரு புலம்பெயர்வாழ் தமிழரையும் சார்ந்துள்ளது.

இதுவரை காலமும் எமது விடுதலைப் போராட்டத்தையும், மக்களையும் தாங்கிநின்ற புலம்பெயர்வாழ் உறவுகள், தொடர்ந்தும் எமது தாயக உறவுகளுக்கான மனிதநேய உதவிகளை வழங்கி, அவர்களின் அவலங்களைத் துடைத்து, இயல்புவாழ்வை தோற்றுவிப்பதற்கான பணிகளை தொடருமாறு வேண்டுகின்றோம்.

சோதனைகள் மிகுந்த இன்றைய காலகட்டத்தில் புகலிட உறவுகளைப் போன்று எமது மக்களின் விடிவிற்காக அயராது குரலெழுப்பும் தமிழகத் தலைவர்களுக்கும், எமது தொப்புள்கொடி உறவுகளாகிய தமிழக உறவுகளுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம். காலத்தின் தேவையறிந்து காலம்காலமாக எமது தொப்புள்கொடி உறவுகள் புரியும் தார்மீக உதவி தமிழீழ தேசத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டியது. எமது போராட்டத்திற்கான இந்தியப் பேரரசின் தார்மீக ஆதரவைப் பெற்றுத்தரும் பணியை தமிழக உறவுகள் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்று நாம் உரிமையுடன் கோருகின்றோம்.

சத்திய இலட்சியத்தை உயிர்மூச்சாக வரித்துக் கொண்ட எமது மாவீரர்களின் ஆன்மீக வல்லமை மகத்தானது. அந்த சரித்திரநாயகர்களை நினைவுகூரும் மாவீரர் வாரத்தின் இறுதி நாளாக முகிழ்க்கும் தமிழீழ தேசிய மாவீரர் நாளாகிய நவம்பர் 27ஆம் நாளன்று உலகத் தமிழினத்தை அணிதிரண்டு மாவீ ரர்களுக்கு ஈகைச்சுடரேற்றுமாறு உரிமையுடன் அழைப்பு விடுக்கின்றோம். அன்றைய நாளில் அந்நிய ஆக்கிரமிப்பில் சுடரேற்றும் வாய்ப்புக்கள் மறுதலிக்கப்பட்ட எமது உறவுகளை தமது இதயங்களில் அகச்சுடரேற்றி மாவீரர்களை நினைவுகூருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

எத்தனை தடைகளை எதிர்கொண்டாலும், எத்தனை இடர்களுக்கு ஆளானாலும் எம்தலைவனின் வழிகாட்டலில், மாவீரர்களின் இலட்சியப் பாதையில் பயணித்து தமிழீழத் தனியரசை நிறுவுவோம் என உறுதிபூணுவோமாக.

நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

Thursday, November 18, 2010

பாவாணரின் என் அண்ணாமலை நகர் வாழ்க்கை வரலாறு..

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாவாணர் பணியாற்றிய போது தமிழுக்கு எதிர்ப்பாக செயற்பட்ட தமிழ்ப் பகைவர்களை எதிர்த்து தன்மானத்துடன் இம்மியளவு விட்டுக் கொடுப்பும் இல்லாமல் தம் பணி துறந்து தனித்தன்மையுடன் வெளியேறிய வரலாற்று நிகழ்வு நாடகமாக்கப் பட்டுள்ளது. மலேசிய தமிழ் நெறிக் கழகச் செல்வங்களின் அரிய படைப்பு.. காண்க


Thursday, November 11, 2010

இலங்கை அரசு தமிழர் மீது நிகழ்த்திய மனிதப் படுகொலைக் காட்சிகள். அல் யசிரா தொலைக்காட்சி அம்பலப் படுத்தியது...

இலங்கை அரசு தமிழர் மீது நிகழ்த்திய மனிதப் படுகொலைக் காட்சிகள். அல் யசிரா தொலைக்காட்சி அம்பலப் படுத்தியது... காண்க

Wednesday, November 10, 2010

தமிழிசை வளம் - 1

தமிழிசை வளம் - 1

இசைஅறிஞர் வீ.பா.கா. சுந்தரம் அவர்களின் இக்கட்டுரை ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது தமிழகப் புலவர் குழுவின் சார்பில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.வி. அவர்களின் ஆதரவில் வெளியிடப்பட்டது........

1. சென்ற பல நூறாண்டுகளிலும் வட சொல்கள்:

பத்தாம் நூற்றாண்டுக்கு மேல் தமிழகத்தில் இசைத் துறையில் வட சொல்கள் மிகவும் வழக்குக்க வந்து வளர்ந்தோங்கிப் படிப்படியாய்த் தமிழிசைத் துறைச் சொல்களை அழியத் செய்துவிட்டன. இன்று தமிழ் நாட்டின் இசைக் கல்லூரிகளில் நூற்றுக்கு 95 விழுக்காடு வடமொழிச் சொற்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் இசைக் கல்லூரிகளில் தமிழிசைக்கு மூலம் வடமொழியில் எழுதப்பட்ட நூல்கள் என்று ய பரும்பாலும் சொல்லி வருகின்றார்கள். வடமொழிச் செய்யுட்களையே மேற்கோள்கள் காட்டி வருகின்றார்கள். வடமொழிச் செய்யுட்களையே மேற்கோள்கள் காட்டி வருகின்றார்கள். வடமொழிச் சொற்கள் இல்லை யயனில் தமிழிசை இலக்கணத்தை விளக்கவே முடியாது என்னும் கருத்தும் உளது. தென்னக இசைக்கல்லூரிகளில் பாடமாக வைத்துள்ள இசையியல் நூல்களில் எல்லாம் நூற்றுக்கணக்கான வடமொழிச் சொல்கள் வழங்கி வருகின்றன.

2. பிறதுறை நூல்களில் புதுமலர்ச்சி:

தமிழக அரசு‡சென்ற ஆண்டுகளில் பெரிதும் முயன்று கலைச் சொல் அகராதிகள் வெளியிட்டுள்ளது. அறிவியல், நிலவியல், மெய்யியல், பயரியல், உயிரியல், ஆட்சியியல் முதலிய இயல்களுக்குத் தமிழ்த்துறைச் சொல் அகராதி வெளியிட்டுள்ளது தமிழக அரசு. ஆனால் இசையியலுக்குத் தமிழ்த் துறைத்சொல் அகராதி வெளியிடவில்லை.வெளியிடும் திட்டமும் வகுத்துத் தெரியப்படுத்ததவில்லை. தமிழக அரசு‡தமிழ் இசைத்துறைக்குச் செய்து வரும் ஆக்கப் பணிகளுள், இசைத்துறைச் சொல் அகராதித் திட்டமும் சேருதல் நலமாகும்.

3. தமிழிசை இயக்கம் செய்துள்ள தொண்டு:

அண்ணாமலையில் தோன்றி, நாளொரு மேனியாய் வளர்ந்து, வளம் நல்கி வரும் தமிழிசை இயக்கம் தமிழகத்திற்கு விழிப்புணர்ச்சி ஊட்டியது; அரும் தொண்டு ஆற்றியுள்ளது. தமிழிசை இயக்கம் ஒரு பறவை எனலாம். அதற்கு இரு இறக்கைகள். ஓர் இறக்கை, கீர்த்தனை யாத்தலும் இசையமைத்தலும். மற்றோர் இறக்கை ‡ இசை இலக்கணம், இசையியல். இசையிலக்கணத்தை இன்று வரை உரிய தமிழ்த்துறைச் சொற்களைக் கொண்டு எழுதி வெளியிட்ட நூல் ஒன்று கூட இல்லை.

இசையியில் பகுப்பு:

தமிழக இசையியலைக் கீழ்க்கண்டவாறு பகுத்து அமைக்கலாம்:
1. கோவை இயல் (சுவர சாஸ்திரம்)
2. ஒத்து இயல் (ஸ்ருதி சாஸ்திரம்)
3. பாலை இயல் (இராகம் உண்டாக்கும் முறை)
4. பண் இயல் (இராக சாஸ்திரம்)
5. பண் பகுப்பு வகையியல் (மேளகர்த்தா ஜன்ய ராகங்கள்)
6. ஆளத்தி நெறிமுறைகள் (இராகம் பாடும் இலட்சணம்)
7. தானம், பல்லவி பாடும் நெறிமுறைகள்
8. தாளவியல் (இது பல பகுப்புடையது)

4. தமிழிசை வரலாறு:

தமிழிசையியல் வரலாறு, தமிழிசைப் புலவர்கள் வரலாறு, முதலிய நூல்கள் நெறிமுறையாக வெளிவரவில்லை. ஆக்ஃச் போர்டுப் பல்கலைக் கழகம் ‡ வெளியிட்டுள்ள இசைககலைக் களஞ்சியம் போன்று ,(வீஜுe நுமுக்ஷூலிrd ளீலிதுஸ்ரீழிஐஷ்லிஐ மிலி னிற்விஷ்உ - ய்ஷ்rவிமி edஷ்மிஷ்லிஐ 1938; விeஸeஐமிஜு edஷ்மிஷ்லிஐ 1947) ஒரு இசைக் கலைக் களஞ்சியம்வெளியிடுதல் வேண்டும். இதனை அரசு வெளியிடாமல் போகுமோ என்ற கவலை நமக்கு வேண்டாம். இறையருள் கூட்ட இசைக் கலைக் களஞ்சியம் மலரும். ஒரு நாளில் நம் நாட்டுப் பெருமைகளுள் பண் அமைப்பும் தாளக் கொட்டு முழக்கு அமைப்புக்களும் தனிப்பெரும் சிறப்புடையன; உலக நாடுகட்கு நாம் கற்பிக்கத் தக்கன.

5. தமிழிசைக்கு மூலக் குறிப்புடைய நூல்கள்:

உயர்தனிச் செவ்விசை(உயிழிவிவிஷ்உழியி துற்விஷ்உ) பற்றிய குறிப்புகள் ஆயிரக் கணக்கில் பழந்தமிழ் நூல்களில் உள்ளன. அவற்றை ஆராய்ந்து தொகுத்தும் வகுத்தும் விளக்கியும் நூல்கள் எழுதுதல் வேண்டும். பழந்தமிழ்ச் செவ்விசை தொல்காப்பியத்தில் கருவாகவும், பத்துப்பாட்டில் பத்துமாதம் வளர்ந்து பிறந்த குழந்தையாகவும், சிலப்பதிகாரத்தில் சீரிய குமரிப் பெண்ணாகவும், சிலம்பின் செப்பரிய இரு பெரும் உரைகளிலே மண முடித்துச் சேய் ஈன்ற தாயாகவும் காட்சி அளிக்கின்றாள்.
இசை ஆராய்ச்சிக் கடலில் பயிற்சி பெற்றவர்கள் முறையாக நெறியாக நடுநிலை பூண்டு மூழ்சினால், கொற்கை முத்திலும் நற்பெரும் இசைமுத்துகள் கிடைக்கப் பெறலாம். தமிழைப் புறக்கணிக்காமல், இகழ்நத தள்ளாமல் இரக்கப்பட்டுக் கூடி ஆராயும் உள்ளம் வேண்டும்.

( இசை அறிஞர் வீ.ப.கா. சுந்தரம் எழுதிய தமிழிசை வளம் என்னும் நூலிலிருந்து..)

போராளிகளைப் பிளவுபடுத்தியவரே கருணாநிதிதான் பழ.நெடுமாறன் வெளியிட்ட உண்மை

போராளிகளைப் பிளவுபடுத்தியவரே கருணாநிதிதான்
பழ.நெடுமாறன் வெளியிட்ட உண்மை

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திடீரென ஈழத்தமிழர் பிரச்னை பற்றி முதல்வர் கருணாநிதி பேசியிருக்கிறார். திருச்சிக்கு வந்த சோனியாவை இடையில் சென்னையிலேயே சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தவர், அதையடுத்து இராசபக்சேவுக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அடுத்தடுத்து நடக்கும் அவரின் இந்த கருத்துவெளிப்பாடுகள் தமிழ் இன உணர்வாளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. இது பற்றி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறனிடம் பேசினோம்.

''போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழரின் மறுவாழ்வு பற்றி முதல்வர் கருணாநிதி மீண்டும் முக்கி யத்துவம் கொடுத்து பேசியிருக்கிறாரே?''

இலங்கையில் தமிழர்களின் பேரழிவுக்கெல்லாம் காங்கிரசும் தி.மு.க. வும்தான் பொறுப்பு. ஒரு லட்சம் அப்பாவி தமிழர்களை பதைக்கப்பதைக்க படுகொலை செய்ய சிங்கள அரசுக்கு இந்திய அரசு ஆயுதம் தந்தது. மத்திய அரசில் ஒரு அங்கமாக இருந்தும் தி.மு.க. தமிழர் அழிவைத் தடுக்க எதுவுமே செய்யவில்லை. மாறாக, தமிழக மக்களை ஏமாற்ற வரிசையாக நாடகங்கள் மட்டும் அரங்கேற்றியது. முள்வேலி முகாமிலிருந்து மூன்று இலட்சம் தமிழ் மக்களை விடுவிக்குமாறு தமிழகமே... கொதித்துப் போராடியபோது, சர்வகட்சிக் குழுவை அனுப்புமாறு வலியுறுத்தப்பட்டது. ஆனால் கருணாநிதி தி.மு.க. காங். கூட்டணி எம்.பி.க்களை மட்டும் அங்கு அனுப்பி வைத்து அவர்கள் திரும்பி வந்த பிறகு அவரே ஒரு அறிக்கை தந்தார். முகாம்களில் உள்ள மக்கள் 3 மாதங்களில் அவரவர் ஊர்களில் குடியேற்றப்படுவார்கள் என்று இராசபக்சே உறுதி தந்துவிட்டார் என்றும் மக்களுக்குச் செய்யப்படும் உதவிகள் ஓரளவு திருப்தி தருவதாகவும் கூறியவர் கருணாநிதி. ஆனால் இன்ன மும் அந்த மக்கள் பெரும் துன்பத்தில் இருக்கிறார்கள் என அவரே இப்போது இடம் பெயர்ந்த மக்களுக்கு இந்தியா உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார். காங்கிரசுக்கும்-தி.மு.க.வுக் கும் உறவில் நெருடல் ஏற்படும்போது ஈழத்தமிழர் பிரச்சினையைக் கையில் எடுப்பதும் திராவிடம் பற்றிப் பேசுவதும் உறவு இணக்கமாக இருக்கும்போது அதைப் பற்றி மூச்சுகூட விடாமல் இருப்பதும் கருணாநிதியின் வழக்கம்.

''போர் மேகங்கள் சூழத் தொடங்கியதில் இருந்தே அதை மத்திய அரசு தடுக்கவேண்டும் என முதல்வர் தொடர்ந்து கூறினார்தானே?''

''மன்மோகன் பிரதமராகப் பதவி யேற்ற 2004ம் ஆண்டு முதல் 2009 வரை சிங்கள ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்தது. சிங்கள இராணுவத்தில் 63 சதவீதம் பேர் இப்படி இந்தியாவில் பயிற்சி பெற்றனர். 2008 - 09 ஆண்டுகளில் விடுதலைப் புலிகளுக்கு உதவிப்பொருள்கள், ஆயுதங்களைக் கொண்டுவந்த 13க்கும் மேற்பட்ட கப்பல்களை இந்தியக் கடற்படையின் உதவியுடன் சிங்களக் கடற்படை அழித்தது. வெளியிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு எந்தவித ஆயுத உதவியும் வராதவாறு இந்தியக் கடற்படை தடுத்தது. இது மட்டுமல்லாமல் இந்திய இராணுவத்தின் முன்னாள் லெப். ஜெனரல் சதீஷ் சந்திரா நம்பியார், இலங்கை இராணுவத்துக்கு ஆலோசகராகப் பணியாற்றினார். உச்சக்கட்டமாக ஏவுகணைகள், ராடார்களுடன் அவற்றை இயக்க ராணுவப் பொறியாளர்களையும் டெல்லி அரசு அனுப்பிவைத்தது. இதெல்லாம் நடந்தபோது மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது. இவர்களின் தயவில்தான் மன்மோகன் அரசு உயிர்பிழைத்துக்கொண்டு இருந்தது. உண்மையிலேயே ஈழத்தமிழர்கள் மீது கருணாநிதிக்கு அக்கறை இருந்திருந்தால். மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் மன்மோகன் அரசு கவிழ்ந்திருக்கும். காங்கிரசு உதவியில் பதவியில் இருக்கும் தி.மு.க. அரசை காங்கிரசு கவிழ்த்திருக்கும். தனது அரசைக் காப்பாற்ற ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கருணாநிதி பலி கொடுத்தார்.

''போர் நிறுத்த முயற்சி பற்றி எம்.கே. நாராயணனும் சிவசங்கர் மேனனும் அவ்வப்போது பேசிவிட்டுச் சென்றதாக முதல்வர் கூறியிருந்தாரே?''

''இலங்கையில் போர் முடிந்தவுடன் மகிந்த இராசபக்சேவின் தம்பி பசில் இராசபக்சே சில உண்மைகளை வெளியிட்டார். போர் நெருக்கடியான நேரத்தில் இந்திய - இலங்கை அரசுகள் இணைந்து செயல்படுவதற்காகக் குழு அமைக்கப்பட்டது. இந்தியத் தரப்பில் எம்.கே. நாராயணன், சிவசங்கர் மேனன், உள்துறைச் செயலாளர் ஆகியோரும் இலங்கைத் தரப்பில் பசில், கோத்தபாய இராசபக்சே, வெளியுறவுச் செயலாளர் ஆகியோர் இடம் பெற்றனர். அந்தக் காலக்கட்டத்தில் இலங்கை இராணுவத்துக்கு என்னென்ன உதவிகள் வேண்டும் என இக்குழு கூடிப்பேசி அதன்படி இந்திய அரசு உதவிகளைச் செய்தது. இதற் காகவே நாராயணனும் சிவசங்கர் மேனனும் அடிக்கடி கொழும்பு வந்து சென்றனர் என்பது பசில் இராசபக்சேவின் ஒப்புதல் வாக்குமூலம். ஆனால் போர் நிறுத்தத்திற்கு இராசபக்சேவை வலியுறுத்துவதற்காகவே அவர்கள் கொழும்பு சென்றதாக கருணாநிதி உண்மையைத் திரித்துக்கூறி தமிழக மக்களை ஏமாற்றினார்.

''போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படத்தான் செய்வார்கள் எனப் பேசிய ஜெயலலிதாவிற்கு ஆதரவாக ஈழத் தமிழர் பற்றாளர்கள் குரல் உயர்த்தி பிரச்சாரம் செய்வதாக கருணாநிதி குறிப்பிட்டு இருக்கிறாரே?''

ஜெயலலிதா அவ்வாறு பேசியது மன்னிக்க முடியாததாகும். ஆனால் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் இவர் என்ன செய்தார் என்பதுதான் முக்கியமானது. ஈழத்தமிழர் பிரச்னை ஒரு புறம் இருக்க, தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படை வேட்டையாடு வதைத் தடுத்து நிறுத்த இவர் என்ன செய்துவிட்டார்? தமிழ்நாட்டின் முதல மைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு தன் குடிமக்களைப் பாதுகாக்க முடியாதவர் மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு அருகதையை இழந்துவிட்டார். இராசபக்சேவைப் பாதுகாப்பதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அதை யெல்லாம் தவறாது செய்துகொண்டு இருக்கிறார்.

''உங்கள் குற்றச்சாட்டு கடுமையாக இருக்கிறதே?''

''நடந்ததைத்தான் நான் சுட்டிக்காட்டுகிறேன். ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்து ரத்தக்கறை படிந்த இராசபக்சேவின் கையைக் குலுக்குவ தற்கு, தி.மு.க. காங்கிரஸ் எம்.பி.க்களை இவர் கொழும்புக்கு அனுப்பினார்.இது எந்தக் கட்டத்தில் என்பதுதான் வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் வெளி யுறவு அமைச்சர்கள், ஐ.நா. பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதி, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதி நிதிகள், ஐ.நா. மனித உரிமை ஆணைய அதிகாரிகள், சர்வதேச பத்திரிகையாளர் கள் யாரையும் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு இருந்த மக்களைப் பார்க்க இராசபக்சே அனுமதிக்கவில்லை. ஏன், அந்தப் பகுதிக்கான தமிழ் எம்.பி. களையும் அனுமதிக்கவில்லை. ஆனால், கருணாநிதி அனுப்பிய தூதுக்குழுவை மட்டும் இராசபக்சே வரவேற்றது எப்படி? ஏன்? அவர்களுக்கு விருந்து உபச்சாரம் அளித்தது ஏன்? அடுக்கடுக் கான இந்தக் கேள்விகளுக்கு கருணா நிதியின் பதில் என்ன?

தூதுக்குழு சென்று வந்தபிறகு கருணாநிதி வெளியிட்ட அறிக்கை இராசபக்சேவை பெரும் சங்கடத்திலிருந்து காப்பாற்றியது என்பது உண்மை. 27-5-09 அன்று ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இராசபக்சே ராணுவத்தின் மனித உரிமை மீறல் குறித்த விசாரணையில் பேசிய இலங்கையின் பிரதிநிதி, ''எங்கள் நாட்டுக்கு அருகில் இருக்கும் இந்தியா வைச் சேர்ந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் தூதுக்குழுவை அனுப்பிப் பார்வையிட்டு வன்னி முகாம்களில் சிற்சில குறை களைத் தவிர பெருமளவு முகாம்கள் நல்ல முறையில் நடத்தப்படுவதாகவும் தமிழ் மக்கள் அவரவர்கள் ஊர்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்பதை நம்பு வதாகவும் அறிக்கை தந்துள்ளார். ஆனால் இலங்கைக்கு தொலைவில் உள்ள மேற்கு நாடுகள்தான் உண்மை தெரியாமல் எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றன'' என்று கூறினார். ஆக இராசபக்சேவுக்கு ஒவ்வொரு முறையும் இக்கட்டான நிலை ஏற்படும்போ தெல்லாம் அவரைக் காப்பாற்ற இவர் உதவுகிறார் என்பதுதான் அப்பட்டமான உண்மையாகும்.

இராசபக்சேவை உலக நாடுகள் எல்லாம் போர்க்குற்றவாளி எனக் குற்றம் சாட்டுகின்றன. பத்துக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் அடங் கிய டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் இராச பக்சேவைப் போர்க்குற்றவாளி எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளனது. அவர் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கிமூன் அமைத்த விசாரணைக் குழுவை பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வரவேற்றுள்ளன. ஆனாலும் அக்குழுவை இலங்கைக்குள் அனு மதிக்க இராசபக்சே மறுத்துவிட்டார். இதுதான் இப்போதைய முக்கிய பிரச்னை. இராசபக்சேவின் செயலைக் கண்டித்தோ ஐ.நா. குழுவை வர வேற்றோ கருணாநிதி ஒரு வார்த்தை கூடப் பேசாதது ஏன்? இராசபக்சேவைக் கண்டிக்க மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் தராதது ஏன்?

''இலங்கையில் சகோதர யுத்தம் நடக்காமல் இருந்தால் வரலாறு வேறு வடிவம் பெற்றிருக்கும் என ஆதங் கத்தோடுதானே முதல்வர் சொல்கிறார்?''

சரியாகச் சொன்னால் மதுரை டெசோ மாநாடு முடிந்த பிறகு 1986ஆம் ஆண்டு மே மாதம் ஈழத்தில் மோதல் ஏற்பட்டது. 'ரா' உளவுத்துறைதான் அதற் குக் காரணம். டெலோ இயக்கத்துக்கு ஏராளமான ஆயுதங்களைக் கொடுத்து, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மோதும்படி தூண்டிவிட்டது 'ரா'. அதன் படி அவர்கள் ஆங்காங்கே விடுதலைப் புலிகளைச் சுட்டார்கள். சிலரைப் பிடித் துக்கொண்டு போனார்கள். அப்போது விடுதலைப் புலிகளின் சார்பில் இது குறித்து டெலோ தலைவர் சிறீசபாரத்தி னத்திடம் பேச்சு நடத்த கேப்டன்

லிங்கத்தை தளபதி கிட்டு அனுப்பி வைத்தார். சமாதானப் பேச்சு நடத்தச் சென்ற லிங்கத்தின் இரு கண்களையும் தோண்டி எடுத்து, அவரைக் கொடூர மாகக் கொலை செய்தார் சிறீசபாரத்தி னம். இதற்குப் பதிலடியாகத்தான் விடுதலைப்புலிகளின் தாக்குதல் நடந்தது. போராளிகளுக்கு இடையிலான மோதலுக்கு உண்மையான காரணம் 'ரா' உளவுத்துறைதான் என்பதை கருணாநிதி ஆரம்பம் முதலே மறைத்துப் பேசுகிறார்.

தமிழகத்தில் அனைத்து போராளி இயக்கங்களும் இயங்கியபோதுகூட அவர்களுக்கிடையில் பிளவை ஏற்ப டுத்த முயன்றவரும் கருணாநிதி தான். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது 1983 சூலையில் எல்லா போராளிக் குழுக்களின் தலைவர்களை யும் அழைத்து ஒற்றுமையை உண்டாக்க முனைந்தார். அவர் அழைத்தது தெரிந்ததும் அதுவரை போராளிகள் குழுக்களைச் சந்திப்பதை தவிர்த்துவந்த கருணாநிதி, அவர்கள் எம்.ஜி.ஆரைச் சந்திப்பதற்கு முந்தைய நாளில் தன்னை வந்து சந்திக்குமாறு கருணாநிதி அழைத் தார். இவரின் அழைப்பை ஏற்று டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ் குழுவினர் மட்டுமே சென்றனர். இச் சந் திப்பை பத்திரிகைக்கு கருணாநிதி தந்து விளம்பரம் தேடினார். விடுதலைப் புலிகள் மட்டுமே முதலில் அழைத்த எம்.ஜி.ஆரை திட்டமிட்டபடி சந்திக்க வேண்டும் என முடிவெடுத்துச் சந்தித்தனர்.

தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கும், அதி.மு.க.வுக்கும் இடையிலான போட்டா போட்டியில் போராளி இயக்கங்களைப் பிளவு படுத்தியவர் கருணாநிதியே ஆவார். பலமுறை தன் கட்சிக் கண்ணோட்டத்தில் ஈழத்தமிழர்களைப் பிளவுபடுத்தியவர் இவரேதான். போராளி களின் சகோதரச் சண்டை பற்றிப் பேசும் இவர். முதலில் தன் குடும்பத்தில் நடக்கும் சகோதரச் சண்டையை நிறுத்தட்டும்'' என்றார் நெடுமாறன்.

Wednesday, September 15, 2010

மலேசியத் தமிழ் நெறிக் கழக பெங்காளான் உலு கிளையின் ஏற்பாட்டில் நடந்த தமிழ் நெறி இளந்தையர்ப் பயிற்சிப் பாசறை



































மலேசியத் தமிழ் நெறிக் கழக பெங்காளான் உலு கிளையின் ஏற்பாட்டில் நடந்த தமிழ் நெறி இளந்தையர்ப் பயிற்சிப் பாசறை. மலேசியத் தமிழ் நெறிக் கழக தேசியப் பொருளர் மு.தமிழ்வாணன், தேசியப் பொதுச்செயலர் கனல்வீரன், தேசிய அமைப்புச்செயலர் கண்ணித்தமிழன், தேசிய இளஞர் பிரிவு செயலர் தமிழ்ச்செல்வம் முதலானோரால் மிகச்சிறப்பாக இப்பயிற்சிப் பாசறை வழிநடத்தப் பெற்றது.

Wednesday, September 8, 2010

தொல்காப்பியம் இருக்குவேதத்திற்கு முந்தையது! - முனைவர் க. நெடுஞ்செழியன்

தொல்காப்பியம் இருக்குவேதத்திற்கு முந்தையது!
- முனைவர் க. நெடுஞ்செழியன்
19-ஆம் நூற்றாண்டின் இறுதி யில் (கி.பி.1875) அறிஞர் பர்னல் இரண்டு ஆய்வு நூல்களை வெளியிட்டார். அவற்றுள் ஒன்று, 'தென்னிந்திய எழுத்தி யல் வரலாறு.' மற்றொன்று 'அய்ந்திரப் பள்ளியைச் சார்ந்த இலக்கண ஆசிரி யர்கள்.' இவ்விரு நூல்களுள், இந்திய எழுத்தியல் வரலாறு எனும் நூலில் 'பிராமி முதலான இந்திய எழுத்து வடிவங்களுக்குத் தமிழே அடிப்படை' என்பதை உறுதி செய்திருந்தார். ஆனால் எழுத்தியல் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் இவரின் கருத்தைக் கூடுமானவரை புறக்கணித்தனர். 'அய்ந்திரப் பள்ளியைச் சார்ந்த இலக்கண ஆசிரியர்கள்' (ஒய் ற்ட்ங் ஆய்ண்க்ழ்ஹ நcட்ர்ர்ப் ர்ச் நஹய்ள்cழ்ண்ற் ஏழ்ஹம்ம்ஹழ்ண்ஹய்ள்) என்ற நூலில், 'அய்ந்திரம் என்பது ஒரு சிந்தனைப் பள்ளியே தவிர அது ஒரு தனிமனிதரால் செய்யப்பட்ட இலக்கண நூல் அன்று' என்றார். மேலும் அய்ந் திரம் என்ற இலக்கண நூல் இந்திரன் என்ற கடவுளால் அல்லது தனிமனித ரால் இயற்றப்பட்டது என்பதற்கான எவ்விதச் சான்றும் கிடைக்கவில்லை என்றும் உறுதி செய்திருந்தார். ஆனால் இந்திய அறிஞர்கள், ஏ.சி. பர்னல் அவர் களின் கூற்றை ஒரு தலையாக 'அய்ந் திரம் என்பதைப் பாணினிக்கும் காலத் தால் முற்பட்ட சமற்கிருத இலக்கண நூலாகவே' கருதிவிட்டனர்.

அய்ந்திரத்தைச் சமற்கிருத 'மொழியிலமைந்த இலக்கணப் பள்ளி யாகப் பர்னல் குறிப்பிட்டாலும் கூட, அவர் தரக்கூடிய எடுத்துக்காட்டுகள் அக்கருத்தை வலியுறுத்தக்கூடிய வகை யில் அமையவில்லை. அவர் குறிப்பிடும் அவ் எடுத்துக்காட்டுகளுள் தலையா யவை இரண்டு. ஒன்று பெளத்த இலக்கியமாகிய 'அவதான சாதகத்தில்' புத்தரின் தலைமாணாக்கருள் ஒருவராகிய சாரிபுத்தன் தமிழ்நாட்டில் தன் பிள்ளைப் பருவத்தில் 'அய்ந்திரம் கற்றான்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகும். இதனை விளக்கும் சக்கரவர்த்தி நயினார், 'அய்ந் திரம் என்பதற்கு உலகாய்தம் எனப் பொருளுரைத்தார் (அ. சக்கரவர்த்தி நயினார், நீலகேசி நூலுக்கான ஆங்கில முன்னுரை (ஆய் ஒய்ற்ழ்ர்க்ன்cற்ண்ர்ய் ற்ர் சங்ங்ப்ஹந்ங்ள்ண்). சக்கரவர்த்தி நயினார், அய்ந்திரத்தை உலகாய்தம் எனக் குறிக்க அவரின் ஆங்கில முன்னுரையைத் தமிழ்ப்படுத் திய பேராசிரியர் நா. வானமாமலை, உல காய்தம் என்பதைப் பூதவாதம் எனக் குறித்தார்.

உலகாய்தம், பூதவாதம் ஆகிய இரண்டும் ஒரு பொருள் குறிப்பன. அவை நிலம், நீர், தீ, வளி, விசும்பு என்ற அய்ந்து பூதங்களின் இயல்பை விளக்கிய அணுக்கோட்பாடுகளாகும். அறிவியலையும் தருக்கவியலையும் இணைத்த இக்கோட்பாடுகள் பேச்சுக் கலைக்குச் சிறப்பிடம் தந்தன. தருக்க முறையினால் உண்மையை நிலைநாட்ட வேண்டிய தேவை இருந்ததால் இக் கொள்கையாளர்கள் பேச்சுக் கலைக்குச் சிறப்பிடம் தந்தனர். இதனை விளக்கும் வகையில் அறிஞர் பர்னல் தரும் மற்றொரு சான்று பாணினி பற்றியதாகும்.

காஷ்மீரைச் சார்ந்த சோமதேவா என்பவர் எழுதிய கதாசரிதசாகரம் எனும் நூலிலிருந்து தரும் எடுத்துக்காட்டு அதுவாகும். இந்நூலில் 'சமற்கிருத இலக் கண ஆசிரியராகிய பாணினி அறிவிலியாக இருந்தார் என்றும், அதனால் வரரு சிகாத்தியாயனார் நடத்திய குருகுலத்திலிருந்து விலக்கப்பட்டார் என்றும், அப்படி விலக்கப்பட்ட பாணினி சிவனை நோக்கித் தவம் இருந்தார் என்றும், சிவன் அருளைப் பெற்றபின் மீண்டும் குருகுலத்திற்கு வந்து அவர்களோடு வாதம் புரிந்தார் என்றும் ஏழுநாட்கள் நடந்த அந்த வாதத்தில் பாணினி தோற்றார் என்றும் தன் அருள்பெற்ற பாணினி தோற்றதனால் ஆத்திரமுற்ற சிவன் குருகுலம் பின்பற்றிய அய்ந்திர நூல்களை எல்லாம் அழித்தான்' என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

மேற்காட்டிய இரண்டு சான்று களுமே அய்ந்திரம் அணுக்கோட்பாடு என்பதையும், அவ் அய்ந்திரம் தருக்க முறையில் வாதமுறையை விளக்கிய பேச்சுக்கலையின் இலக்கணம் என்ப தையும் வற்புறுத்தக் காணலாம். எனவே பனம்பாரனார் 'அய்ந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' எனக் குறிப்பது தொல் காப்பியர் பின்பற்றிய மெய்யியலின் அடிப்படை என்பதும், அம்மெய்யியல் தருக்க முறையினை உள்ளடக்கியது என்பதும் தெளிவு. இதனை,

நிலம்நீர் தீவளி விசும்போ டைந்தும்

கலந்த மயக்க முலக மாதலின்

எனும் நூற்பா உறுதிசெய்யும். தொல் காப்பியர் பொருளதிகாரத்தின் இறுதியில் விளக்கும் பத்து அழகு, காட்சி, ஐயம், தெளிவு முதலான தருக்கவியல் இலக்கணங்கள், 32 தந்திர உத்திகள் ஆகிய செய்திகள் யாவும் அக்கருத்தை உறுதிப்படுத்தும் சான்றுகளாகும்.

தொல்காப்பியம் இலக்கண நூலாதலால் அய்ந்திரத்தையும் இலக் கண நூலாகவே கருதிவிட்டனர் அறிஞர் கள். அப்படிக் கருதிய அறிஞர்கள்கூட அய்ந்திரத்தைச் சமற்கிருத நூலாகக் கருதவில்லை. பெளத்த வரலாற்றாசிரி யராகிய தாரநாதர், ''இந்நூல் மிகவும் பழ மையானது; தென்னகத்தில் வழங்கியது; கடவுள் உலகைச் சார்ந்தது; ஆரிய தேசத்தது அன்று'' என உறுதி செய்வார்.

தாரநாதரைப் போலவே இருக்கு வேதத்தையும் தொல்காப்பியத்தையும் ஒப்பாய்வு செய்த எம். சுந்தர்ராஜ், அய்ந் திரத்தைத் தமிழ் இலக்கண நூலாகக் கருதினாலும், அது இருக்கு வேதத்திற்கு முந்தையது என்று உறுதிசெய்கிறார் (ஓங்ம்ள் எழ்ர்ம் டழ்ங்லிஐண்ள்ற்ர்ழ்ண்c டஹள்ற்). எனவே அய்ந்திரம் என்பது இலக்கண நூலன்று. அது அணுவியலும் தருக்கவியலும் சார்ந்த அறிவுமரபுக்குரியது என்பது தெளிவாகும். ஒருவேளை அதை இலக் கண நூலாகக் கருதினாலும் கூட அது இருக்குவேதத்துக்கு முந்தைய தமிழ் மரபுக்குரியது என்பதே மாற்று உண்மை. இருக்குவேதம் எழுதாக்கிளவியாக வாய்மொழியாகவே வழங்கப்பட்டுள்ளது. சமற்கிருதத்திற்கு இன்றைய வரிவடிவம் அமைந்ததே மிகவும் பிற்காலத்தில்தான். எனவே எழுத்துமுறையே இல்லாத ஒரு மொழியில் எழுத்துகள் பற்றிய இலக் கணம் எப்படி இருந்திருக்க முடியும்?

மேலும் பானம்பாரனார், தொல் காப்பியரை 'முந்துநூல் கண்டு முறைப் பட எண்ணிப் புலம் தொகுத்தவராகப்' புகழ்கின்றார். இங்கு சொல்லப்படும் 'முந்துநூல்' என்பதில் தொல்காப்பியரின் இலக்கணப் புலமையும் அடங்கிவிடும். அதனால் அய்ந்திரம் என்பதை நாம் இலக்கண நூலாகக் கருதவேண்டியது இல்லை. அப்படிக் கருதினால் பனம்பார னார் 'கூறியது கூறல்' எனும் குற்றம் புரிந்தவராகிவிடுவார்.

நான்மறை

அதங்கோட்டாசான் நான்மறை முற்றியவர். இந்நான்மறை என்பது நச் சினார்க்கினியர் குறிப்பிடும் தைத்திரியம், பெளடிகம், தலவகாரம், சாமவேதம் எனும் கருத்தும் அண்மைக்கால ஆய்வு களால் மாற்றம் பெற்றுள்ளன. இருக்கு, யஜுர், சாம, அதர்வணம் என நான்காக எண்ணப்படும் முறை மிகவும் பிற்கால வழக்காகும். சாணக்கியரின் பொருள்நூல், வேதங்கள் மூன்று மட்டுமே என்ற பொரு ளில் ''திரையீ'' எனக் குறிப்பிடுகின்றது. அதனால், நான்மறை முற்றிய அதங் கோட்டாசான் என்ற தொடர்கூட ஆய் வுக்குரியதாகிறது. மாகறல் கார்த்திகேய னார், 'நான்மறை என்பதற்கு மூலமறை' எனப் பொருள்கொள்வதையும் இங்கே எண்ணிப்பார்க்க வேண்டும்.

மயங்காமரபின் எழுத்துமுறை காட்டி

பனம்பாரனாரின் பாயிரம் அரிய கருத்துப்புதையலின் திறவுகோலாகும். அறத்தைப் பரப்பும் இயல்பும், வேதப் புலமையில் தேர்ச்சியும் உடைய அதங் கோட்டாசானுக்குத் தொல்காப்பியர், 'மயக்கம்தராத மரபினை உடைய தமிழ் எழுத்துமுறையினைக் காட்டினார்' எனக் குறிப்பது மிகுந்த கவனத்துடன் ஆராயத் தக்கதாகும். வேதத்தில்வல்ல அதங்கோட் டாசானுக்குத் தொல்காப்பியர் தமிழ் எழுத்துமுறையைக் காட்ட வேண்டிய தேவை ஏன் வந்தது? இக் கேள்விக்கான நுட்பத்தை அறிஞர் டி.டி. கோசாம்பி விளக்கக் காணலாம். அவர் தம் நூலில்,

'கி.மு. 14ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியின்போது, தென்னிந்தி யாவில் இருக்குவேதப் பாசுரங் கள் சரியானபடி தொகுத்து ஒழுங்கு செய்யப்பட்டதுடன் எழுத்து வடிவம் பெற்றுக் குறிப் புரையும் வழங்கப்பட்டது. அதற்கு முன்னர் இருக்குவேத மூலத்தைச் செவிவழியே கேட்டு அப்படியே அசை உச்சரிப்புடன் ஒப்பிக்கும் வழக்கமே இருந்தது.... ஆனால் பொதுவாக இது எழுத்து வடிவத் தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட வில்லை.'

எனக் குறிக்கின்றார். இருக்குவேதம் கி.மு. 14ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டு எழுத்து வடிவில் கொண்டுவரப்பட்டது தென்னாட்டில்தான் எனும் டி.டி. கோசாம் பியின் கூற்றைப் பனம்பாரனாரின் மயங்காமரபின் எழுத்துமுறை காட்டி என்ற கூற்றோடு எப்படிப் பொருத்திப் பார்க்காமல் இருக்கமுடியும்?

வேதத்தை உச்சரிக்கும் முறை

தமிழ் எழுத்துமுறையின் சிறப்பை அறியாத ஒருவருக்கு எழுத்துக்களின் எண்ணிக்கை, அவை பிறக்கும் இடம் ஆகியவற்றை விரிவாக விளக்கக்கூடிய வகையிலேயே தொல்காப்பியர் எழுத்த திகாரத்தின் பிறப்பியலை அமைத் துள்ளார். அதங்கோட்டாசான் வேதம் வல்லவராதலால் வேதத்தை ஒலிக்கும் உச்சரிப்பு முறையை எடுத்துக்காட்டி, அப்படி உச்சரிக்கும் முறைக்கும், தமிழ் எழுத்துக்களுடைய பிறப்பிடம், அவற்றின் மாத்திரை (உச்சரிக்கும் கால அளவு) ஆகியவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்கக்கூடிய வகையில் இரு நூற்பாக்களை அமைத் துள்ளார். அவை,

எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து

சொல்லிய பள்ளி யெழுதரு வளியின்

பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்(து)

அகத்தெழு வளியிசை யரில்தப நாடி

அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே - நூற்பா - 102.

அஃதிவண் நுவலா தெழுந்துபுறத் திசைக்கும்

மெய்தெரி வளியிசை அளபுநுவன் றிசினே

- நூற்பா - 103.

என்பனவாம். இந் நூற்பாக்கள் இரண்டும் சமற்கிருத ஒலிப்புமுறை, தமிழ் எழுத்து முறைக்கு மாறானது என்பதைப் புலப்படுத்துகின்றன. 'வேதத்தின் ஒலிப் புமுறை பற்றி நான் விளக்க வரவில்லை; மாறாகப் பொருண்மை தெரிகின்ற காற்றினால் ஆகிய தமிழ் எழுத்தின் (மாத்திரையின்) அளவினைக் கூறினேன்' என உறுதி செய்கின்றார். தொல்காப்பியத்தின் அந்நூற்பாக்களுக்கு 'வேதத்தின் ஒலிப்புமுறை பொருள்தெரியா நிலைமை ஆகலின் அவற்றிற்கு அளவு கூறமாட்டார்கள்' என்று உரையாசிரியர் இளம்பூரணார் தரும் விளக்கமும் எண்ணத்தகும். இதனால், அதங்கோட்டாசான் காலத்தில் வேதம் எழுத்து வடிவைப் பெறவில்லை என்பதும், அதன் காரணமாகவே தொல்காப்பியர் மயக்கம் தராத மரபினை உடைய தமிழின் எழுத்துமுறையைக் காட்டினார் என்பதும் உறுதியாகின்றது.

தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையும் வேதக் கடவுளரின் எண்ணிக்கையும்

வேதக் கடவுள்களின் எண் ணிக்கை 33 என்பதை இருக்குவேதம், அதர்வண வேதம் ஆகியவையும் அவற் றின் வழியாகத் தோன்றிய பிராமணங் களும் உறுதிசெய்கின்றன. அவை,

ஆதித்தியர்கள் 12

வசுக்கள் 8

உருத்திரர்கள் 11

வசத்காரர் 1

பிரஜாபதி 1

என்பன. 33 என்ற எண்ணிக்கை வேதநூல்களில் வரையறுக்கப்பட்ட தற்கான காரணத்தை ஆராயும் சுந்தர்ராஜ் அம் முப்பத்து மூன்றும் தொல்காப்பியர் குறிப்பிடும்

உயிரும் உடம்புமாம் முப்பது முதலே

சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.

எனும் நூற்பாவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்பதைத் தம்நூலில் (தண்ஞ் யங்க்ண்c நற்ன்க்ண்ங்ள் ஆக்க்ங்ய்க்ஹம்) விரிவாக விளக்கியுள்ளார். ஆதித்தியர்கள் 12 என்பது தமிழின் 12 உயிர் எழுத் துக்களே என உறுதி செய்யும் அவர், வசுக்கள் பற்றியும் தக்க சான்றுகளுடன் ஆராய்ந்துரைக்கிறார். 'வழு' என்னும் தமிழ்ச்சொல்லே 'வசு' என ஆகியதை அறிஞர்கள் எமனோ, பர்ரோ தொகுத்த 'திராவிட வேர்ச்சொல் அகராதி'யிலிருந்து (உங்க்.4336) எடுத்துக்காட்டி நிறுவு வார். இந்த வசுக்கள் மொழிக்கு முத

லில் வாரா தமிழ் மெய்யெழுத்துக்கள் என்பதும் இந்த எட்டும் தொல் காப்பியருக்குப் பிந்திய வழக்கு என்பதும் இங்கே எண்ணத்தகும்.

'க' எனும் மெய்யெழுத்து

இருக்குவேதக் கடவுள்களில் ஒன் றாகக் குறிக்கப்படுவது 'க' என்பதாகும். இக்கடவுளைப் பற்றிய வரலாறு தெரி யாமல் அறிஞர்கள் குழம்பியுள்ளனர். (இராகுல சாங்கிருத்தியாயன், ரிக்வேத கால ஆரியர்கள்) பிரஜாபதியாகக் கருதப் படும் 'க' என்பது தமிழ் உயிர் மெய் எழுத்தான 'க' வேயாகும். சங்க காலத்தில் 'க' என்பது ற் என எழுதப்பட்டது. இவ் வடிவத்தையே மனித உருவிலிருக்கும் 'க' வே என இருக்குவேதம் போற்று வதை ஆய்வுகள் உறுதிசெய்கின்றன.

இந்திரனும் வருணனும்

இருக்குவேதத்தில் இரட்டைக் கடவுளராகக் குறிக்கப்படுபவர்கள் இந்தி ரனும் வருணனும் ஆவர். இருவருள் ளும் இந்திரனே போர்க் கடவுளாகவும், மழைக்கடவுளாகவும் போற்றப்படு கின்றான். ஏறத்தாழத் தலைமைத் தெய்வ மாக வணங்கப்படும் இந்திரன் இருக்கு வேதத்தின் இடைப்பகுதியில் அறிமுக மாகித் திடீரெனக் காணாமல் போய் விடு கிறான். இவ்வாறு இந்திரன் புறக்கணிக் கப்படுவதற்கான காரணம் பெரும்புதிராக இருப்பதாக அறிஞர் அம்பேத்கர் (அம் பேத்கர் சிந்தனைகள்-8) குறிப்பிடுவார். திடீரென்று மறைந்துவிடுவது மட்டு மின்றி அகலிகை, இந்திரன் தொடர்பின் வாயிலாக இந்திரனுடைய ஒழுக்கமும் சிதைக்கப்படுகிறது. இந்திரனுடைய புகழ் சிதைக்கப்படும் அதே நேரத்தில், வைதிக எதிர்ப்பை அடிப்படையாகவும் ஆரியர் வருகைக்கு முற்பட்ட சிந்தனை மரபைச் சார்ந்தனவாகவும் கருதப்படும் ஆசீவக, சைன, பெளத்த சமயங்கள் இந்திரனை அறிவுமரபின் மூல வடிவமாகப் போற்றுகின்றன.

தொல்காப்பியரும் இந்திரனை யும், வருணனையும் மருத, நெய்தல் திணைகளின் கடவுள்களாகப் போற்று வார். தொல்காப்பியர் குறிப்பிடும் அதே பொருளிலேயே அதாவது மழைத் தெய்வமாக இந்திரனும் கடல் தெய் வமாக வருணனும் குறிக்கப்படுவதைப் போலவே இருக்குவேதமும் அவர் களைப் பற்றிக் குறித்துள்ளது. இவை எல்லாவற்றையும்விட இருக்குவேதம் இந்திரனையும் வருணனையும் அசுரர் களாகவே (இருக்குவேதம்: முதல் மண்டலம் 174-1, 7-36:2) குறித்துள்ள தும் எண்ணத்தகும். இருக்குவேதத்தில் குறிக்கப்படும் அசுரர்கள் வைதிக எதிர்ப்பாளர்கள் என்பதை அறிஞர்கள் (தருமானந்த கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா) உறுதி செய் துள்ளனர். எனவே தொல்காப்பியர் குறிப்பிடும் தமிழ் மக்களின் நிலத்தெய் வங்களான இந்திரனையும் வருண னையும் இருக்கு வேதம் அப்படியே தழுவி அதே பொருளில் அமைத்துக் கொண்டது என்பது உறுதியாகிறது. கடல் வழிப்பயணத்தை அறியாத இருக்குவேதப் புலவர்கள் வருணனைக் கடற்பயண வழிகாட்டியாகக் குறிப் பதைப் பாவாணர் சுட்டிக்காட்டி விளக்குவதும் இங்கே எண்ணத்தகும்.

ஆறுபருவங்கள்

தமிழ்மரபில் பன்னிரண்டு மாதங்கள் கொண்டது ஓராண்டாகும். இதனை இரண்டு இரண்டு மாதங்கள் கொண்ட ஆறு பருவங்களாக வகைப் படுத்துவார் தொல்காப்பியர். இருக்கு வேதத்தில் பதின்மூன்று மாதங்கள் கொண்டு ஆண்டுமுறை ஒன்றும் பன்னிரண்டு மாதங்கள்கொண்ட ஆண்டுமுறை ஒன்றுமாக இரண்டு வகையான ஆண்டுமுறைகள் குறிக்கப் பட்டுள்ளன. இவற்றுள் பன்னிரண்டு மாதங்களையும் ஆறு பருவங்களையும் கொண்ட ஆண்டுமுறை தமிழர்களிட மிருந்து இருக்குவேதம் கடன் கொண்டது என்பதை இருக்குவேத ஆராய்ச்சியாளராகிய கிரிஃபித் (ஏண்ழ்ண்ச்ச்ண்ற்ட்) உறுதி செய்துள்ளார். இருக்குவேதத்தில் குறிக்கப்படும் விஷ்ணு, பூசன் ஆகிய புகழ்மிக்கக் கடவுள்களின் பெயர்கள் யாவும் தமிழ் வேர்ச்சொல்லின் அடி யாகப் பிறந்தவை என்பதைச் சொல்லியல் அறிஞர்கள் எமனோவும் பர்ரோ வும் விளக்கியுள்ளனர் (உஊஉ) இருக்கு. வேதத்தில் பொருள்தெரியாத பல சொற்களுக்கும் தமிழே மூலமாக இருப்பதை அக்கினிகோத்திரம் தாத்தாச்சாரியர் (ஒய்ற்ழ்ர்க்ன்cற்ண்ர்ய் ற்ர் தண்ஞ் யங்க்ண்c ள்ற்ன்க்ண்ங்ள்) தெளிவுபடுத்தியுள்ளார். இருக்கு வேதம் எனும் பெயரில் உள்ள முதல் எழுத்தான 'ரி' தமிழின் சிறப்பெழுத்துக் களில் ஒன்றான (ற) 'றி' எனும் எழுத் தின் திரிபே என்பார் எம். சுந்தர்ராஜ்.

இவ்வாறு, பல்வேறு சான்று களைக் கொண்டு காணும்போது இருக்குவேதம் தமிழியற் சூழலிலேயே தொகுக்கப்பட்டது என்பது தெளி வாகும். இக்கருத்தினை,

'தமிழுக்கும் இருக்குவேதத் திற்கும் இடையே காணப்படும் நெருக்கத்திற்கான காரணம் ஏதோ தற்செயலாக ஏற்பட்ட ஒற்றுமை என்று யாரும் கருதி விடக் கூடாது. தமிழ்ப் பண் பாட்டுக் கூறுகள்தாம் மாறு வேடம் அணிந்தோ, அல்லது முகமூடி போட்டுக் கொண்டோ இருக்குவேதத்தில் உள்ளன என்பதற்கு நாம் வெளிப்படை யான சான்றுகளைக் கொண் டுள்ளோம்...

சமற்கிருத மொழியும் அதன் இலக் கிய மரபுகளும் தமிழியத்தையே அடிப்படையாகக் கொண்டவை. இதன் விளைவாக ஒரு கலப்பு மொழி (ஙண்ஷ்ங்க் கஹய்ஞ்ன்ஹஞ்ங்) தோற்றம் கொண்டது. அதைத்தான் நாம் இப்போது சமற்கிருதம் என்று அழைக்கின்றோம். இந்த மொழி யில் அமைந்த இலக்கியங்களுக்கு உரிய உள்ளடக்கத்தை வழங்கிய ஆசிரியர்கள் அனைவரும் தமிழர் களே', என வரையறை செய்வார் எம். சுந்தர்ராஜ்.

இருக்கு வேதத்தில் தமிழியக் கூறுகள் மிகுதியாக இடம் பெற்றமைக் கான காரணம் அது தென்னாட்டில் தொகுக்கப்பட்டது மட்டுமல்ல; தொல் காப்பியர் விளக்கிக்காட்டிய தமிழ்எழுத்து முறையில் அது தொகுக்கப்பட்டதே ஆகும். ஓர் இனத்தின் எழுத்து முறை யைக் கடன்பெறும் இனம், எழுத்தை மட்டுமல்லாது அவ் எழுத்துமுறைக்குரிய பண்பாட்டுக் கூறுகளையும் கடன்பெறு வது இயல்பு. ஜப்பானியப் பண்பாட்டில் தமிழ்ப் பண்பாட்டுத் தாக்கம் மிகுதியாக இருப்பதற்கான காரணமும், ஜப்பானிய எழுத்துமுறை, தமிழ் எழுத்துமுறையைப் பின்பற்றி அமைந்ததால்தான் என்பதையும் இங்கே நாம் எண்ணிப்பார்கக வேண்டும்.

தொல்காப்பியத்தின் பழமை

இருக்கு வேதம் முதன்முதலாகத் தென்னாட்டில் எழுத்து வடிவில் தொகுக் கப்பட்டு குறிப்புரைகளும் எழுதப்பட்டன எனவும், அக்காலம் கி.மு. 14 ஆம் நூற் றாண்டு எனவும் டி.டி. கோசாம்பி கூறுவ தாலும், இருக்குவேதம், தொல்காப்பியர் கூறும் தமிழ் எழுத்திலக்கணம் முதலான இலக்கணக் கூறுகளைத் தழுவி அமைந் துள்ளதாலும், இருக்குவேதம் தொகுக்கப் பட, அதாவது தொல்காப்பியர் விளக்கிய எழுத்துமுறையை வேதமொழிக்குரிய வகையில் வடிவமைத்து, அதனடிப்படை யில் வேதத்தை எழுத்துவடிவில் கொண்டுவரக் கொஞ்சம் கால இடை வெளி தேவைப்பட்டிருக்கும். எனவே, தொல்காப்பியம் இருக்கு வேதத்திற்கு முற்பட்டது என்பது தெளிவு.

தொல்காப்பியர் குறிப்பிடும் வழி பாட்டு முறைகளான கொடிநிலை, கந்தழி, வள்ளி எனும் மூன்றும் தந்திர வழி பாட்டுக்குரியன என்பதையும், அவை முறையே சிந்துவெளி அகழாய்வில் கண்டெடுக்கப் பெற்ற லதாசாதனம் (லதா - கொடி, சாதனம் - நிலை) இலிங்கம், பகயாகம் எனும் சகம்பரி (ஆறு வகையான செல்வங்களை வழங்கும் வள்ளன்மை மிக்க தந்திரச் சடங்கு) எனவும் அடையாளம் காணப் பட்டுள்ளன. சிந்துவெளி எழுத்துமுறை பற்றி ஆராய்ந்த உருசிய நாட்டு அறிஞர்கள், அவ்எழுத்துமுறை தொல்காப்பியர் காட்டும் இலக்கண அமைதியோடு மட்டுமே பொருந்துகிறது என்பதை முப்பது ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்தனர். (பட்ங் ஐண்ய்க்ன்

15லி4லி80).

கி.மு. எட்டாம் நூற்றாண்டில் பிரா மணங்கள், ஆரண்யங்கள், தர்மசாத்திரங் கள் முதலான வைதிக இலக்கியங்கள் தோன்றின. இவை உருவாக்கிய சமூகக் கோட்பாடுகளுக்கு மறுப்பாக ஓர் அறிவுப் புரட்சி தோன்றியது. அப்புரட்சியைப் பரிவிராசகர் அமைப்பு நாடுமுழுவதும் கொண்டு சென்றது. அவ் அமைப்பின் மூலவர் எண்ணியக் கோட்பாட்டின் நிறுவனராகிய கபிலர் ஆவார். எண்ணியம் (சாங்கியம்) தொல்காப்பிய அய்ந்திர மரபிலிருந்து கிளைத்தது. வேத வேள்வி எதிர்ப்பும், அணுவியலும், கடவுள் மறுப்பும், எண்ணியத்தின் கூடுதல் அடிப்படை. இவ் எண்ணியம் கி.மு. ஆறாம் நூற்றாண் டில் ஆசீவகத்தோடு இணைந்தது. அதனால் கி.மு. 8ஆம் நூற்றாண்டிலோ, அல்லது அதற்குப் பின்போ தொல் காப்பியம் இயற்றப்பட்டிருக்குமானால் எண்ணியத்தின் தாக்கம் அல்லது ஆசீவகத்தின் தாக்கம் அதில் இருந்தாக வேண்டும். ஆனால், அப்படி ஒரு சுவடே தொல்காப்பியத்தில் இல்லை.

எனவே மெய்யியல், பண்பாட்டி யல், தருக்கவியல், எழுத்தியல், தொல்லியல் முதலான அனைத்துத் துறைகளின் அடிப்படையில் ஆராய்கின்றபோது, இருக்குவேதத்திற்கு மட்டுமல்ல. உலகில் எழுதப்பெற்ற நூல்கள் அனைத்திற்கும் தொல்காப்பியமே முந்தையது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை; உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.

(மேலும் கூடுதல் செய்திகளுக்கு கட்டுரையாசிரியரின் 'தொல்காப்பியம் - திருக்குறள் காலமும் கருத்தும்' எனும் நூலினைக் காண வேண்டுகிறோம்)

நன்றி தென்செய்தி

மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடந்த தமிழ்த் திருமணம்

திருமணத்தில் பயன்படுத்தப் பெற்ற முகாமைத் தட்டுகள்
மாப்பிள்ளை பெண்ணுக்கு மிஞ்சி அணிவிக்கின்றார்.

மணமகள் மணமகனுக்கு மிஞ்சி அணிவிக்கும் காட்சி

மணமகனின் தாயரிடத்து வாழ்த்து பெறும் மணமக்கள்


கணவனிடம் வாழ்த்து பெறும் மணமகள்

தன் தலைவிக்குப் போட்டிடும் தலைவன்


மங்கள நாண் அணிவிக்கும் காட்சி

மணமகனின் தாயார் தன் மகனிடம் மங்கள நாணினை வழங்குகிறார்.

தலைவனுக்கு மலர் மாலை அணிவிக்கும் தலைவி

திருக்குறளின் மீது உறுதிமொழி எடுக்கும் மணமகள்

தலைவிக்கு மலர்மாலை அணிவிக்கும் தலைவன்

தமிழ் மறையாம் திருக்குறள் மீது உறுதிமொழி எடுக்கும் மணமகன்

தன் தாயை வணங்கும் மணமகள்

தன் தாயை வணங்கும் மணமகன்

செம்பொருள் நுகர்வு செய்யும் மணமகள்

மண இணைப்பு செய்யும் இரா.திருமாவளவன் அவர்கள்



தமிழ்த் திருமணம் புரிந்த மணமக்கள்

தமிழ் மறையாம் திருக்குறள் பாடும் தமிழ் நெறிச் செல்வங்கள்.

வரவேற்புரை நிகழ்த்தும் தேசிய உதவித் தலைவர் இளஞ்செழியன்

அண்மையில் மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் அவர்கள் தலைமையில் தமிழ்த் திருமணம் ஒன்று பத்துமலையில் சிறப்பாக நடைபெற்றது. இலக்கியவாணன் தீபா எனும் பெயரிய மணமக்களே பெரியோர், சான்றோர் , உற்றார் உறவினர் முன்னிலையில் தமிழ்த் திருமணம் புரிந்து கொண்டனர். திருமணத்திற்கு வந்திருந்த பலரும் திருமணம் நடத்தப் பெற்ற முறையை பெரிதும் பாராட்டிப் பேசினர்.













Thursday, September 2, 2010

மலேசியா தெலுக் பாங்க்ளிமா கராங்கில் சிறப்பு திருக்குறள் வகுப்பு தமிழ் நெறிக் கழகக் கிளை நடத்தியது

திருக்குறள் விளக்கம் செய்யும் இரா.திருமாவளவன்
தமிழிசைப் பாடல் பாடும் கிளைத்தலைவர் பாடகர் கதிரவன்

வகுப்பில் கலந்து கொண்டவர்கள்


சொல்லாராய்ச்சி செய்யும் செல்வி அருளினி


தேன்மொழி அரசேந்திரன் கவிதை படிக்கிறார்


வான்மதி தமிழிசைப் பாடல் படிக்கிறார்


தொழிலதிபர் ஈசுவரனும் திருமாவளவனும்



தொழிலதிபர் ஈசுவரன் சிறப்பு செய்யப் படுகிறார்.


உணர்ச்சிமிகு கவிதைப் பாடும் செல்வன் பூவன்


கவிதை பாடும் செல்வி சுடர்விழி


குறள் சொல்லும் இளஞ்சிட்டு திருச்செல்வி



தலைமை ஆசிரியர் இராசசேகரனும் திருமாவளவன் அவர்களும்


தலைமை ஆசிரியர் இராசசேகரன் திருமாவளவன் அவர்களுக்குச் சிறப்பு செய்கிறார்.
அண்மையில் தெலுக் பங்க்ளிமா கராங் எனும் இடத்தில் மலேசியத் தமிழ் நெறிக் கழகக் கிளையால் ௧௫ ஆவது திருக்குறள் வகுப்பு சிறப்பாக நடத்தப் பெற்றது. இவ்வகுப்பில் ௧00 மாணவர்களும் பெரியோர்களும் தவறாது கலந்து கொள்கின்றனர். அன்றைய சிறப்பு வகுப்பில் தொழிலதிபர் ஈசுவரனும் தலைமை ஆசிரியர் இராசசேகரன் அவர் களும் எழுத்தாளர் பெரியவர் அரங்கசாமி அவர்களும் சிறப்பாகக் கலந்து கொண்டனர். கிளைத் தலைவர் கதிரவன், செயலர் செழியன், பொறுப்பாளர் கரிகாலன் முதலானோரின் முயற்சியால் இங்குத் தொடர்ந்து திருக்குறள் வகுப்பு சிறப்பான முறையில் நடத்தப் பெற்று வருகிறது.