தொடர்பாளர்கள்

Thursday, February 18, 2010

செங்குருதி காயும் முன் செம்மொழி மாநாடா? தமிழறிஞர் ம. இலெ. தங்கப்பா

செங்குருதி காயும் முன் செம்மொழி மாநாடா?

தமிழறிஞர் ம. இலெ. தங்கப்பா


ஈழத் தமிழ் மக்கள் இழந்து போன விடுதலையை மீண்டும் பெறு வதற்காக நடத்திய போர், கொடிய இனவெறியும் அரசியல் தன்னலச் சூழ்ச்சியரும் இந்தியத் தமிழ்ப் பகைக் கும்பல்களும் கூட்டுச் சேர்ந்து மேற்கொண்ட சூழ்ச்சிகளால் ஒழிக்கப் பட்டுவிட்டது. உலக நாடுகள் பேசும் மாந்த நேயமும் மக்கள் உரிமையும் எங்கோபோய் ஓடி ஒளிந்து கொண்டன.
உலகின் மிகப்பெரிய மாந்தப் பேரவலம் என்றுதான் இதனைக் கூற வேண்டும். 80,000க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர் கொல்லப்பட்டு, இன்றும் 30,000 தமிழர்கள் முள்வேலிச் சிறைக்குள் முடக்கப்பட்டுச் சொல்லொணா அவலத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர். உலகிலேயே இது வரை எங்கும் எப்பொழுதும் நடந் திராத கொடுமைகளும் இழிவுகளும் அவர்கட்கு இழைக்கப்படுகின்றன.
இட்லர் காலத்தில் யூதர்களும் கூட இவ்வளவு துன்பம் அடைந்ததில்லை. அவர்கள் கொல்லப்பட்டார்களே தவிர, உடலாலும் உள்ளத்தாலும் இவ்வளவு கொடுமைகட்கும் இழிவுகட்கும் ஆளானதில்லை. மாந்த இனமே கொதித்தெழ வேண்டிய பேரவலம். ஆயினும் மிகக் கொடிய, இரக்கமற்ற, மாந்தநேயமற்ற கல் நெஞ்சங்களும் அரசியல் சூழ்ச்சிகளும், தன்னல வெறிகளும் இனப்பகைமையும் இதன் பின்னிருந்து வேலை செய்வதால் உலகமே வாய்மூடிக்கிடக்கின்றது.
இந்த அவலத்தை நீக்குவதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில்தான் இன்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஒன்றை நடத்தப்போவதாகத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
உரோம் நகரம் தீப்பற்றி எரிகையில் நீரோ மன்னன் யாழ்மீட்டிக் கொண்டிருந்தான் என்று வரலாறு கூறும். ஈழநெருப்பு இன்னும் அவியவில்லை. இங்கோர் ஆரவார மாநாடு கூட்டப்படவிருக்கின்றது. உலக முதல் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இது தமிழ்நலம் கருதி மேற்கொள்ளப் படவில்லை. உள்நோக்கம் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர் விடுதலைப் போரில் தோல்வி அடைந்ததற்குக் காரணமே இந்திய அரசு தன் தமிழின வெறுப்பாலும் அரசியல் சூழ்ச்சிகளாலும், சிங்களன் தொடங்கிய போரைத் தானே முன்னின்று நடத்தியது தான். இவ்வாறு இந்திய அரசு ஈழத்தமிழரை ஒழிக்க முன் வந்ததற்கு ஏற்பட்ட துணிச்சல் தமிழக முதல்வர், இந்திய அரசுக்கு நூற்றுக்கு நூறு துணை நின்றதால் வந்ததுதான். தமிழக முதல்வர் நினைத்திருந்தால் இந்திய அரசு ஈழப்போரில் சிங்களனுக்கு உதவாமல் தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.தமிழக முதல்வர் நடுவணரசில் தாம் பெறும் சொந்த நலன்கட்காக ஈழத் தமிழினத்தை இந்திய அரசுக்குக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்று உலகமே பேசுகின்றது. தமிழக முதல்வரின் இனவுணர்வற்ற, இரக்கமற்ற காட்டிக்கொடுப்பும் இரண்டகத் தன்மையும் இன்று பலராலும் பழித்துரைக்கப்படுகின்றன. போருக்குப் பின்பும் முள்வேலிக்குள் முடக்கப் பட்டுக்கிடக்கும் முப்பதாயிரம் தமிழரைக் காப்பாற்றுவதில் கூடத் தமிழக முதல்வர் அக்கறை காட்டவில்லை.
இந்திய அரசோடு சேர்ந்துகொண்டு போலிக் குழுக்களை இலங்கைக்கு விடுத்துச் சிங்கள அரசின் கொடுஞ் செயல்களை மூடி மறைப்பதிலும் பூசிமெழுகுவதிலுமே முன்னின்றார். சிங்களனின் கையாளாகவே செயல்பட்டார். வரலாற்றிலிருந்து இந்த உண்மையை மறைக்க முடியாது.
இந்த நிலையில் தான் செம்மொழி மாநாடு அவரால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈழ மக்கள் விடுதலையை அழித்ததில் தம் பெயர் கெட்டுப்போன நிலையில் மக்களைத் திசைதிருப்பும் நோக்கத்துடன் தான் இது அறிவிக்கப்பட்டுள்ளது. தம் பெயரைக் காப்பாற்றிக்கொள்ள முதலில் இவர் நடத்தவிரும்பியது முன்பு மூன்று முறை தமிழகத்தில் நடந்தது போன்ற மற்றோர் உலகத் தமிழ் ஆராய்ச்சி (ஆரவார) மாநாட்டைத் தான். ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் அதற்கு ஒத்துழைப்பு நல்காமையால், அதை நடத்திப் படம் காட்ட முடியாத நிலையில், தம் அதிகாரத்துக்குட்பட்ட செம்மொழி மாநாட்டை இப்பொழுது அறிவித்துள்ளார்.
”உள்ளத்தின் அருள் உணர்வால், மக்கள் நேயத்தால் மேற்கொள்ளப்படும் செயல்களே உண்மைச் செயல்கள். பிறவெல்லாம் போலி” என்கின்றார் திருவள்ளுவர். எண்ணத்தில் தெளிவில்லாதவன் எப்படி மெய்ப் பொருளைக் காண முடியாதோ அப்படியே உள்ளத்தில் அருள் உணர்வு இல்லாதவன் அறம் செய்ய முடியாது என்கின்றார்.
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால், தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
- (கு.249) என்பது திருக்குறள்.
தமிழக முதல்வரின் அருள் உள்ளம் எப்படிப்பட்ட தென்பதை ஈழ மக்கள் விடுதலைப் போரில் அவர் ஆற்றிய அரும்பணி காட்டிக் கொடுத்துவிட்டதே. அந்த ”அருள் உள்ளம்” தான் செம்மொழி மாநாட்டை யும் அறிவித்துள்ளது. இதிலிருந்தே மாநாடு எப்படி எப்படி நடக்கும். என்ன என்ன பேசப்படும் என்பதை நன்கு தெரிந்து கொள்ளலாம். பூச்சும் புனைவுகளும் வெளிப்பகட்டும் விளம்பரமும் அங்குக் களிநடம் புரியும் என்பதை மறுக்க முடியுமா? தமிழுக்குச் செய்யவேண்டிய அடிப்படை ஆக்க வேலைகள் இன்னும் செய்யப்படவில்லை.தமிழகத்திலேயே தமிழ் கட்டாயப் பாடமாக இல்லை. தமிழ் பயிற்று மொழியாக இல்லை. ஆட்சிமொழியாகவும் இல்லை. தேவையற்ற ஆங்கில வெறியும் ஆங்கில வாணிகமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. வேற்று மொழியாளரின் வேட்டைக் காடாகத் தமிழகம் கிடந்து கொடிய சுரண்டல் கட்கு உட்பட்டு உழல்கின்றது. உயிர் நிலையான அடிப்படை வேலைகள் எல்லாவற்றையும் செய்யாமல் வெறும் பகட்டான மேற்பூச்சு வேலைகளிலேயே ஈடுபட்டுவருவது தமிழக முதல்வரைப் பல்லாண்டுக் காலமாய்ப் பிணித்துள்ள ஒரு பெருநோய் எனலாம். இப்பெருநோயின் மற்றோர் அறிகுறிதான் நடக்கவிருக்கும் செம் மொழி மாநாடு என்பதில் கடுகளவும் ஐயமில்லை

Tuesday, February 2, 2010

ஒரே மலேசியாவை ஒரு நொடியில் காலில் போட்டு மிதித்த தலைமை அமைச்சரின் சிறப்பு உதவியாளர்.


ஒரே மலேசியாவை ஒரு நொடியில் காலில் போட்டு மிதித்த தலைமை அமைச்சரின் சிறப்பு உதவியாளர்.


இன்று காலை மலாக்காவில் நடைபெற்ற ஒரே மலேசியா தொடர்பான கருத்தரங்கில் ஒரே மலேசியா கொள்கையை அறிவித்த தலைமை அமைச்சரின் சிறப்பு உதவியாளர் டத்தோ நாசிர் பின் சாபார் இந்நாட்டு இந்தியர்களையும் சீனர்களையும் மிகக் கடுமையாக இழிவு படுத்தி பேசிய பேச்சு பெரிய சருச்சையை உருவாக்கியுள்ளது.


மிக உயரிய பொறுப்பு வகிக்கும் பொறுப்புள்ள ஓர் அதிகாரி தம்முடைய பதவி நிலையினை அறியாமல் பொறுப்பற்ற முறையில் நாகரிகமற்ற முறையில் கருத்து சொல்லி இருப்பது மலேசியத் திருநாட்டிற்கும் அதன் தலைமை அமைச்சருக்கும் ஏற்படுத்தப் பட்ட இழுக்காகும். இது பற்றி மலேசியா இன்று வலைப்பக்கத்தில் வந்த செய்தி :


“இந்தியர்கள் இந்நாட்டிற்குப் பிச்சைக்காரர்களாக வந்தனர். சீனர்கள், குறிப்பாக பெண்கள், உடலை விற்க (”jual tubuh”) வந்தனர்”, என்றவர் கூறியதாக பெயரை வெளியிட விரும்பாத வட்டாரம் கூறியது.

“குடியேறிகளாக இங்கு வந்த இந்தியர்களும் சீனர்களும் இப்போது இந்நாட்டில் நல்வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்”, என்று பிரதமரின் சிறப்பு அதிகாரியான நசிர் சாபார் (டை கட்டியிருப்பவர்) கூறினார்.


“மலேசியாவின் அரசமைப்புச் சட்டத்தை வரைந்ததற்கான முழு பொறுப்பும் அம்னோவை மட்டுமே சாரும்” என்று கூறிய நசிர் அன்றைய கூட்டணி பங்காளிகளின் பங்களிப்பை நிராகரித்து விட்டார்.


“குடியுரிமை பறிக்கப்படும்”

எஸ்பிஎம் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 10 பாட வரம்பை 12 கிற்கு உயர்த்த வேண்டும் என்று இந்தியர்கள் அளவிற்கு வீறி வலியுறுத்துவார்களானால் அவர்களுடைய குடியுரிமை பறிக்கப்படும் என்று அவர் மிரட்டியுள்ளார் என்றும் கூறப்பட்டது.


“அவர் (நசிர்) பல மஇகா கிளைகளுக்குச் சென்று இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலையை விளக்கியதாகவும் ஆனால் அக்கிளைகள் அரசாங்கம் விதித்துள்ள வரம்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் விடாப்பிடியாக இருந்தன என்று வருத்தப்பட்டுக் கொண்டார். அவர்கள் “மிதமிஞ்சிய” கோரிக்கையை விடுத்தனர் என்று குற்றம் சாட்டினார்.


“பகசா மிலாயு அதிகாரத்துவ மொழியாக இருக்கையில் அவர்கள் எப்படி தமிழ்மொழியைப் பற்றி அவ்வளவு பேச முடியும். அவர்கள் தொடர்ந்து அவ்வாறான கோரிக்கைகளை விடுத்தால், நான் அவர்களின் குடியுரிமையைப் பறிக்க முடியும்”, என்று நசிர் கூறினார்.”


இவவாறு இவர் பேசியதன் வாயிலாக இவர் எண்ணிப் பேசும் திறன் , ஆழமாகச் சிந்திக்கும் அறிவாண்மை, கண்ணியம் முதலான நற்பண்புகள் எவையும் இல்லாதவராகவே தம்மை வெளிப்படுத்திக் கொண்டார்.

1. இந்தியர்கள் பிச்சைக்காரர்கள்


2. சீனர்கள் சீனப் பெண்களின் உடலை விற்க வந்தவர்கள்


3. இவர்களின் குடியுரிமையைப் பறிக்க வேண்டும்.


என்று இவர் பேசியதாக வந்த செய்தி இவர் உண்மையான ஒரே மலேசியா கொள்கைக்கு முரணானவர் என்பதை வெளிப்படுத்துகின்றது. எசு.பி.எம் தேர்வில் 12 பாடங்கள் வேண்டும் என நாம் கேட்பதற்கான காரணம் தமிழ் மாணவர்கள் தமிழ் பாடத்தையும் தமிழ் இலக்கியப் பாடத்தையும் தேர்வில் எழுத வேண்டும்; சான்றிதழில் இவை சேர்த்துக் கொள்ளப் பட வேண்டும்; உயர்க்கல்வி நுழைவுக்கும் இவை ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும் என்பதற்காகவே. இது நம்முடைய உரிமை. நாம் இந்த நாட்டுக் குடி மக்கள்.

எங்கள் தாய் மொழியை நாங்கள் படிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்று எண்ணியதற்காக எங்கள் குடியுரிமை பறிக்கப் பட வேண்டுமென்றால், நாட்டின் அடிப்படை சட்டத்தையே மறந்து கொழுத்துப் போய் வாய்க்கு வந்த வண்ணம் பேசிய நாகாக்கத் தெரியாத நாத்தழும்பேறிய இத்தகையாருக்கு என்ன தண்டனை வழங்குவது?

இதையே மற்றவர்கள் சற்று திசைமாறி பேசியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? எங்களுடைய வாழ்வையும் வளத்தையும் வரலாற்றையும் அறியாத குருட்டு முண்டங்களுக்கு நாங்கள் பிச்சைக் காரர்களாகத்தான் தெரிவோம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இங்குப் படையெடுத்து வந்து கடாரத்தரசை நிறுவினானே இராசேந்திர சோழன் அவன் என்ன பிச்சைக் காரனா?

அவன் முடிவில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருந்தால் இன்று இந்த வாய் இப்படி பேசுமா? உம்முடைய மொழியிலும் பண்பாட்டிலும் எங்களின் ஆளுமையினை வைத்துக் கொண்டு எங்களைப் பிச்சைக் காரர்கள் என்கிறாயே வேடிக்கையாக இல்லையா?

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாகவே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகு நோக்கிய ஒருமையைப் பேசிய இனம் எங்கள் இனம். ஒரே மலேசியா என்று உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று வைத்துப் பேசிய இனம் அல்ல நாங்கள்.

எங்களுக்கு ஒரு நல்லது கிடைத்தால் ஊருக்கே கொடுத்துப் பகிர்ந்துண்ணும் பகுத்தூண் அறம் பேணிய இனம் எங்கள் இனம். வந்து பார் அப்பனே , பரந்து கிடக்கும் எங்கள் இலக்கியங்களில் நிறைந்து கிடக்கும் மெய்யியல்களைப் பார்! யார் பிச்சைக் காரன் என்பது புரியும். என்ன செய்வது இன்று உனக்கு வாழ்வு வந்தது நள்ளிரவில் குடை பிடிக்கிறாய். அதனால் மிகவும் துள்ளாதே ! காலம் தடம் மாறினால் எல்லாமே தலைக் கீழாகி விடும்.

மலேசியா மிகச் சிறந்த நாடு. பல்லின மக்கள் வாழும் நாடு. அமைதியான நாடு. ஆனால் இந்த நாட்டை இது போன்ற இன வெறியர்கள் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விடுவார்கள். ஒரே மலேசியா கொள்கையைப் பற்றி பேசப்படும் இடத்திலேயே அதைக் காலில் போட்டு மிதிக்கும் வண்ணம் பண்பு கெட்ட வகையில் ஓர் அதிகாரி பேசியிருக்கிறார் என்றால் இந்நாட்டில் நற்செயல்கள் வெற்றியடையுமா? இப்படியானவர்கள் நாட்டுக்கு நன்மை சேர்க்கும் குடிமக்களா? போகூழைக் கொண்டு வரும் கேடர்களா? இறைவா எங்கள் நாட்டை இந்தக் கொடியவர்களிடமிருந்து காப்பாற்றுவாயாக.....