தொடர்பாளர்கள்

Tuesday, July 28, 2009

பிரபாகரன் நன்றாகவும் பாதுகாப்பாகவும் உள்ளார். ஐயா பழ. நெடுமாறன்

"பிரபாகரன் நன்றாகவும், பாதுகாப்பாகவும் உள்ளார் என்ற உறுதியான செய்தி கிடைத்து இருக்கிறது'' என்று நேற்று பெங்களூர் கருத்தரங்கில் பங்குகொண்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், உலகத் தமிழர் பேரவையின் தலைவருமான பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பு சார்பில் நேற்று பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் `ஈழத்தமிழரும்-நமது கடமையும்' என்ற கருத்தரங்கு நடந்தது. அம்பேத்கார் சட்ட கல்லூரி நிறுவனர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழ்ச்சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார்.

உலக தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு கருத்தரங்கை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-

"பெங்களூரில் 18 ஆண்டுகளாக மூடப்பட்டு இருக்கும் திருவள்ளுவர் சிலையை திறக்க கர்நாடக அரசே முன்வந்து உள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. திருவள்ளுவர் சிலை திறப்பு போராட்டத்துக்கு தலைமை தாங்க நான் பெங்களூர் வந்தபோது நூற்றுக்கணக்கானவர்களுடன் நான் கைது செய்யப்பட்டேன். ஒற்றுமையாக போராடினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

மின்வேலி முகாம்கள்

சிங்கள அரசு 6 மாதத்தில் மட்டும் 1 லட்சம் தமிழர்களை கொன்று குவித்தது. சர்வாதிகாரி ஹிட்லரால் ïத மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதை விட மிகப்பெரிய கொடுமை இலங்கை தமிழர்களுக்கு நேர்ந்து உள்ளது. இந்தியாவில் வாழும் தமிழர்களை மத்திய அரசு நமது நாட்டின் குடிகளாக நினைக்கவில்லை.

ஏறத்தாழ 31/2 லட்சம் தமிழர்கள் ராணுவ கட்டுப்பாட்டில் மின்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். 3 ஆயிரத்து 500 பேருக்கு ஒரு கழிவறை வசதி மட்டுமே செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கெல்லாம் மத்திய அரசு தான் காரணம்.

இலங்கை தமிழர் பேரழிவுக்கு காரணமாக இருந்தவர்களில் மலையாளிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கர மேனன், இந்தியாவில் முக்கிய பதவி வகிக்கும் பி.கே.நாயர், ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணையத்தின் இந்திய பிரதிநிதி கோபிநாத், ஐ.நா.சபை செயலாளரின் விவகாரத்துறை அதிகாரி விஜய்நம்பியார், இலங்கை ராணுவ தளபதி பொன்சேகாவின் ராணுவ ஆலோசகரும் விஜய் நம்பியாரின் சகோதரருமான சதீஷ் நம்பியார் ஆகிய அனைவரும் மலையாளிகள். இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி இந்த பேரழிவை ஏற்படுத்தி உள்ளனர்.

தமிழக முதல்-அமைச்சரை ஏமாற்றினர்

சிவசங்கர மேனனும், நாராயணனும் மாதத்துக்கு 4 தடவை இலங்கைக்கு சென்று வந்தனர். போர் நிறுத்தம் பற்றி பேசுவதாக இலங்கை சென்று டெல்லி திரும்பும் வழியில் சென்னையில் இறங்கி அவர் கள் தமிழக முதல்-அமைச்சரையும் ஏமாற்றி விட்டனர்.

இலங்கையில் சீனா நாடுகள் உள்பட நமது எதிரி நாடுகள் கால்பதித்து வருகின்றன. இது நமது நாட்டு பாதுகாப்புக்கு பாதிப்பாக அமையும். இதை புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு தனது தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு உள்ளது.

பிரபாகரன் நன்றாக இருக்கிறார்

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் மிகவும் நன்றாக உள்ளார். மிக பத்திரமாக இருக்கிறார். எந்த கட்டத்திலும் மீண்டும் தோன்றி தமிழீழ போராட்டத்துக்கு தலைமை தாங்கி போராடுவார். அதை அவரே அறிவிப்பார். பிரபாகரன் இறந்து விட்டார் என்பது திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி. விடுதலைப்புலிகளின் சர்வதேச செய்தி தொடர்பாளர் பத்மநாபன், பிரபாகரன் இறந்ததாக செய்தி வெளியிடும் முன்பு என்னை தொடர்பு கொண்டு பேசினார். அவ்வாறு செய்தி வெளியிட நீங்கள் யார்? என்று கேட்டேன். எனது கேள்விகளுக்கு அவரால் பதில் அளிக்க முடியவில்லை.

நம்மை குழப்பவும், போராட்டத்தை வலுவிழக்க செய்யும் வகையிலும் பரப்பப்படும் பொய் செய்திகளை யாரும் நம்பக்கூடாது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று எனக்கு உறுதியான செய்தி களத்தில் இருந்து கிடைத்து உள்ளது. தம்பி பிரபாகரன் தலைமையில் போராட்டம் முன் நிறுத்தப்படும். அப்போது உலக தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும். அதுவரை நாம் ஒன்று திரண்டு எந்த ஒரு குழப்பத்துக்கும் ஆளாகாமல் போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பழ. நெடுமாறன் பேசினார்.

விழாவில் அம்பேத்கார் சட்ட கல்லூரி நிறுவனர் ராமமூர்த்திக்கு பெங்களூர் மாவட்ட குடிசைவாசிகள் நலச்சங்கம் சார்பில் `ஏ.பி.எஸ் சண்முக சுந்தரம்' விருதை பழ.நெடுமாறன் வழங்கினார். அப்போது குடிசைவாசிகள் நலச்சங்க தலைவர் வி.ஜி.ஸ்ரீதர், பெங்களூர் மக்கள் நலச்சங்க தலைவர் செந்தில்குமார் உடன் இருந்தனர்.

முன்னதாக அம்பேத்கார் சட்ட கல்லூரி மாணவர்கள் ஈழத்தமிழர்கள் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

No comments:

Post a Comment