தொடர்பாளர்கள்

Tuesday, June 28, 2011

''கெட்டபின் ஞானி'' - பழ. நெடுமாறன்

''கெட்டபின் ஞானி''
- பழ. நெடுமாறன்

''கூடா நட்புக் கேடாய் முடியும்'' என்பது தோல்வியில் பிறந்த ஞானோதயமாகும். கூடா நட்பு என தி.மு.க தலைவர் கருணாநிதி கருதியதும் சுட்டிக்காட்டியதும் யாரை என்பது குறித்து அவரது கட்சிக்குள்ளும் வெளியிலும் விவாதங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன.

காங்கிரஸ் கட்சியோடு தி.மு.க. கொண்டிருக்கும் உறவைக் கூடா நட்பாக அவர் கருதி இருப்பாரே யானால் அந்த தவற்றினை உணருவதற்கு நாற்பது ஆண்டு காலத்துக்கு மேலாக அவருக்கு ஆகியிருக்கிறது.

காங்கிரஸ் எதிர்ப்பில் வளர்ந்த கட்சி தி.மு.க ஆகும். அண்ணா அவர்கள் காங்கிரஸ் எதிர்ப்புக் கட்சிகளை ஒன்றிணைத்து 1967ஆம் ஆண்டில் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தார். ஆனால் அண்ணா மறைந்த உடனேயே காங்கிரஸ் எதிர்ப்புக் கொள்கையையும் அவருடனேயே புதைத்தார் கருணாநிதி.

1969 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவருக் கான தேர்தல் நடைபெற்ற போது காங்கிரசின் அதிகாரப்பூர்வமான வேட்பாளரான சஞ்சீவ ரெட்டியை எதிர்த்து பிரதமர் இந்திராவினால் போட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்ட வி.வி.கிரியை ஆதரித்து வெற்றி பெற வைத்ததில் கருணாநிதி;க்கு முக்கிய பங்கு உண்டு இத்தேர்தலில் சஞ்சீவ ரெட்டிக்கு ஆதரவு தருமாறு பெரியார் விடுத்த வேண்டுகோளை கருணாநிதி புறக்கணித்த போது இந்திராவின் நட்பு கூடா நட்பாகத்தெரியவில்லை. அந்த தேர்தலில் தி.மு.க.வின் நிலைப்பாடு மாறி இருந்து இருக்குமே யானால் இந்தியாவின் அரசியலே மாறி இருந்து இருக்கும் பின்னாளில் நேர்ந்த அவசரகால நிலமைப் பிரகடனம், மிசாக் கொடுமை போன்றவைகள் நடந்திராது.

ஆனாலும் கருணாநிதி தனது தவறைப் பிடிவாதமாகத் தொடர்ந்தார். 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திராவின் காங்கிரசோடு கூட்டுச் சேர்ந்து வெற்றியும் பெற்றார். ஆனால் அதன் பின் விளைவுகள் மிக மோசமாக இருந்தன. 1975ஆம் ஆண்டு அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டு சர்வாதிகாரத்தின் சாயல் படர்ந்தது முரசொலி மாறன், ஸ்டாலின் உட்பட ஏராளமான தி.மு.க வினர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமைகளுக்கு ஆளாயினர். முன்னாள் சென்னை மேயர் சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருட்டிணன் போன்றவர்கள் உயிரிழந்தனர். நாடெங்கும் பல கொடுமைகள் அரங்கேறின இதெல்லாம் தனது கூடாநட்பினால் விளைந்த கொடுமைகள் என்பதை உணர்ந்து கருணாநிதி திருந்தினாரா? என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

1980 ஆம் ஆண்டில் 'நேருவின் மகளே வருக நிலையான ஆட்சித் தருக' என்ற பதாகையைத் துாக்கிப் பிடித்து மீண்டும் காங்கிரசோடு கூட்டு சேர்ந்தவர் கருணாநிதி. சிட்டிபாபு போன்றவர்களின் மரணத்துக்குக் காரணமான காங்கிரசோடு கூடாநட்புக் கொள்ளலாமா? என்பது குறித்து அவர் கொஞ்சமும் கவலைப் படவில்லை.

கடந்த முப்பதாண்டு காலத்துக்கு மேலாக காவிரி பிரச்சினையால் தமிழக விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். குறிப்பாக கர்நாடக முதலமைச்சராக இருந்த தேவ கெளடா தமிழர்களுக்கு எதிராக வரிந்துக் கட்டிக் கொண்டு நின்றவர். காவிரி நடுவர் குழுவின் தலைவராக இருந்த சித்தோஷ் முகர்ஜி மீது தவறான வழக்கு தொடர்ந்து அவர் தானாக பதவி விலகும்படி செய்தவர் தேவகெளடா. நேர்மையானவரான அவர் பதவி விலக நேர்ந்ததால் காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு நீதி கிடைக்கவில்லை. ஆனால் இவற்றைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப் படாமல் அதே தேவ கெளடாவை இந்தியாவின் பிரதமராக்குவதில் முன் நின்றவர் கருணாநிதியாவார்; தேவகெளடாவுடன் தனது கூடாநட்பு தமிழக விவசாயிகளுக்கு கேடாய் முடிந்ததைக் குறித்து கொஞ்சமும் கவலைப்படவில்லை கருணாநிதி.

2003 ஆம் ஆண்டு காங்கிரசோடு இவர் கொண்ட கூடாநட்பு ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு அடிப்படையாக அமைந்தது. இலங்கை இராணுவத்தினரில் 63 சதவிகித அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் இந்தியாவில் இராணுவப் பயிற்சிக் கொடுக்கப்பட்டது, ஆயுதங்களும் அள்ளித் தரப்பட்டன ஆனால் இவற்றைத் தடுத்து நிறுத்த கருணாநிதி சுண்டுவிரலைக்கூட அசைக்கவில்லை. 2009 ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்ட போது அதைத் தடுத்து நிறுத்த இவர் முன்வரவில்லை தி.மு.க வின் ஆதரவோடு மட்டுமே மன்மோகன் அரசு பதவியில் நீடித்த காலம் அது, இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்படாவிடில் ஆதரவைத் திரும்பப் பெறுவது என இவர் உறுதியான முடிவு எடுத்திருந்தால் ஒரு இலட்சம் தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்றி இருக்க முடியும் ஆனால் அதைவிட காங்கிரசுடன் கொண்ட கூடா நட்பே மேலானது என இவர் நினைத்தது தமிழ் இனத்திற்கே கேடாய் முடிந்தது.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கிற்று தங்கள் ஆட்சியைத் தொடர தி.மு.க வின் தயவு காங்கிரஸ் கட்சிக்குத் தேவைப்படும் நிலை இல்லை எனவேதான் மகனுக்கும், மகளுக்கும் பேரனுக் கும் பதவி கேட்டு டில்லியில் மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது கூடாநட்பினால் விளைந்த கேடு இது என்பதை அவர் அப்போதும் உணரவில்லை.

தமிழர்களின் இரத்தத்தால் சிவந்து கறை படிந்த இராசபக்சேயின் கரங்களைக் குலுக்குவதற்கு தனது மகள் உட்படத் தூதுக் குழுவை அனுப்புவதற்கு அவர் கொஞ்சமும் வெட்கப்பட்டதில்லை. இதன் விளைவாக உலகத் தமிழர்களின் வெறுப்பிற்கு ஆளாக நேர்ந்தது இராசபக்சேவுடன் தான் கொண்ட கூடா நட்பு தானே இந்நிலைக்குக் காரணம் என அவர் இன்னமும் உணரவில்லை.

காங்கிரசோடு தனது கூடா நட்பினால் ஈழத்தமிழர்கள் அழிக்கப்பட்ட போது கொஞ்சமும் கவலைப் படாதவர், அதே காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தனது மகள் ஊழல் புகாரில் சிறையில் அடைக்கப் பட்டப்போது கூடா நட்பு பின் விளைவு எனப் புலம்புவதில் பயன் என்ன?

நாற்பதாண்டுக் காலத்துக்கு மேலாக காங்கிரஸ் கட்சியோடு ஒட்டி உறவாடி பதவியைத் தக்க வைத்துக் கொள்வதில் கருத்தாக இருந்தாரே தவிர தமிழர்களுக்கு அதனால் விளைந்த கேடுகளைக் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படவில்லை.

தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற நதிநீர் பிரச்சினைகளையோ, மேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்புதல், சேதுக்கால்வாய் போன்றவற்றையோ, ஈழத்தமிழ் பிரச்சினையோ தீர்ப்பதற்கு கடந்த நாற்பது ஆண்டு காலத்தில் எதுவும் செய்ய அவரால் இயலவில்லை. இந்த நாற்பதாண்டு காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு இவருக்கு இருந்த நெருக்கமான நட்பும் மத்திய ஆட்சியில் இருந்த செல்வாக்கும் மேற்கண்ட பிரச்சினைகளைத் தீர்க்க கொஞ்சமும் உதவவில்லை மாறாக ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரக் குடும்பங் களில் ஒன்றாக தனது குடும்பத்தை உயர்த்திக் கொள்ள முடிந்தது. ''கூடா நட்பின்'' விளைந்த பயன் இது ஒன்றுதான்.

கவியரசர் கண்ணதாசன் எழுதியதைப் போல ''கெட்டபின் ஞானி'' ஆவது அவருக்கும் பயன்தராது குடும்பத்துக்கும் பயன் தராது, நாட்டிற்கும் பயன் தராது.

No comments:

Post a Comment