தொடர்பாளர்கள்

Sunday, June 12, 2011

கருணாநிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

கருணாநிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம்
- பழ. நெடுமாறன்

மதிப்பிற்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு. வணக்கம். எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே? என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள் காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன். தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக் கூட கவலைப்படாமல் எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது. பொடா சிறையில் நான் இருந்த போது நீங்கள் எழுதிய தொல்காப்பியப் பூங்கா நூலினைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன். ஆனால் தாங்கள் செய்த, செய்துவரும் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கும் தங்களது இலக்கியத்தைப் பாராட்டு வதற்கும் இடையே உள்ள வேறு பாட்டினை நன்கு அறிந்திருந்தும் திசை திருப்புவதற்கு முயற்சி செய்திருக்கிறீர்கள்.

இப்போது மட்டுமல்ல, நீண்ட காலமாகவே இவ்வாறு செய்து வருகிறீர்கள். 1969 ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் முதல் முதலாக என் மீது பொய் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனாலும் முதலமைச்சராக அண்ணா இருந்த வரை அந்த வழக்குக் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஆனால் நீங்கள் முதலமைச்ச ரான உடனேயே என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தீர்கள். 6 மாத நன்னடத்தை ஜாமீன் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பினை எனது மனசாட்சி ஏற்க மறுத்தது. எந்தக் குற்றமும் செய்யாதபோது நன்னடத்தை ஜாமீன் எழுதிக் கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அதன் விளைவாக ஆறு மாதம் சிறையில் இருக்க நேர்ந்தது.

காமராசர் மதுரை சிறைக்கே வந்து என்னைப் பாராட்டினார். அதைவிட சிறந்த பாராட்டு வேறு இல்லை. இதன் விளைவாக தமிழகம் முழுவதற்கும் நான் அறிமுகமானேன். இதற்குக் காரணம் நீங்களே என்பதை இன்றும் நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

1978ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இந்திரா காந்தி மதுரைக்கு வந்த போது அவருக்குக் கருப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் உங்கள் தொண்டர்கள் அவரது உயிருக்கு உலை வைக்க முயன்றார்கள். உங்களால் ஏவி விடப்பட்டவர்களின் கொடூரமான தாக்கு தல்களிலிருந்து இந்திராவைக் காப்பாற்றிய பேறு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் அகில இந்திய அளவில் அறிமுகமானேன். இதற்கும் நீங்களே காரணம் என்பதை உணர்ந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

1985ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழர் பகுதியில் இரகசியச் சுற்றுப் பயணம் ஒன்றினை விடுதலைப் புலிகளின் துணையுடன் மேற்கொண்டு அங்கு சிங்கள இராணுவம் இழைத்து வரும் கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக அறிந்து வந்து வெளியிட்ட போது நீங்கள் முரசொலி இதழில் என்னைப் பாராட்டி முழுப் பக்க அளவில் கட்டுரை எழுதினீர்கள். இப் போதும் அதை நன்றியோடு நினைவு கூர்கிறேன். ஆனால் நாம் ஒன்று கூடி உருவாக்கிய டெசோ அமைப்பை நீங்கள் தன்னிச்சையாகக் கலைத்தீர்கள். ஈழத் தமிழர் பிரச்சினையில் உங்களுக்கு உண்மையான ஈடுபாடு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள் என்பதை உணர்ந்த போது உங்களுக்கு எதிர் நிலை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

காமராசரோடு உங்களை ஒப்பிட்டும், உங்கள் ஆட்சியை காமராசர் ஆட்சி என வருணித்தும் காங்கிரஸ் காரர்கள் சிலர் பேசுகிறார்கள். புரிந்து பேசுகிறார்களா, அல்லது புரியாமல் பேசுகிறார்களா என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்.

காமராசர் மக்கள் தொண்டிற்காக திருமணத்தைத் துறந்தவர். பெற்ற தாயைக் கூடத் தன்னுடன் வைத்துப் பேணாதவர். ஒன்பது ஆண்டு காலம் ஆங்கிலேயரின் கொடுமையான சிறையில் வாடியபோதும் அது குறித்து ஒரு போதும் பேசாதவர். மறையும் போது தான் உடுத்தியிருந்த துணி களைத் தவிர வேறு சொத்து இல்லாதவர். ஆனால் நீங்களோ மனைவி, துணைவி என பல்கிப் பெருகிய குடும்பங்களுடன் வாழ்பவர். அது மட்டுமல்ல ஏழைக் குடும்பமான உங்கள் குடும்பம், இன்று ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரக் குடும்பங் களில் ஒன்றாகத் திகழ்கிறது.

தனது தாய் உட்பட, தனது குடும்பத்தவர் எவரையும் அரசியலில் அனுமதிக்காதவர் காமராசர். அதைப் போலவே தான் உருவாக்கிய தி.மு. கழகத்தில் அண்ணா அவர்கள் தனது பிள்ளைகள் எவரையும் வாரிசாக அறிமுகப்படுத்த வில்லை. ஆனால் நீங்கள் செய்ததை நாடறியும். 1970 களில் உங்களது மூத்த மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டி யாக திரையுலகில் களமிறக்கினீர்கள். கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு இரசிகர் மன்றங்களை உருவாக்கினீர்கள். இறுதியில் மு.க. முத்துவை நிலை நிறுத்தவும் முடியவில்லை. எம்.ஜி. ஆரை கழகத்தில் நீடிக்க வைக்கவும் முடியவில்லை. இதன் விளைவாக 13 ஆண்டுகள் நீங்கள் பதவி இல்லாத இருளில் தடுமாற நேர்ந்தது. ஆனாலும் நீங்கள் பாடம் கற்கவில்லை. இப்போது இளம் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகி யோருக்குப் போட்டியாக உங்கள் பேரன் அருள்நிதியை கலை உலகில் இறக்கியிருக்கிறீர்கள். விஜயின் படங் களுக்கு பல முட்டுக் கட்டைகளைப் போட்டுத் தடுக்க நடைபெற்ற முயற்சி வெற்றி பெறவில்லை. விஜயின் பகையைத் தேடிக் கொண்டதுதான் மிச்சம். திரையுலகைக் கபளீகரம் செய்ய உங்கள் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக ஒட்டு மொத்த திரையுலகமும் உங்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டதே?

அண்ணா அவர்கள் இறுதி வரை காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே திகழ்ந்தார். மது விலக்குக் கொள்கை யின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் அண்ணா மறைந்த உடனேயே நீங்கள் மதுக் கடைகளைத் திறந்து இளைய தலை முறையின் சீரழிவிற்குக் காரண மானீர்கள். அதைப் போல 1971ஆம் ஆண்டில் காங்கிரசுடன் கை கோர்க்கத் தொடங்கி இன்றுவரை அந்த உறவை நீட்டிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறீர்கள்.

"நேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாரும் பிரித்துவிட முடியாது'' எனத் தம்பட்டம் அடிக்கிறீர் கள். 1959ஆம் ஆண்டு சென்னைக்குப் பிரதமர் நேரு வந்த போது கருப்புக் கொடி என்ற பெயரில் அவர் மீது உங்களது தம்பிகள் செருப்புகளை வீசினார்கள். 1968இல் மதுரைக்கு இந்திரா காந்தி வந்த போது கொலை முயற்சி நடைபெற்றது. அது மட்டும் அல்ல பாட்னாவில் வி.பி. சிங் தலைமை யில் நடைபெற்ற காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது "நான் வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவன் இல்லை' என ராஜீவை சாடினீர்கள். நேரு குடும்பத் தின் மீது நீங்கள் வைத்திருக்கிற அளவற்ற அன்பின் அறிகுறிகள் இவை.

பல கட்டங்களில் காங்கிரஸ் தலைமையை மிரட்டிப் பணிய வைக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள். மத்திய அமைச்சர் அவையில் மகனுக்கும், மகளுக்கும் இடம் கேட்டு நீங்கள் நடத்திய மிரட்டல் நாடகமும், சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக விடுத்த மிரட்டலும் இறுதியில் உங்களின் சரணாகதியில்தான் முடிந் தது. 1971ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் நாடாளுமன்றத் திற்கு ஒன்பது இடங்களுக்கு மேல் தர முடியாது. சட்ட மன்றத்தில் ஒரு இடம் கூட கிடையாது என இந்திராவையே மிரட்டிப் பணிய வைத்த நீங்கள், இன்று சோனியாவிடம் ஒவ்வொரு முறையும் சரணடைவதைப் பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது.

அதிகாரம், பணம் ஆகியவற் றின் பலத்தோடு உங்கள் மகன் அழகிரி திருமங்கலம் துணைத் தேர்தலில் கையாண்ட தில்லுமுல்லுகள் உங்கள் ஆசியோடுதானே நடைபெற்றன. அதைத் தொடர்ந்து நடைபெற்ற அத்தனை துணைத் தேர்தல்களிலும் திருமங்கலம் சூத்திரத்தின் அடிப்படை யில்தானே நீங்கள் வெற்றி பெற முடிந்தது. இதைக் கண்டு மகிழ்ந்து மகனை உச்சி முகர்ந்து பாராட்டி னீர்கள். ஆனால் தேர்தல் ஆணையம் விழிப்படைவதற்கு இவை காரண மாயிற்று என்பதை அப்போது நீங்கள் உணரவில்லை. சட்ட மன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்து டன் எடுத்துக் கொண்ட நடவடிக்கை களின் விளைவாகத்தானே உங்களால் முறைகேடுகளை அரங்கேற்ற முடியவில்லை.

தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி தேர்தல் முடிந்த பிறகு விடுத்த அறிவிப்பு நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திற்று. "வாக்காளர்களுக்கு பணங் கொடுக்க முயன்றதாக நாடு முழுவதும் 70 கோடி கைப்பற்றப்பட்டது. இதில் 60 கோடி தமிழ் நாட்டில் மட்டும் கைப்பற்றப்பட்டது. நாங்கள் ஒரு கோடி ரூபாயை கைப்பற்றியிருக் கிறோம் என்றால் 40 முதல் 50 கோடி ரூபாயை விநியோகிக்க விடாமல் தடுத்து இருக்கிறோம் என்று பொருள்' எனக் கூறியுள்ளார்.

அவர் கூற்றுப்படி பார்த்தால் தமிழ் நாட்டில் 2400 கோடி முதல் 3000 கோடி வரை பணம் விநியோகிக்க விடாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. சனநாயகத்தை சீரழிக்க தமிழ் நாட்டில் உங்கள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்து நீங்கள் இதுவரை வெட்க மடையவில்லையே அது ஏன்?

நீங்கள் உட்பட கட்சியின் முக்கி யத் தலைவர்கள் பலரும் தொகுதி மாறி போட்டியிட்டும் பயனில்லாமல் போனது ஏன்?

தி.மு.க. வரலாறு காணாத வகை யில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது ஏன்? மூத்த அமைச்சர்களும் கூட்டணித் தலைவர்களும் படு தோல்வி அடைந்தது ஏன்? நீங்கள் சிந்தித்தது உண்டா? இனிமேலாவது சிந்திப்பீர்களா?

இலவசங்களை அள்ளித் தந்தும், பல ஆயிரம் கோடி ரூபாய்களை வாரியிறைத்தும் பலமான கூட்டணி அமைத்தும் களம் இறங்கிய பிறகு தோல்வியைத் தழுவியது ஏன்?

இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படு கொலை செய்யப்பட்ட போது அவர் களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சி யும் செய்யாமல் உண்ணா விரத நாடகத்தை நடத்தி காங்கிரசுக்குத் துணை போனது இந்த தோல்விக்குரிய முக்கிய காரணமென்பதை இப்போதா வது உணர்கிறீர்களா?

முள்ளிவாய்க்கால் போரின் இறு திக்கட்டத்தில் தனது மக்களைக் காப்ப தற்காக தனது மகனையே கள முனைக்கு அனுப்பிக் காவுகொடுக்க ஒரு தலைவன் முன்வந்தான். அதே காலக் கட்டத்தில் தில்லியில் தனது மகனுக்கும், மகளுக்கும் பதவி பெறுவ தற்காக மடிப்பிச்சை ஏந்தி நின்றார் ஒரு தலைவர் என்ற தீராத பழிக்கு ஆளாகிவிட்டீர்களே.

உங்களின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் நடைபெற்ற ஊழல் கள், இயற்கை வளங்கள் கொள்ளை, மோதல் சாவுகள், உயர்நீதிமன்ற வளா கத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறி ஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர மான தாக்குதல், அன்னிய நிறுவனங் களுக்கு தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்ற வற்றை விரிக்கின் பெருகும். உங்கள் தோல்விக்கு இவையெல்லாம் துணை நின்றன.

திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் வல்லவர் நீங்கள் என்பதை நான் மறுக்கவில்லை. நீங்கள் எழுதிய வசனங்களிலேயே என் மனதில் இன்னமும் நிற்பது "மனசாட்சி உறங்கும்போதுதான் மனக் குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது' என பூம்புகார் படத்தில் நீங்கள் எழுதிய வசனம் - உங்களுக்கு எல்லா வகையி லும் இன்று பொருத்தமாகிறது.

ஈழத் தமிழர்களை மட்டும் நீங் கள் கைவிடவில்லை. தமிழக மீனவர் களையும் கை விட்டீர்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படு வதைத் தடுக்க எதுவும் நீங்கள் செய்யவில்லை.

உங்கள் மகள் கனிமொழி இராசா வுடன் கூட்டு சேர்ந்து நடத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடி மறைக்க நீங்கள் செய்த முயற்சி எதிர் விளைவை அல்லவா ஏற்படுத்தி விட் டது. ஈழத் தமிழர் பிரச்சினையில் துரோகம் செய்த மத்திய அரசுக்கு ஆதரவாக நீங்கள் நடந்து கொண்ட தற்கு கிடைத்த கைமாறுதானே ஸ்பெக்ட்ரம். குடும்ப நலனைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைமையுடன் பணிந்து போனீர்கள். ஆனால் தமிழக மக்கள் உங்களையும் காங்கிரசையும் கூட்டணி சேர்ந்த கட்சிகளையும் கூட்டாகத் தண்டித்து விட்டார்கள்.

மதம், சாதி, பிராந்திய வேறு பாடுகள் இல்லாமலும் ஒட்டு மொத்த தமிழகமும் உங்களுக்கு எதிராகத் திரண்டது ஏன்? பல காலம் உங்களின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த சென்னை தவிடு பொடியானது ஏன்?

அண்ணா வளர்த்த கட்சி கடைசிக் கட்டத்தில் வடிவேலுவையும், குஷ்புவையும் நம்பி நிற்க வேண்டிய அவலத்திற்கு யார் பொறுப்பு?

கடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த மாநில முதலமைச்சரும் சந்தித் திராத பாராட்டு விழாக்களை நடத்தி இதுவரை யாரும் பெற்றிராத விருது களையும் உங்கள் துதிபாடிகள் உங்க ளுக்கு அளித்த போது கூச்சமின்றி அவற்றை இரசித்து ஏற்றீர்களே, இன்றைக்கு அந்த துதிபாடிகள் உங்களைத் தனிமையில் விட்டுவிட்டு, அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகளாகப் பறந்துவிட்டார்களே.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து மிகுந்த உயர்ந்த நிலையில் இருந்த காமராசர் 1967ஆம் ஆண்டுத் தேர்தலில் தோற்ற போது "மக்கள் தீர்ப்பை மதித்து ஏற் கிறேன்' என்று கூறினார். அவருக்கு இருந்த சனநாயகப் பண்பு உங்களிடம் காணப்படாதது ஏன்? "மக்கள் ஓய்வ ளித்து விட்டார்கள்' என்று நீங்கள் கூறி யதன் மூலம் சனநாயகத்தையும் பொது வாழ்க்கையையும் மாசு படுத்தி விட்டீர்கள்.

பொது வாழ்க்கைக்கு வருகிறவர் கள் இறுதி வரை மக்களுக்குத் தொண் டாற்றுவதையே கடமையாகக் கொண்டு செயல்படுவார்கள். பதவியில் இருந்தால் மக்கள் தொண்டு, பதவியில் இல்லாவிட்டால் ஓய்வு என்று சொல்ப வர் உண்மையான மக்கள் தொண்ட ராக இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல் விக்குப் பொறுப்பேற்று பதவி விலகும் பக்குவம் தங்கபாலுவுக்குக் கூட இருக் கிறது. ஆனால் பொது வாழ்க்கைக்குப் பொன் விழாக் கொண்டாடிய உங்க ளுக்கு இன்னமும் அந்த பக்குவம் வராதது ஏன்? இந்தக் கட்டத்திலே யாவது பிறரிடம் இல்லையென்றாலும் உங்கள் வாரிசிடமாவது எல்லாவற்றை யும் ஒப்படைக்கலாம் என எண்ணிய துண்டா நீங்கள்?

ஒருவரின் பெருமைக்கும் சிறு மைக்கும் அவரவர்கள் செயல்பாடே அடிப்படை என்பதை வள்ளுவர் கூறுகிறார். குறளோவியம் தீட்டிய தாங்கள் இதை உணராதது ஏன்?

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்

No comments:

Post a Comment