தொடர்பாளர்கள்

Monday, August 30, 2010

கடாரம் கொண்ட சோழப் பேரரசு தஞ்சையில் கல்வெட்டு சான்று





சோழ மன்னன் இராசேந்திரன் தென்கிழக்காசிய நாட்டுப் பகுதிகளுக்கு வந்து கடாரப் பேரரசை நிறுவிய செய்தி தஞ்சைப் பெரிய கோயிலில் கல்வெட்டாகச் செதுக்கப் பட்டுள்ளது. யாரும் பார்க்க இயலாத அளவு சுவர் இடுக்கில் இருக்கும் இக்கல் வெட்டு இருக்கும் பகுதியைக் குறிக்க எந்தக் குறிப்புப் பலகையும் இல்லை. அதில் குறிக்கப் பட்டுள்ள பாடல் இதோ..

அலைகடல் நடுவில் பலகலம் செலுத்தி

சங்கிராம விசையோத் துங்க வர்மன்

ஆகிய கடாரத் தரசனை வாகையம்

பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத்

துரிமையில் பிறக்கிய பெருநிதிப் பிறக்கமும்

ஆர்த் தவ னகனகர் போர்த்தொழி வாசலில்

விசாதிரத் தோரணமு மொய்த்தொளிர்

புனைமணிப் புதவமும் கணமணிக் கதவமும்

நிறைஸ்ரீ விசயமும் துறைநீர்ப் பன்னையும்

வன்மலை யூரெயில் தொன்மலை யூரும்

ஆழ் கடல் சூழ் மாயிரு டிங்கமும்

கலங்கள் வல்வினை லங்கா சோகமும்

காப்புறு நிறைபுனல் மா பப்பாளமும்

காவலம் புரிசை மேவிலிம்பங்கமும்

விளைப் பந்தூரிடை வளைப் பந்தூரும்

தலைத் தக்கோர் புகழ் தலைத்தக் கோலமும்

தீதமர் வல்வினை மாதமர் லிங்கமும்

கலாமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும்

தேனக்க வார்பொழில் மானக்க வாரமும்

தொடு கடல் காவல் கடுமுறள் கடாரமும்

மாப்பொரு தண்டால் கொண்ட ....

Sunday, August 22, 2010

இழிவானதா இனப்பற்று?!

இழிவானதா இனப்பற்று?!

இதே தமிழ்நாட்டில், ஒரு காலத்தில் நாட்டுப்பற்றை விட உயர்வான ஒன்றாகப் போற்றப்பட்டது ‘இனப்பற்று’! ஆனால் இன்று இனப்பற்று என்னும் சொல்லையே யாரும் பயன்படுத்துவதில்லை; ‘இன உணர்வு’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.
மேடையில் மார் தட்டுபவர்கள் கூட “‘இன உணர்வு’ என் இரத்தத்திலேயே ஊறியது” என்றுதான் முழங்குகிறார்கள்! அந்த அளவுக்குத் தமிழ் மக்களிடையே செல்வாக்கு இழந்துவிட்டது இனப்பற்று.
இனம், தமிழ், தமிழன் என்று பேசுவதெல்லாம் இன்று அநாகரிகமாகி விட்டது. இப்படிப் பேசுபவர்களையெல்லாம் பிற்போக்குத்தனம் உடையவர்களாக, குறுகிய மனப்பான்மை உடையவர்களாக, இழிவானவர்களாகப் பார்க்கிறது இன்றைய தமிழ்நாட்டுச் சமுதாயம். குறிப்பாக இளைஞர்கள், அதிலும் பெருநகர இளைஞர்கள் பலர் இன்று இன உணர்வு பற்றி இப்படித்தான் நினைப்பு கொண்டிருக்கிறார்கள்.
இன உணர்வு என்பதும் ஏதோ சாதி உணர்வு போன்ற ஒரு குறுகிய மனப்பான்மையின் வெளிப்பாடு எனவும், இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாடு எனவும் கருதுகிறார்கள்.
ஆனால் தங்களைத் தவிர வேறு யாராவது இந்தியாவில் இப்படிக் கருதுகிறார்களா என்று தமிழர்கள் ஒரு நிமிடம் எண்ணிப் பார்க்க வேண்டும். ஆந்திரர்களோ, வங்காளர்களோ, கன்னடர்களோ, காஷ்மீரிகளோ யாராவது இப்படி நினைக்கிறார்களா? இந்தியப் பிரதமர் கூடத் தாடியும் தலைப்பாகையுமாய் இன்றும் தன் இன அடையாளத்தோடுதானே காட்சியளிக்கிறார்? சீக்கியர் சீக்கியராகவும், மராத்தியர் மராத்தியராகவும், குஜராத்தியர் குஜராத்தியராகவும் இருந்தாலெல்லாம் கெட்டுவிடாத இந்திய ஒருமைப்பாடு தமிழர் தமிழராக இருந்தால் மட்டும் கெட்டுவிடுமா என்று தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி இந்தியாவில்தான் என்றில்லை. உலகில் எந்த இனத்து மக்களும் தங்கள் இன அடையாளத்தை ஒருபொழுதும்
எதற்காகவும் கைகழுவுவது இல்லை. வெளிநாட்டுத் தமிழர்கள் உட்பட!
இனப்பற்று என்பது குறுகிய மனப்பான்மை என்றால் உலகத்திலேயே தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தவிர மற்ற எல்லாருமே குறுகிய மனப்பான்மை படைத்தவர்களா? மற்ற இனத்தவர்களெல்லாம் அவரவர் இன அடையாளங்களோடு வாழும்பொழுது தமிழர்கள் மட்டும் தங்களுடைய இன அடையாளங்களைக் வெறுப்பது அவர்கள் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாக, அவர்களுடைய தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாக ஆகாதா என்பதை ஒவ்வொரு தமிழரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
உலகில் ஒவ்வோர் இனத்துக்கும் ஒரு மொழி, பண்பாடு, வரலாறு போன்றவை இருக்கின்றன. இனம் என்கிற ஓர் அடையாளத்தை நாம் புறக்கணிப்பதால் பெருமைக்குரிய இத்தனை அடையாளங்களையும் இழக்கிறோம். கூடவே நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகள், அவர்களின் சாதனைகள் எனப் பல அறிவுசார்ச் சொத்துகளையும் இழக்கிறோம்! சில ஆண்டுகளுக்கு முன்பு வேம்பு, மஞ்சள், பாசுமதி அரிசி முதலான பதினெட்டு விளைபொருட்களுக்கு அமெரிக்கா காப்புரிமை வாங்கியபொழுது அவற்றையெல்லாம் வழக்காடி மீட்க முடிந்ததே இங்குள்ள பல்வேறு இனங்களைச் சேர்ந்த முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டவைதாம் அவை என்பதை நிரூபிக்க முடிந்ததால்தான். அப்படி நிரூபிக்க முடிந்ததே, இன்றும் தம் இனப் பழக்கவழக்கங்களையும் அடையாளங்களையும் துறக்காத மக்கள் இங்கு இருப்பதால்தான். எனவே இனம் என்பது வெறும் குழு அடையாளத்தைத் தருவது மட்டும் இல்லை. கலை, அறிவியல் எனப் பல்வேறு துறைகளிலும் நம் முன்னோர்கள் என்னவெல்லாம் கண்டுபிடித்திருக்கிறார்களோ, எவ்வளவெல்லாம் சாதித்திருக்கிறார்களோ அந்த அறிவுசார்ச் சொத்துகளுக்கெல்லாமான வாரிசு உரிமையை நமக்குத் தருவதும் கூட!
அது மட்டும் இல்லை. இனம் என்பது இந்நாளில் ஒரு பன்னாட்டு அடையாளம் (International Identity). எல்லா இனத்து மக்களும் அவரவர் எல்லைகளுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருந்த வரை மொழி என்பது வெறும் ஊடகமாகவும், இனம் என்பது வெறும் குழு அடையாளமாகவும்தான் இருந்தன. ஆனால் எல்லா நாட்டு மக்களும், எல்லா இனத்து மக்களும் உலகின் எல்லா நாடுகளிலும் கலந்து வாழத் தொடங்கிவிட்ட இந்த உலகமயமாக்கல் காலத்தில் (Globalisation Era) நாட்டின் பெயரை விட இனத்தின் பெயரும் மொழியின் பெயரும்தான் ஒருவருடைய உண்மையான பன்னாட்டு அடையாளமாக விளங்குகின்றன!
அதுவும் இந்தியாவைப் பொறுத்தவரை இங்குள்ளவர்களுக்கு இன அடையாளம் என்பது எந்தக் காலத்திலும் இன்றியமையாதது. ஏனென்றால் உலகில் மற்ற நாடுகளுக்கெல்லாம் அந்தந்த நாட்டுக்கென்று மொழி, பண்பாடு, உணவுமுறை, ஆடைமுறை, வரலாறு முதலானவை இருக்கின்றன. ஆனால் இந்தியாவுக்கு அப்படி இல்லை. இங்குள்ள பதினான்குக்கும் மேற்பட்ட தேசிய இனங்களின் மொழியும், பண்பாடும், வரலாறும்தான் இந்தியாவின் மொழி, பண்பாடு, வரலாறு எல்லாம்.
மற்றபடி இந்தியாவுக்கென்று தனிப்பட்ட அடையாளம் எதுவும் கிடையாது. எனவே மற்ற நாடுகளில் வாழும் மக்கள் தங்களின் சொந்த இன அடையாளங்களை இழந்தாலும் அவர்கள் வாழும் நாட்டுக்கென்று இருக்கும் பண்பாட்டு, வரலாற்றுப் பின்னணி அவர்களின் அடையாளமாக நிலைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தியர் ஒருவர் அவ்வாறு தன் தாய்மொழியையோ இன அடையாளத்தையோ மறந்தால் அவர் பன்னாட்டு அளவில், சொந்த அடையாளம் (International Self Identity) எதுவுமே இல்லாத ஒருவராகத்தான் ஆகி விடுவார்.
தனித்தன்மை பேணுதல் (Character Maintenance) என்னும் பெயரில் நடை, உடை, பாவனை, தோற்றம், பேசும் முறை, சிந்திக்கும் முறை போன்ற சிறு சிறு அடையாளங்களைக் கூட விட்டுக் கொடுக்காமல் இருக்கும் இந்தக் காலத்தில் இப்படிப் பன்னாட்டு அடையாளமாகத் திகழும் இனத்தையும் மொழியையும் விட்டுக் கொடுக்கலாமா? தமிழ் இனம் சிந்திக்கட்டும்!

ஆக்கம்:இ.பு.ஞானப்பிரகாசன்.நெருடலுக்காக..

மலேசியத் தமிழ் நெறிக் கழக பத்துமலைக் கிளையின் ஏற்பாட்டில் குடும்ப ஒன்று கூடல் நிகழ்வு


உரையாற்றும் தமிழ்த்திரு அரசேந்திரன்

பொதுமை கோட்பாடு பற்றிப் பேசும் செல்வி பூவிழி

தமிழிசை பாடும் செல்வி அருள்நங்கை

அறிவியல் கடவுள்நெறி ஆய்வு செய்யும் செல்வி அருள்விழி

கவிதை இயற்றிப் பாடும் செல்வி தென்னரசி

தேசியத் தலைவர் திருமாவளவன்

கவிதை பாடும் செல்வன் இளஞ்சித்திரன்

சொல்விளக்கம் செய்யும் செல்வி நீதி மழலை மொழி

நிகழ்வில் கலந்து கொண்டோர்

தமிழிசைப் பாடும் செல்வி அருளினி

சொல்லாய்வு செய்யும் செல்வி சுடர்விழி

சொல்லாய்வு செய்யும் செல்வி கலைமதி

உரையாற்றும் இளஞ்செழியன்

கவிதை பாடும் செல்வன் அருளாளன்

கவிதைப் பாடும் செல்வி அமராவதி

சொல்விளக்கம் செய்யும் செல்வி அருங்கனி.

வரவேற்புரை செய்யும் இளைஞர் பகுதி தலைவர் செல்வன் அன்பழகன்

நிகழ்வில் கலந்து கொண்ட பொறுப்பாளர்கள்

நிகழ்வை வழிநடத்தும் செயலர் செல்வன் சேரன்

குறள் பாடும் செல்வன் அருளாளன்

மலேசியத் தமிழ் நெறிக் கழக பத்துமலைக் கிளையின் ஏற்பாட்டில் குடும்ப ஒன்று கூடல் நிகழ்வு 21.08.2010 ஆம் நாள் இரவு 8.30 அளவில் திருமாலனார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

குடும்ப உறுப்பினர்கள் தாமாக உணவு சமைத்து பகிர்ந்து உண்டனர். நிகழ்வை இயக்க இளையோர்கள் வழிநடத்தினர். தேசிய உதவித் தலைவரும் கிளைச்செயலருமாகிய இளஞ்செழியன் சிறப்புரை வழங்கினார். தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் அவர்கள் இயக்க செயல் திட்டங்களை விரிவாக விளக்கி பயனுறும் வகையில் செயல்படும் அணுகுமுறைகளையும் தெளிவுறுத்தினார். இயக்க மாணவர்கள் பல்வேறு படைப்புகளைப் படைத்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.